செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

பகுத்தறிவு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.

தலைவன்

யார் தலைவன் தெரியுமா?

அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும் 

உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும் 

பெற்றுத் தருபவனே 

உண்மையான தலைவன். 

சிங்கம் சிங்கம்தான்

எத்தனை காலம் 

தந்திரம் செய்து 

பிழைத்து வந்தாலும்

நரியால் ஒருநாளும் 

சிங்கமாகிட முடியாது 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மனைவி

அன்பே அன்பே 

அழகே ஒளியே

அமுதே நீயே

இன்ப ஊற்றே 

இளந் தென்றல் காற்றே 

இளமை விருந்தே

இசையின் உருவே

நான் வரமாய்ப் பெற்ற

வாழ்வே நீயே

உன்னை வருணிக்கவே

வார்த்தை இல்லையே


அன்பே அன்பே 

அழகே நீயே

வெகுளிப் பெண்ணே

வெள்ளை மனமே

கொள்கை கொண்ட

குழந்தைத் தனமே

என்னை வாழ்விக்கவே 

வந்த வாழ்க்கைத் துணையே


அன்பே அன்பே 

அழகே ஒளியே 

தங்க நிறமே

எந்தன் உயிரே 

தாரமாய் வந்தாய் 

தளிர்நடை பயின்றாய் 

தாயாய் மலர்ந்தாய்

உன் தாய்மை அன்பில்

உருகிப் போனேன்

உனக்கே உனக்கே

என்றும் வாழ்வேன் 


அன்பே அன்பே 

அழகே அமுதே

வரமே நீயே

உன்னைப் பெறவே

என் புண்ணியம் என்னவோ

உன் பாசத்தாலே 

நான் நெகிந்தே நெகிழ்ந்தே

உருகிப் போனேன் 

உன் அக்கறை கண்டு 

நான் அசந்து போனேன் 

உன் அழகைக் கண்டு 

நான் சொக்கிப் போனேன் 


அன்பே அன்பே 

அழகை ஒளியே

தங்கச் சிலையே

தாமரை இதழே

மல்லிகை மணம் நீ

தேனின் சுவை நீ

வானின் மழை நீ

மாலைத் தென்றல் நீ

திகட்டாத இன்பம் நீ

எந்தன் உயிரே நீ

எந்தன் உலகம் நீ

எந்தன் வாழ்வே நீ

எந்தன் வசந்தம் நீ

எந்தன் சுகமே நீ

எந்தன் சொர்க்கம் நீ

அன்பே அன்பே 

அழகே ஒளியே 

என்னை வாழ்விக்கவே 

வந்தவள் நீயே

அன்பே அன்பே 

அழகே ஒளியே

வெள்ளி விழா விழிப்புணர்வு பாடல்

நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


நல்லது கெட்டது அறிந்தவன் நீ

நாலு விவரம் தெரிந்தவன் நீ

நாற்பது வயதைக் கடந்தவன் நீ

நாசூக்காக சொல்லுறேன் கேட்டுக்க நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


அழகான குடும்பம் உனக்கிருக்கு

பழகிய சமூகத்தில் மதிப்பிருக்கு

நீ செய்வ தெல்லாம் உன் குடும்பம் பார்த்திருக்கு

வேண்டாத வம்பிருந்தால் நீ விலக்கு


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


பொறுப்புகள் கடமைகள் நிறைந்தவன் நீ

வெறுப்புகள் இருந்தால் விலக்கிடு நீ

தாழ்வான எண்ணத்தைத் தவிர்த்திடு நீ

பள்ளிக்காலக் காதலை நீ

அழகான கனவென்று கடந்து வா நீ

அழகான கனவென்று கடந்து வா நீ 

தனிமரம் இல்லை நீ

தலைமுறை நீயே

உன் பொறுப்பை உணர்ந்து செயல்படு நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


உணர்ச்சி நெருப்புக்கு உருவம் கொடாதே 

கடந்த காதலைக் காயப்படுத்தாதே 

அழகான வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே

அர்த்தமுள்ள வாழ்வைக் கெடுத்துவிடாதே

நல்லது சொல்லுறவன் உன் நண்பன் 

நல்லபடி கேட்டுக்கிட்டா நீயே என் நண்பன் 


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே

அதிரத்னா

அதி அதி அதி அதிரத்னா 

ஒளி ஒளி ஒளி ஒளிரத்னா 

ரத்தினம் நீ

மாணிக்கம் நீ

வைரம் நீ

உன் அங்கமெல்லாம் தங்கம்

நீ இருக்குமிடமெல்லாம் மகிழ்ச்சி தங்கும்

நீ வளர்ந்து வரும் சிங்கம்

உன் பெருமை விளங்கும் எங்கும்

நீ இமயம் தீண்டி உயர வேண்டும் 

நீ வானம் தாண்டி பறக்க வேண்டும் 

உனக்கே தனி உலகம் படைக்க வேண்டும் 

தரணியை நீயே காக்க வேண்டும் 

அதி அதி அதி அதிரத்தினம்

ஒளி ஒளி ஒளி ஒளிரத்தினம்

மனைவி

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

தமிழே

அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உணர்ச்சித் தீப்பிழம்பே

ஊக்கம்தரும் நற்றமிழே

எழில்மிகுந்த இயற்றமிழே

ஏற்றமுள்ள நாடகமே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் உதிரத்திலே உதித்தேன்

உன் மடியினிலே தவழ்ந்தேன்

உன் அருகினிலே நடந்தேன்

உன் ஆற்றல்தனை வியந்தேன் 

உன் அரவணைப்பில் வளர்ந்தேன்

நீ சுவை குன்றாத தேன்

உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே

தாயே தமிழே உன்னை மறவேனே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


கட்டிக் கரும்பே நீ

கதிர் தரும் ஒளியே நீ

கன்னித் தமிழே நீ

கணினித் தமிழே நீ தானே 

சங்கத் தமிழே நீ

தங்கத் தமிழே நீ

நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ

நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ

பக்தித் தமிழாய் நீ

பாகுபாடு களைந்தாய் நீ


காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ

கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ

தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ 

தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ


புதுப்புது யாப்பு தந்தாய் நீ

புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ

புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ

கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே 


உலகினில் மூத்த முத்தமிழே

உலகம் முழுவதும் உன் ஆட்சியே

உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே

உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே 


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் பெருமை கண்டு வியக்கிறேன்

உன் அருமை கண்டு மயங்குகிறேன்

உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்

உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே

சுயபரிசோதனை

இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.

காலம்

நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)

தந்த இறந்த காலம் 

உண்மையில் இறந்த காலமல்ல... 

அதுவும் நம் எதிர்காலமே...

அரசியல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள் 

அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...

உண்மையில், 

அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...

அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...

அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...

ஆகையால்,

அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...

சமூக விலங்காகிய மனிதன் 

எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...

இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...

அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...

அறிவுடைய மனிதர்கள் குறைவு...

அவர்களின் வாக்குகள் குறைவு...

அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...

ஆக,

அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...

மிஸ்டர் பொதுஜனத்திற்கு 

யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு

யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...

நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...

ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...


அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம். 

வெறுப்பு

நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது. 

மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம். 

ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

வெள்ளி விழா அழைப்பிதழ்

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி 
சுந்தரராஜபுரம் 

2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்

வெள்ளி விழா அழைப்பிதழ் 

நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி

இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம் 

வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் 

தலைமை :

திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் 

சிறப்பு விருந்தினர்கள் 

1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.

2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)

3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.

4) திருமதி.               அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.

சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள் 

முன்னாள் மாணவர்கள் 

1.திரு.பெ.இலட்சுமணன்  

கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்

2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர்

3.திரு.மு.திலகராஜன் 

மத்திய தொழிலக பாதுகாப்பு படை

4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர் 

5.திரு.மா.மாடசாமி 

மகா பிராய்லர்ஸ் உரிமையாளர் 

நன்றியுரை:

திரு.தி.முத்துராஜ் Trains Manager, 

திருநெல்வேலி 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் 

திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர் 

GHSS சங்கரலிங்கபுரம்


தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவண் 

முன்னாள் மாணவர்கள் 

வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து

எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...


"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 

நூறு தடவை சொன்ன மாதிரி" 

என்ற ரஜினி ஸ்டைலோடு 

என்றும் பசுமை மாறாமல் 

எங்கள் நினைவில் நிற்பவரே!

அடிப்படைக் கணக்கை 

அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!

ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 

போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 

வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!

எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !

ஈடு இணை இல்லையே உமக்கு !

காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 

வள்ளல் கர்ணனின் கொடை போல 

தவமின்றி கிடைத்த வரமே 

எமது சூப்பர் ஸ்டார் 

கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 

வருக வருக என வரவேற்பதில் 

உள்ளம் மகிழ்கிறோம்.

வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. கலைச்செல்வி அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி அவர்கள்


ஆனைமுகனின் தீவிர பக்தை இவர்!

முகத்தில் புன்னகை நிறைந்த மழலை இவர் !!

மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 

முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!

முழுமையான அன்பைக் காட்டி,

எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!


கடலில் விளைந்த முத்து போல 

வயலில் விளைந்த நெல்மணி போல

மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!

எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக

வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 

பெருமைக்கு உரியவர்

எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!

சமூக அறிவியல் ஆசிரியை 

திருமதி. கலைச்செல்வி அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!


வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி

தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்

மணியை ஈன்றதால் மாமலையும்

முத்தை ஈன்றதால் பெருங்கடலும்

அகிலை ஈன்றதால் அடர்வனமும்

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்

பெருமை அடைவது போல

உம்மைத் தமிழ் அன்னையாகப்

பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!


அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ

அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ

தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!

புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 

இலக்கண வித்தகரே!!!

தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 

எம் அன்னையே!!!

அர்ச்சுனனின் வில்லைப் போலவும்

கர்ணனின் கவசம் போலவும்

கம்பனின் கவிநயம் போலவும்

வள்ளுவனின் வாக்கு போலவும்

எமக்கு அருள் வாய்த்த தாயே!!!

எம் உயிரே

எம் நினைவே

எம் சுகந்தமே

எம்மை வாழ்வித்த தங்கமே


திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பேருவகை கொள்கிறோம்!!!

வெள்ளி விழா நிகழ்ச்சி நேர அட்டவணை

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம் 

2000-2001-ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகளும் கல்வியமுது ஊட்டிய ஆசிரியர்களும் சந்திக்கும் வெள்ளிவிழா 

இடம்:அரசு(ஆ.தி.ந)மேல்நிலைப்பள்ளி,சுந்தரராஜபுரம்                          நாள்: -05-2026

நேரம்: காலை 9.00-4.00 மணி

நிகழ்ச்சி நிரல் 

  1. முன்னாள் மாணவர்கள் வருகை-நேரம்: காலை 9 மணி
  2. ஆசிரியர்களை வரவேற்றல்-நேரம் :காலை 9.30 மணி
  3. குத்துவிளக்கு ஏற்றுதல் -நேரம்:காலை 9.40 மணி
  4. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுதல்- நேரம்:காலை 9.50 மணி
  5. வரவேற்புரை -காலை 9.55 முதல் - 10.20 வரை( சிறப்பு விருந்தினர்கள் 5 பேருக்கு தலா 5 நிமிடங்கள் வீதம் 25 நிமிடங்கள்)
  6. ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல் நேரம்: காலை 10.20 முதல் 10.25 வரை
  7. தலைமை உரை: தலைமை ஆசிரியர் -நேரம்: காலை 10.25 மணி முதல் 10.35 வரை
  8. ஆசிரியர்களுடன் வகுப்பு வாரியாக ஒளிப்படம் எடுத்தல் நேரம்: காலை 10.35 முதல் 10.45 வரை
  9. தேநீர் இடைவேளை நேரம்:காலை 10.45மணி முதல்-11.00மணி வரை
  10. சிறப்புரை நேரம்: காலை 11.00மணி முதல் 11.50 மணி வரை(முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துதல்)  (5 மாணவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் மொத்தம் 50 மணித்துளிகள்)
  11. ஆசிரியர்கள் ஏற்புரை-பிற்பகல் 11.50 மணி முதல்.- 12.10மணி வரை (திருமதி. வயலட், திருமதி. கலைச்செல்வி, திரு. முருகானந்தம் அவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் 30 நிமிடங்கள்)
  12. நினைவுப்பரிசு வழங்குதல் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்) நேரம்:நண்பகல் 12.10 முதல்.-12.30 வரை
  13. மதிய உணவு விருந்து- நேரம்: நண்பகல் 12.30 மணி முதல்.- 2.15 மணி வரை 
  14. மாணவர்கள் கலந்துரையாடல் நேரம்: 02.15 பி.ப.- 03.15 பி.ப.
  15. தேநீர் இடைவேளை நேரம்: பிற்பகல் 03.15 முதல்-3.25 வரை
  16. மாணவர்கள் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்தல் நேரம்: பிற்பகல் 03.25 முதல் 04.00 வரை. 2000-2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்!. 

சனி, 7 பிப்ரவரி, 2026

மேன்மக்கள்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு

எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 

துஞ்சுவதே மாந்தர் இயல்பு

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு

வாழ்க்கை

வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.

சுதந்திரம்

இனிய காலை வணக்கம் 


சுயக் கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்!

மற்றவை யெல்லாம் 

மாயை தரும் போதை.

தெளிவு

தெளிந்த வானம்

காட்சிக்குச் சிறந்தது

தெளிந்த நீர் 

பருக ஏற்றது

தெளிந்த மனம்

வாழ்க்கைக்கு நல்லது

நான் பெற்ற இன்பம்

இறையின்பம் வேண்ட 

வேண்ட கிட்டும்!!!


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 

நான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

-திருமந்திரம்

துன்பமே இன்பம்


இனிய காலை வணக்கம் 

அஞ்சத் தகுந்த கடலே

அதிசயங்கள் நிறைந்தது!

ஆர்ப்பரிக்கும் அருவியே

அழகு நிறைந்தது!!

கடப்பதற்கரிய நெடுங்காடே

பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!

ஏறுதற்கரிய பெருமலையே 

எழிற்காட்சி தருவது!!!

எனில்,

துன்பத்தைக் கடந்த பின்னே

இன்பமே வந்தெய்தாதோ?

உழவு

இனிய காலை வணக்கம் 

அகல உழுவதை விட

ஆழ உழுவது நன்று

நிலத்திற்குப் பொருந்தும்

பொன் மொழி

மனத்திற்கும் பொருந்தும்.



உறுதி

இனிய காலை வணக்கம் 

மழை பொய்த்த காலத்தில் 

நெற்பயிர் தன்னை

வரகாக மாற்றிக் கொள்ளாது.

மழை மிகுந்த காலத்தில்

வரகு தன்னை

நெற்பயிராக மாற்றிக் கொள்ளாது.

அதுபோல, 

கேடு வந்து உற்ற போதும் 

சான்றோர் தீயோர் ஆகார்.

வாழ்வு வந்து உற்ற போதும் 

தீயோர் சான்றோர் ஆகார்.

உளவியல்

இனிய காலை வணக்கம் 

சூழலியல் உளவியலையும்

உளவியல் நமது வாழ்வியலையும்

நிர்ணயிப்பதால்

சூழலியலை மாற்றுங்கள்!!

அல்லது அதற்கு ஏற்ப

உங்கள் உளவியலை மாற்றுங்கள்!!!

வாழ்க்கை மாறும்!

வாழ்வு மலரும்.!!

தன்னம்பிக்கை

பிறர் ரசிக்கவில்லை என்பதற்காக

மலர்கள் வாடுவதில்லை

பிறர் வரவேற்கவில்லை என்பதற்காக

கதிரவன் இருள்வதில்லை 

பிறர் தூக்கி விடவில்லை என்பதற்காக 

அலைகள் எழாமலில்லை

தன்னை நம்பி

தன்னம்பிக்கை கொண்டு 

மதிப்பை மரியாதையை

பாராட்டை எதிர்பாராமல்

எதிர்நடை போடு


தன்னம்பிக்கை

இனிய காலை வணக்கம் 

சிறகுகளை நம்பி

பறவை உயரப் பறக்கிறது 

துடுப்புக்களை நம்பி

மீன் ஆழ நீந்துகிறது 

கால்களை நம்பி

கானில் மான் ஓடி மறைகிறது 

அதைப் போல 

உன்னை நம்பு

உண்மையை நம்பு

உன் உலகம் 

உன் ஆளுகைக்குள் வரும் 

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை மிகவும் எளிதானது. 

மனிதன் தன் ஆசைகளை அதிகரித்து

வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறான்.

ஒரு கட்டத்தில் வாழ்வின் நோக்கத்தை மறந்து 

வாழும் முறையைக் கைவிட்டு

அடர்வனத்தில் சிக்கித் 

தனித்து துயரும் பேதைபோல் 

கலங்குவான்.

தேவைகளைச் சுருக்கிச் 

சிக்கல்களைக் குறைத்துக் கொள்.

எளிய வாழ்வே இன்பம் தரும்!

எளிய வாழ்வே இறைமை தரும்!!

அரசியல்

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் போல திரைக்கவர்ச்சி இருக்கு. லஞ்சம் ஊழலால் இருபெருந்திராவிடக் கட்சிகளாலும் எவ்வித நன்மையும் பெறாத, ஏழை எளிய, புறக்கணிக்கப்பட்ட, சோர்ந்துபோன, விளிம்புநிலை மக்கள் தனக்கொரு நல்லகாலம் வரவேண்டும் என்பதையும் தாண்டி, நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கணும்னு சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தான்மட்டும் எப்படியாவது நல்லா இருக்கணும்னு நினைக்காதவர்கள். அதனால்தான் யாரையும் அண்டிப் பிழைக்காமல், எந்தக் கட்சிப் பிரதிநிதியிடமும் உதவி கேட்டு நில்லாமல் தன்மானத்தோடு ஏழைப் பிழைப்பு நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட பொதுமக்களின் கண்களுக்கு நடிகர் விஜய் தலைவராகத் தெரிகிறார். இது அரிதான நிகழ்வு. இதற்கு ஏற்றாற்போல், பொதுமக்களிடம் சென்று நம்பிக்கைகளைப் பெற வேண்டிய அரசியல் கட்சிகள், நடிகர் விஜய்யிடம் சென்று விமர்சித்துக் கொண்டு இருக்கின்றன. பொதுமக்களுக்குப் பகுத்தறிவை விட இறை நம்பிக்கை அதிகம்; அறிவை விட நம்பிக்கை அதிகம். 

சுயநலத்தைவிட பொதுநலம் அதிகம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து!

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை 

சாலைப் பயணம் போன்றது

மேடும் உண்டு 

சரிவும் உண்டு 

அடர்வனமும் உண்டு 

வெட்ட வெளியும் உண்டு 

பாலையும் உண்டு 

பசுஞ்சோலையும் உண்டு 

சுடும் வெயிலிலும் 

பெருமழையிலும் 

கடுங்குளிரிலும் 

தென்றல்காற்றிலும் 

கடுங்காற்றிலும் ஊடறுக்கும் 

சாலைவழித் தடம்போல 

வாழும் வாழ்க்கையில் 

தடம் பதிப்போம்!

களை

களை பறித்த பிறகுதான் 

தோட்டத்திற்குக் களையே (அழகு)

வருகிறது. 

பொறாமை பேராசை

பகை சினம் இவற்றை 

விலக்கிய பின்புதான் 

மனம் அமைதி எய்துகிறது.

முகம் பொலிவாகிறது.

அனுபவம்

கடந்து போன வாய்ப்பு

எதிர்வரும் வாய்ப்பைத்

தவறாமல் பற்றுவதற்கான

கருவி. 

அனுபவம் தந்த பாடத்தை

மறவாமல் இருப்பதே

வெற்றி(க்) காண(ன) வழி!!!

பற்றுறுதி

ஒன்று பிடித்து விட்டால்,

ஒன்றைப் படித்து விடலாம்!

ஒன்றைப் படித்து விட்டால்

ஒன்று பிடித்துப் போகும்!! 

ஒன்றைப் பிடித்துப்போகும் அளவுக்குப்

படித்துச் சுவைக்க வேண்டும்!!! 

பிடிக்காத ஒன்றும் 

படிக்கப் படிக்கப் பிடித்துப் போகும் !!!

படிப்பிலே சுவையுண்டு!

படிப்பவர்க்கே அது சுவைக்கும்.!

அது தனி உலகம் !!

ஏழைக்கும் அது கிட்டும் !!!

எவருக்கும் அதுதரும் சொர்க்கம்.!!!

பகுத்தறிவு

அறிவுக்குப் புலப்படாத

அம்சங்களை, 

அந்தணர் திணித்த வழிமுறைகளை,

அப்படியே நம்பித் தொலைக்காதே-மனமே!

உய்த்துணர மெய் உண்டு.

உணர்வாலே, உள்ளுணர்வாலே, 

உளப்பகுப்பாலே உய்த்துணரத் தலைப்படுவாய்!!

மூடநம்பிக்கை உன்னை முடமாக்கும்!

முடவனே நீ ஆனாலும் ,

நல்லதை மட்டுமே நீ எண்ணினால்,

உன் முடமும் உனக்குத் துணையாகும்!!

கடந்த கால கவலைகளைத் 

தூக்கித் திரியாதே?

நீ கோவேறு கழுதையில்லை...

வெற்றித் தடம் பதிக்கும் குதிரை,

வீரனை மட்டுமே சுமக்கும்!!!

நல்லதை மட்டுமே நினைக்கும்!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புதிய ஆண்டு இது...

புதுமைகள் நிறைந்த ஆண்டு இது...

புதையல்கள் நிறைய புதைந்திருக்கு...

பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ள,

புதிய புதிய முயற்சிகள் வேண்டும் ...

புத்தம் புதிய வழிகள் வேண்டும் ...

புதிய புதிய நம்பிக்கை வேண்டும் ...

புதிய புதிய சிந்தனை வேண்டும்... 

புதிய நல்ல மனம் வேண்டும் ...

கண்டதையும் கொட்டி வைக்க, 

மனம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல...

காற்றைக்கூட அளவுதாண்டி 

ஊதிவிட்டால் உடைந்து விடும்! 

மன அழுத்தம், மனக்கவலை, 

மனச்சோர்வு, மனப்பிரம்மை கொள்ளாமல்,

மன மகிழ்ச்சி, மன நிறைவு, 

மன வலிமை, மன வளத்தை வளர்த்து

மனித வாழ்வின் அத்துணை 

அம்சங்களையும் அனுபவித்து வாழ,

புத்தாண்டு காத்திருக்கு...

எதிர்வரும் காலம் முழுதும் உங்களுக்கு!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

விந்தையான உலகம்

விந்தையான உலகம் -இங்கு!

வேடிக்கையான மனிதர் கூட்டம்!!

பண்டுதொட்ட உயர் பண்பாட்டுக்கே 

இங்கு பழமை என்ற அவமானம்!!!

நேர்மைக்கு இங்கு 

நல்ல நேரமில்லை!!!

உண்மைக்கு இங்கு 

உற்ற துணையில்லை!!!

எளிமை இங்கு நகைக்கப்படுகிறது!!!

ஊக்கம் இங்கு ஒதுக்கப்படுகிறது!!!

ஒழுக்கம் இங்கு வெறுக்கப்படுகிறது!!!

நன்மை இங்கு நசுக்கப்படுகிறதுகிறது!!!

சான்றோர் இங்கு சிதைக்கப்படுகிறதுகிறது!!!

சரித்திரம் இங்கு கிழிக்கப்படுகிறது!!!

அறிவு இங்கு அழிவுப் பாதையில்...

அன்பு இங்கு நடிகர் வேடத்தில்...

இன்பம் இங்கு 

கானல்நீர் தோற்றத்தில்...

மனக் கவலைகள் கடல்போல் பொங்குகிறது

இந்த நிலை மாற வேண்டும் 

எழில் மிகு பண்புகள் வேண்டும் 

ஏற்றம் மிகு வாழ்வு வேண்டும் 

நேர்மை மிக்க உலகம் 

நிதானித்துப் பிறக்க வேண்டும் 



புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டின் முதல் நாள் இன்று 

முதல் அடி

நிதானமாக

கம்பீரமாக 

நம்பிக்கையுடன்

சிறுசிறு இலக்குகளுடன்

சிறு புன்னகையுடன் 

தொடர்ச்சியாக

அயர்ச்சி இன்றி

ஆரவாரமின்றி 

வலுவாக 

முன்னேறிச் செல்வோம்!!!

திட்டமிடு!!!

தெளிந்துசெய் !!!

துணிந்துசெய் !!!

தொடர்ந்துசெய் !!!

புதிய உலகம் 

உனக்காகவே உதயம்!!!

வாழ்த்தும் என் 

அன்பு இதயம்!!!

இனிய புத்தாண்

டு 

வாழ்த்துக்கள்!!!

ஒப்பீடு

மற்றொருவரோடு ஒப்பிட்டுப் பார்த்து உயரத்தைக் கூறாதீர். அது உண்மையான உயரம் கிடையாது. நேற்றோடு ஒப்பிடுங்கள். நேற்று உங்களுடைய முயற்சி, பயிற்சி, முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகியவற்றோடு ஒப்பிட்டால் இன்று உங்கள் உயரத்தைக் கணக்கிடலாம். இப்படி ஒப்பீடு செய்வதால் பொறாமை, கவலை, பதற்றம் ஏற்படாது. தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வளர்ச்சி தானாக உண்டாகும்.

தேர்தல்

உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் நம்பிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நாம் பெரும்பாலும் முட்டாள்தனமான முடிகளையே எடுக்கிறோம். அது தேர்தல் நாளில் நம் சந்ததிகளின் வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நம்மில் பலரும் உணரவில்லை. இது நாம்பெற்ற சாபம்!!! நம்மை நாமே அடிமை சாசனமாக ஒப்படைத்துவிட்டு ஆண்டாண்டு காலமாக கூப்பாடு போடுவதில், என்ன நியாயம் இருக்கிறது? ஊழலை விரும்பாத மக்களால், ஊழல்வாதிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? நெல்மணியை விளைவிப்பவன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்பது எப்படி புத்திசாலித்தனமான இருக்க முடியும்?

எதிரி

எப்போதும் நியாயமாக

நடந்து கொள்வது

என்று முடிவெடுத்த பின்பு

எதிரிகளை நேருக்கு நேர் 

சந்தித்துதான் ஆக வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் பொருள்.

சோதனை

தாங்க முடியாத 

சோதனைகளே 

ஒருவனை 

வலிமையானவனாக 

மாற்றும் 

அஞ்சாமை

அச்சம் ஒருவனின் 

அழிவுக்கான நெருப்பு. 

அஞ்சாமை ஒருவனின் 

வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் 

வழிசெய்யும் திறவுகோல். 

அச்சம் உள்ள விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடப்பட்டே தீரும். 

அஞ்சாத விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடியே வாழும். 

நாம் இரையா? 

நமக்கு இரையா? 

என்பதை நாம் கொண்ட 

அச்சமே தீர்மானிக்கும்!!!

அஞ்சாத நெஞ்சத்தோடு 

திமிறி நிற்போம்!!!

திணிப்பு

ஒருவன் தன்னுடைய 

விருப்பு வெறுப்புகளை 

தன்னை நம்பி உள்ள 

தன் குடும்ப உறுப்பினர்களிடம் 

திணிப்பதும் 

ஒருவகையான வன்முறையே!!! 

தன்னைச் சுற்றி உள்ள 

நபர்களைவிட 

தன்னைத் தானே 

பலம்வாய்ந்த மனிதன் 

என்று எண்ணும்போது 

தன்னுடைய ஈகோவோடு 

தன்னுடைய அசுர குணங்களும் 

இயல்பாகவே வளர்கின்றன. 

தன்னைப் போலவே 

பிறரையும் நேசிப்போம். 

ஒவ்வொருவருக்கும் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் 

இருக்கும் என்பதை உணர்ந்து 

அவற்றில் நம் விருப்பு -

வெறுப்புகளைத் திணிக்காமல் 

இருப்பதே இறைக்குணம்.

வாழ்க்கை

கனவுகளும் லட்சியங்களும் நடைமுறை உலகிற்குப் புறம்பாக இருந்தால் ஏமாற்றங்களும் தோல்விகளுமே பரிசாகக் கிட்டும். வானவில்லை இன்னும் வளைத்து என் வீட்டுக்குள் கொண்டு வருவேன் என்பவனின் கனவு எப்படி ஈடேறும்? இல்லாத ஒன்றைப் பிடித்து ஏங்குவதை விடுத்து எதார்த்த உலகில் உலகானுபவங்களை ஏற்றுக்கொண்டு மனமுறிவின்றி வாழ்வதே வாழ்க்கை. 

மகிழ்ச்சி

எவருக்கும் கெடுதல் செய்யாமல் நேர்மையான வாழ்பவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது. 

அனுபவம்

அதிக வலிகளை 

அனுபவித்தவரிடம் 

நிதானமும் பொறுமையும் 

விட்டுக்கொடுத்தலும் 

நிச்சயம் இருக்கும். 

நீ நான் என்ற பேதமோ 

பிறர்குறை காணும் 

அரையறிவோ 

நிச்சயம் இராது.  

வாழ்க்கை

பனிவிழும் மல்லிகைத் தோட்டத்தின் நடுவில் நிறைந்த நறுமணம் மனதை மயக்குவது போல வாழ்க்கையின் சுகானுபவங்களில் சிலபொழுதேனும் சொக்கித் திளையுங்கள்

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு 

வெள்ளைக் காகிதம். 

வண்ணம் தீட்டுவதும் 

கிறுக்கி எறிவதும் 

நம் விருப்பம். 

திருத்தி எழுத 

சில சந்தர்ப்பங்கள் 

கிடைத்தால் விரக்தியில் 

கிறுக்கிவிடாதீர்கள் 

சிந்தனை

அறிவைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

பொருளைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

பொருளைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

அறிவைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

இரண்டும் இல்லாதவர்கள் 

அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை வசந்தமாகும். 

நட்பு கவிதை

அருமை நண்பர்களைப் பிரிந்து 

எத்தனை காலம் கழித்தோம்!!

எத்தனை இடைவெளியில் கிடந்தோம்!!

தத்தித் தத்தி நடந்தோம்!!

எத்தனை தடவை விழுந்தோம்!?

எத்தனை தடவை எழுந்தோம்!?

எத்தனை எத்தனை இழந்தோம்!!

வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!!!

இன்னும் எத்தனை தயக்கம்?

இன்னும் எத்தனை கலக்கம்?

எத்தனை ஏற்றம்!

எத்தனை இறக்கம்!!

அத்தனையும் நமக்கே!!!

நம்மால் முடியும் .

எல்லாவற்றையும் கடந்தே நிற்போம்.

வென்றே நிற்போம்!!!

மனைவி கவிதை

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

பொங்கல் வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிப்புப் 

பொங்கலைப் போல 

வாழ்க்கையில் இன்பம் 

பொங்கட்டும். !!!

உங்கள் இல்லங்களிலும் 

அன்பே வடிவான 

உங்கள் உள்ளங்களிலும் 

வாழ்வும் வளமும் 

தங்கட்டும்.!!! 


நீங்கள் தான் கிங்

 ஐயாயிரம் வெவ்வேறு 

செயல்களைச் செய்வதிலே சிறப்பில்லை 

ஒரே செயலை 

ஐயாயிரம் முறை செய்வதே 

சிறப்பு தரும். 

சுவரில் 

ஐயாயிரம் இடங்களில் குத்துவிட்டாலும் 

சுவர் உடைவதில்லை. 

ஐயாயிரம் குத்துகளை 

ஒரே இடத்தில் விட்டால் 

சுவர் உடைந்து தூளாகும். 

உங்கள் திறமை என்னவோ 

அதைக் கண்டுபிடியுங்கள். 

அதில் ஐயாயிரம் முறை 

முயற்சி செய்து பாருங்கள். 

பிறகு நீங்கள் தான் கிங். 

வாழ்த்துக்கள் 

சுயபரிசோதனை

சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல் 

விட்டுவிட்டால் மனச்சாட்சியைக் கூட 

ஏமாற்றி விடலாம் என்பதை 

சுயபரிசோதனை செய்யாத காலங்களில் 

உணர்ந்து கொண்டேன். 

அது என் பொறுப்புகளில் இருந்து 

என்னை விடுவித்து கொள்ள 

பிறர் மேல் பழி போட 

நான் செய்த தந்திரம்தானே!!!

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம்

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம் 

கதை மாந்தர்கள்: 

தினேஷ், கமலேஷ்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள்

சுரேஷ்: தினேஷின் தந்தை 

தலைமை ஆசிரியர் 

கண் மருத்துவர் 

காட்சி -1

இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சங்கரலிங்கபுரம் 

(தினேஷும் கமலேஷும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சங்கரலிங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் வழக்கம்போல கமலேஷ் காலை எட்டு முப்பதுக்கு பள்ளிக்கூடம் வந்து விட்டான். நண்பன் தினேஷை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் வராதது கண்டு ஏமாற்றம் அடைந்தான்.

முதல் பாட வேளை முடிந்து இரண்டாம் பாட வேளை தொடங்கியிருந்தது. அப்போது தினேஷ் அவனுடைய அப்பா சுரேஷ் உடன் வந்திருந்தான்)

கமலேஷ்: (ஓடி வந்து) என்னடா தினேஷ்... என்னடா ஒரு மாதிரி இருக்க...

(தினேஷ் பதில் எதுவும் கூறவில்லை)

தலைமை ஆசிரியர்: என்ன தினேஷ்? ஏன் லேட்டு? ஏன் சோர்வாக இருக்கிற? என்ன ஆச்சு? 

சுரேஷ் (தினேஷின் தந்தை): பள்ளிகூடம் போக பிடிக்கலனு அழுகிறான் சார்...

தலைமை ஆசிரியர்: ஏன் தினேஷ்? நீயும் உன் நண்பன் கமலேஷும் இந்த பள்ளிக்கூடத்திலேயே சிறந்த மாணவர்கள். உன் நண்பன் கமலேஷ் காலையிலேயே பள்ளிக்கூடம் வந்துட்டான். நீ மட்டும் ஏன் பள்ளிக்கூடம் வரப் பிடிக்கலைன்னு சொல்ற? ஏன் அப்படி சொல்ற? என்ன ஆச்சு உனக்கு? 

தினேஷ்: (வேற எங்கேயோ மாறி மாறி பார்த்தவாறு மெல்லிய குரலில்...) ஆங்... ஆங்... எனக்கு போன் வேணும்... எனக்கு போன் வேணும்...போன் குடுங்க... எனக்கு போன் வேணும்...(அழுகிறான்)

தலைமையாசிரியர்: (தினேஷின் தந்தை சுரேஷைப் பார்த்து) புகைப்பழக்கம் மாதிரி,  தினேஷ் திரைப்பழக்கத்தில் விழுந்துட்டான் போல இருக்கே...

தொடர்ச்சியா பல மணி நேரம் திறன்பேசியிலேயோ கணினியிலேயோ நேரம் செலவிடுறவங்களுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

தினேஷை கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க...

சுரேஷ்: சரிங்க சார். இப்பவே அழைச்சிட்டு போறேன்...

காட்சி-2

இடம்: கண் மருத்துவமனை, விருதுநகர். 

(மருத்துவர் தினேஷின் கண்களை பரிசோதித்தார்) 

மருத்துவர்: தினேஷோட கண்கள் ரொம்ப வறண்டு கிடக்குது. ஒரு வாரத்துக்கு மேல தொடர்ச்சியாக செல்போன் பார்த்தானா?

சுரேஷ்: டாக்டர் ஐயா... நானும் என் மனைவியும் பயர் ஆபீஸுக்கு வேலைக்கு போயிருவோம். இரண்டாம் பருவ விடுமுறை நாட்கள்ல ஏதாவது தேவை என்றால் எங்களுக்கு ஃபோன் போடுவதற்காக தினேஷிடம் செல்போன் கொடுத்துட்டு போவோம். எங்களுக்கு காலைல 8 மணியிலிருந்து நைட் 8 மணி வரைக்கும் வேலை இருக்கும். அந்த நேரங்கள்ல தினேஷ் கிட்டதான் செல்போன் இருக்கும். 

நாங்க வேலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அவன் போன கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சான்.  போன கொடுத்துட்டா அதை வாங்கிட்டு போய் ஒரு ஓரமா உக்காந்து கேம் விளையாடுவான். வீடியோஸ் பாப்பான். நானும் போன கொடுத்துட்டு தொல்லை விட்டா சரின்னு இருந்திட்டேன் டாக்டர். என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்?

(தினேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது போல சைகை செய்து கொண்டிருக்கிறான். )

மருத்துவர்: அவன பாருங்க. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல... எவ்வளவு சோர்வா இருக்கான்னு பாருங்க...

திடீர் திடீர்னு மாறிகிட்டே இருக்கிற காட்சிகளை இமைமூடாமல் பார்த்து பார்த்து கண்ணெல்லாம் வறண்டு போச்சு..  வறண்டு வறண்டு கண்ணில உள்ள நரம்புகள் எல்லாம் சேதம் ஆச்சு. கண்ணுல இருக்குற நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருக்கு. அதனால மூளை சோர்வு அடைஞ்சிருக்கு...

அவனோட மூளை மட்டும் இல்லை. இதயம் நரம்புகள் கூட பாதிக்கப்படுற நிலைமையில் தான் இருக்குது. 

(மருத்துவர், தினேஷோட இதயத்துடிப்பைச் சரிபார்க்கிறார்)

அவனுக்கு உடல் நடுக்கம், பயம், பதற்றம் எல்லாமே அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துருச்சு.

சுரேஷ்: ஐயோ டாக்டர்... நான் என்ன செய்வேன்... முன்னாடி எல்லாம் நல்லா படிப்பான்... வகுப்புல முதல் ரேங்க் எடுப்பான்... எல்லா நல்ல பழக்கங்களும் அவனிடம் இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு... அவன்கிட்ட செல்போனை கொடுத்து அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துட்டேன் டாக்டர்... எப்படியாவது என் மகனைச் சரிப்படுத்துங்கள் டாக்டர்...

மருத்துவர்: செல்போன்ல கேம் விளையாடுவது ரொம்பவே ஆபத்தானது. முதல்ல கண் பார்வை பாதிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். உடல் நடுக்கம் பயம் பதற்றம் எல்லாமே அதிகரிக்கும். 

அவசியமானதுக்கு மட்டும்தான் செல்போனை பயன்படுத்தணும். அதுவும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பயன்படுத்தணும். குறைவான நேரம் மட்டும்தான் செல்போனை உபயோகிக்கணும். இரவு நேரங்களில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் செல்போனை யூஸ் பண்ணவே கூடாது. அது கண்ணுக்கு பல மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். எத்தனையோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த மாதிரி குழந்தைகள் கிட்ட செல்போனை கொடுத்து கண்களைக் கெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர பெற்றோர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம் ஆயிடுச்சு. இந்த நிலைமை மாறனும். இதுக்கு பெற்றோர்கள் தான் முதல் காரணம். தேவையில்லாத நேரத்துல எல்லாம் செல்போனை குழந்தைகிட்ட கொடுக்காதீங்க. செல்போன்ல தேவையில்லாத எதையும் பார்க்க அனுமதிக்காதீங்க... உங்க குழந்தைகளை கண்காணிங்க. உங்க குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். 

சுரேஷ்: நன்றி டாக்டர். இப்பதான் எனக்கு புத்தி வந்திருக்கு. 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பாடலாசிரியர் மலர்மகேந்திரன்

Mysongs

எனது பாடல்கள் 

சிறப்புரை வழங்குபவர் திரு மா.மாடசாமி

திரு.மா.மாடசாமி அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மலையிலே பிறந்தாலும் 

சந்தனம் ...

மலைக்கு என்ன செய்யும்? 

கடலிலே பிறந்தாலும் 

முத்து ...

கடலுக்கு என்ன செய்யும்? 

வீணையிலே பிறந்தாலும் 

இசை ...

வீணைக்கு என்ன செய்யும்? 

நீங்கள் வரைந்த 

வண்ண ஓவியம் நாங்கள் ...

நீங்கள் செதுக்கிய 

அழகுச்சிலைகள் நாங்கள் ...

நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...

உளியின் வலியைப் 

பொறுத்துக் கொள்ளும் கற்களை...

நீங்கள்...

பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...

உங்களிடம் பட்ட கடனை 

எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???


பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..

வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...

பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...

ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை 

கொள்ளை கொண்டீர்கள்...!


பூவில் சுரந்த தேன் போல...

நாவில் தவழும் தமிழ் போல...

புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...

புன்னகை தவழும் மழலை போல...

உணவில் கரைந்த உப்பு போல...

கனவில் தோன்றும் தேவதை போல...

எங்கள் வாழ்க்கையைச் 

சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...


ஆனாலும் இப்போது...

அதிக ஸ்ட்ரெஸ் ஃபுல்லான ஜெனரேஷன் நாம தான்...

நேற்றைய பழமைக்கும் 

இன்றைய புதுமைக்கும் 

இடையில பிறந்து வளர்ந்தவங்க நாங்க...

நல்லா யோசிச்சா...

நம்ம கிட்ட இருக்கிற நல்ல பண்புகளே 

நமக்கு பிரச்சனையா அமைஞ்சிருது...

உண்மை, நேர்மை, 

உழைப்பு, உறவுகளை மதிக்கிறது என்று 

நாம கத்துக்கிட்ட எல்லா நல்ல விஷயங்களுக்கும் 

இந்த சமூகத்தில் இப்ப மதிப்பு இல்ல...

அதனால, இந்த குணங்களை எல்லாம் வச்சிக்கிறதா 

இல்ல விட்டுவிடலாமா அப்படின்ற குழப்பத்துல டென்ஷன் டென்ஷன்...

தீர்வு ஒன்று தான்...

நல்லதுக்கே காலம் இல்லங்க என்ற பழமொழியை ஓரமா வச்சிட்டு...

நம்மளுடைய நற்பண்புகளை 

கீழ போட்றாம கெட்டியா பிடிச்சுக்கணும்...

அதனால என்ன பிரச்சனை வந்தாலும் 

சமாளிக்கணுங்கிற மனநிலையை வளர்த்துக்கணும்....

இதுதான் ஒரே வழி...

ஏன்னா...

உண்மை நேர்மைய கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாமதான்...

உறவுகளை மதிக்கிற பழக்கத்தை கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்...

இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் நாம தான்...

நற்பண்புகள் தான் நம்மளுடைய தனித்துவம்...

அத எதுக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது...

இதையெல்லாம் கத்துக் கொடுத்த 

என்னோட ஆசிரியர்களுக்கு 

என் உளப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சிறப்புரை பெ.இலட்சுமணன்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணிய புலவன் பாரதியின் 

எண்ணப்படி ஆசிரியர் பணியை 

அர்ப்பணிப்போடு ஆற்றிய 

என் மனம் கவர்ந்த 

ஆசிரியர் பெருமக்களை வணங்கி 

என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...


எம் தமிழ் அம்மா... 

அம்மம்மா...

சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 

பாக்க மாட்டாங்க...

அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 

ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....

அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஒரே கலர் கலரா இருக்கும்!!!

அக்கறையோடு நடத்துவாங்க...

திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...

கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 

இலக்கணப் பயிற்சிதான்...!

அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 

செகண்ட் பேப்பர்ன்னு 

ரெண்டு பேப்பர் உண்டு...

கடின உழைப்பாளி..!

அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...

எழுத்துப்பிழை இருக்கான்னு 

-வரி வரியா பார்ப்பாங்க...

பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...

எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...

நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...

இவர்கிட்ட படிச்சவன் 

மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.

70 மார்க் எடுத்திருவான்...

டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...


எங்க வாய் சும்மா கிடக்காது...

அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.

அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால

உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...

சில நேரம் அழுதுருக்காங்க...

அதெல்லாம் அப்ப புரியல...

இப்பதான் அவரோட அருமை புரியுது...

இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 

நிறைய பேரு

டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...


அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 

என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...

எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....

நன்றி மா ... தமிழம்மா...!!!


அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...

எப்பவும் சிரிச்ச முகம்...

அன்பாலேதான் திருத்தணும்றது 

இவரோட பாலிசி....

எப்பவுமே படிக்காமல் திரியுற 

10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...

அதாவது எப்பவுமே பக்கத்துலயே 

உட்கார வைத்துக்கொள்வார்கள்...

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...

கிளிப்பிள்ளை மாதிரி...

நல்லா படிக்கிற மாணவர்களை 

பெருசா கண்டுக்க மாட்டாங்க...

அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...


அதிக ரசிகர் படை இவருக்கு தான்...

நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...

அது சுத்தம் இல்லன்னு தெரியும்...

இருந்தாலும்...

குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...

பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...


எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...

பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 

எங்க டீச்சரு...

ஆனைமுகனே 

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே 

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா 

இந்த ஏழை முகம் பாருமையா 

அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 

எல்லாரையும் சொல்ல வச்சு 

பாஸ் பண்ண வச்சவங்க...


ஒரு இடத்தில் உட்காராம 

அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 

திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...

யாருக்குமே வலிக்காது...

வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...

நுணலும் தன் வாயால் கெடும் 

அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...

எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...

நலம் விசாரிப்பாங்க...

எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...


அப்புறம்...

எங்க பாட்ஷா வாத்தியார்...

முருகானந்தம் சாரு..

ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...

கூட்டல் விதி, கழித்தல் விதியை 

தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...

அருமையா நடத்துவார்...

முதல்ல ...

ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...

அப்புறம் ...

ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...

அப்புறம் ...

ஒரு குழப்பு குழப்பி விட்டு

எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 

நடத்துவாரு...


ஒரே கணக்க குறைஞ்சது 

மூணு மெத்தட்ல நடத்துவாரு...

இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...

கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...

ஏதாவது மறந்து போச்சுன்னா...

அடி விழும்...

நிறைய கம்பு ஒடியும்...

வேற கம்பு கொண்டுவர சொல்லி...

அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...

மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...

நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...

அந்த டானிக்கு தான் ...

அந்த அக்கறை தான்...

எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...

எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...

தேங்க்யூ சார்....

சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 

நன்றி ...!



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சிறப்புரை இராஜேந்திர பிரசாத்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...

மிகவும் இனிப்பான தருணம் இது...

25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்

எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 


காலம் பற்பல மாற்றங்களை

நமக்கு தந்து விட்டது.

ஆனாலும், 

நம் மனம் மட்டும் 

டைம் ட்ராவல் பண்ணி, 

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,

பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 

நட்புணர்வுடன்... 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 

மலர்ந்த நினைவுகளுடன் நாம்...

மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 

ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....

நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...

 

வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...

மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...

ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 

என் உரையைத் தொடங்குகிறேன். 


வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !

வாழும் வாழ்க்கை அற்புதமானது !


அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!

அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை

ஆற்றுவித்தவர் நீங்கள் ...

கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...

எட்டுத்திசையைக் காட்டி நின்று,

ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...

ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்

சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...

இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...

மனக் கோவில் உமக்கே கட்டி...

வழிபடுகிறோம் நாங்கள்...

எம்மால், உமக்குப் பட்ட கடனை...

எப்படித் திருப்பித் தர முடியும்? 

நன்றியைத் தவிர...


எத்தனை எத்தனையோ சவால்களை ...

இன்ப துன்பங்களை ...

ஏற்ற இறக்கங்களை...

ஏமாற்றங்களை  ...

விருப்பு வெறுப்புகளை....

வினோதங்களை ....வியப்புகளை ...

இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.

இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 

நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...

எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பசிக்குதோ இல்லையோ...

பால் புகட்டும் தாய்போல ...

எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ ...

பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...


நாங்கள் கண்ட நல்லாசிரியர் நீங்கள்...

எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?

யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?

ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...

இரக்கம் காட்டி...

அன்பைக் குழைத்து ...

அறிவைப் புகட்டிய...

பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...

ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...

உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,

நாங்கள் பெற்ற வரம்...


மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!

கருப்பு வைரம் நீங்கள் !!!


கண்டிப்புக் காட்டி,

புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...

மீண்டும் மீண்டும் விளக்கி...


சொல்லையும் பொருளையும்

ஐயமறப் பொருத்தி...


நேர்க்கூற்று அயற்கூற்றை

நிதானமாக நடத்தி...


இலக்கணக் குறிப்பை 

இலகுவாகச் செதுக்கி...


அலகீட்டு வாய்ப்பாட்டை 

அற்புதமாக நடத்தி...


இலக்கணப் பாடத்தைத் 

இனிக்க இனிக்க நடத்தி...


திணை பால் எண் இடம் காலம் என்று ...

பிழையற்ற தொடர் அமைக்க...

பயிற்சி பயிற்சி என்று...


கல்லாய் இருந்த எங்களை

அருந்தமிழ்ச் சொல்லால்...

செதுக்கிச் செதுக்கி...


அழகுச் சிலையாக்கி...


மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...

வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...

என்று வைத்து...


எங்கள் வாழ்க்கையில் 

ஒளி ஏற்றிய அம்மா...

தமிழ் அம்மா...

எங்கள் அம்மா...


உங்கள் பாதம் தொட்டே...

வணங்கி நிற்கிறோம் அம்மா...


இந்தப் பிள்ளைகள்

இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...

என்று நீங்கள் ஏங்கியதைப் 

பார்த்திருக்கிறோம் நாங்கள்...


அன்று புரியவில்லை 

உங்கள் ஏக்கம்...


இன்றுவரை நிலைத்திருக்கிறது 

உங்களின் தாக்கம்...


அரசுப்பள்ளி ஆசிரியை நீங்கள் ...

அவசியத்திற்கும் மேலே 

எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...


அலட்சியமாய் இருந்தோம்

அறியாமையில் உழன்றோம் 

அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 


அடித்தீர்கள்... வலிக்கவில்லை...

திட்டினீர்கள்... உறைக்கவில்லை...


அன்பு காட்டி, அரவணைத்து,

தகரமாய்க் கிடந்த எங்களை 

தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...


இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 

எங்கள் மனதில் என்றும் நீங்கள் 

தங்கம்தான்...


நான் பிறந்த கருவறைக்கு 

இணையானது உங்கள் வகுப்பறை...


கருவறை கவசம் தந்தது என்றால்...

உங்கள் வகுப்பறை 

கல்வி என்னும் ஆயுதம் தந்தது..

உங்களுக்கு என்னுடைய நன்றியை

உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.

வெள்ளி விழா முனைவர் திருமதி ஆனந்த கனக ஜோதி அவர்களின் வரவேற்புரை வரவேற்புரை

தலைமை ஆசிரியருக்கு வரவேற்புரை - வழங்குபவர் 

முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி அவர்கள் 


பிரபஞ்சம் கதிரவனை

அனுமதித்ததால் 

கருமை விலகி 

நீலவானம் நீண்டு கிடக்கிறது!!!


காற்று தண்ணீரை

அனுமதித்ததால் 

மேகம் திரண்டு 

எழுந்து நிற்கிறது!!!


மேகம் ஒளியை

அனுமதித்ததால் 

வண்ணங்கள் குழைத்து 

'வானவில்' வளைந்து 

கவர்ந்து இழுக்கிறது!!!


நீங்கள் எங்களை (தலைமை ஆசிரியரைப் பார்த்து...)

அனுமதித்ததாலேயே,

தோட்டத்தில் மலர்ந்த 

வாசனை மிகுந்த 

வண்ண மலர்கள் போல

இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!



(பின்வரும் ஒவ்வொரு புகழ்ச்சித் தொடருக்கும் இடைவெளி விட வேண்டும். இடைவெளியில் தலைமை ஆசிரியரை நோக்கி சைகை மொழி காட்ட வேண்டும்)


கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!

கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!

நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!

உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!

உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கலசம் இவர்!!!

கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உங்களை வருக வருக என வரவேற்பதில் 

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!

செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

திங்கள், 8 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே, மது ஸ்ரீ

 

ஆருயிர் மகளே! 

என் அன்பு சித்திரமே! 

உன் வருகைக்கு முன்பு 

எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது. 

நீ பிறந்த பிறகு 

உனக்கான உலகத்தில் 

உனக்காகவே வாழ்வதன்று 

முடிவெடுத்து விட்டேன். 

என் ஒட்டுமொத்த உலகமும் நீதான். 


எது சரி? எது தவறு? என்று 

மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே! 

வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்! 

ஆனால், வாழ்க்கையையே 

பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது. 

குழந்தையாய் இருக்கும்போதே 

படிக்கும் திறனை வளர்த்துக் கொள்! 

வளர்ந்த பிறகு 

உலக விவரம் அறிந்த பிறகு 

படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! 

வளர்ந்த பிறகு 

கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்! 

கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்! 

உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்! 

உன்னை உன் நண்பர்களுடனோ 

உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!. 

உலக அளவில் 

உன் வயது குழந்தைகள் 

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று 

ஒப்பீடு செய்து பார்! 

அவர்களுக்கு தலைவியாக 

அவர்களுள் சிறந்தவளாக 

அவர்களோடு இணைந்து வாழ 

அவர்களைப்போல திறன்களை 

ஆற்றல்களை 

சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? 

அவர்கள் சொல்வதை 

நீ கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்கள் உன் சொல்லைக் 

கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது 

விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது 

நீ சோம்பி இருக்கலாமா? 

சோம்பல் ஒரு கொடிய விஷம்! 

சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்! 

உழைப்பே உன்னதம்! 

உயிருள்ளவரை உழைப்பை நேசி! 

உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும். 

ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும் 

உழைப்பு நம்பிக்கையைத் தரும் 

உழைப்பு பெருமையைத் தரும் 

உழைப்பு பெருமித உணர்வைத் தரும் 

உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் 


ஆனால், சோம்பல் நோயைத் தரும் 

சோம்பல் வெறுப்பை விதைக்கும் 

சோம்பல் அவநம்பிக்கையைத் தரும் 

சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும் 

சோம்பித் திரியாதே! 

சோம்பல் இருந்தால் 

பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும் 

கவலையை அதிகரிக்கும் 

உன்னால் முடிகிற 

சாதாரண வேலையைக் கூட 

"செய்ய முடியாது போல" 

என்று எண்ண வைக்கும் 


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ? 

அவ்வளவுக்கு அவ்வளவு 

உனக்கு மதிப்புக்கூடும். 

உனக்கு ஆற்றல் அதிகரிக்கும் 

உனக்கு நீ நினைத்தது 

எல்லாம் கிடைக்கும் 

படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும் 

அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி 

எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது 

ஆனால், உன் படிப்போ 

உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது! 

உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள். 

மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம் 

இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம் 

இருந்து கொண்டே இருக்க வேண்டும் 

அது "நான் சாதாரண குழந்தை அல்ல 

நான் சாதாரண பெண்ணல்ல 

நான் சாதிக்க பிறந்தவள் 

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது 

சாதிக்க பிறந்த நான் 

சோம்பேறியாக இருக்கக் கூடாது 

உலகத்தையே ஆள வேண்டிய நான் 

ஓய்வு எடுக்கக்கூடாது 

நான் ஓய்வு எடுத்தால் 

உலகத்தை யார் காப்பாற்றுவது? 

காற்று மழை கதிரவன் நிலா 

என்றாவது ஓய்வெடுத்ததுண்டா? 

ஏன் என் இதயம் கூட 

ஓய்வெடுத்ததில்லையே !

நான் ஓய்வு எடுக்கக்கூடாது !

கடவுள் என்னைப் படைத்தது 

ஓய்வு எடுக்க அல்ல !

கடவுள் என்னிடம் 

உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார் 

இந்த உலகத்தில் 

நான் சும்மா பிறக்கவில்லை 

நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !

அதனால் நான் சோம்பலை 

விட்டு விட வேண்டும் 

எல்லாருக்கும் முன்மாதிரியாக 

நான் இருக்க வேண்டும் !

உலகத்திற்கு புதிய வழியைக் 

கண்டுபிடித்து தர வேண்டும் 

உலகத்திற்கே வழிகாட்டியாக 

இருக்க வேண்டிய நான் 

முயற்சி இன்றி 

நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது! 

நான் இப்போது இருப்பது போன்று 

இருக்கலாமா? கூடாது!" 

என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்! 


எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது 


இதையெல்லாம் 

என்னுடைய ஆசைகளை 

கனவுகளை 

உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன் 

என்று தவறாக எண்ணி விடாதே! 

நீ யாரிடத்தும் 

எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது 

என்பதற்காகச் சொல்கிறேன். 

நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் 

அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து 

"படித்துக் கொண்டே இரு" 

அம்பேத்கரைப் போல....


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!

வரவேற்புரை

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களுக்கு வரவேற்புரை 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் 

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணியப் புலவன் பாரதியின் 

பாடல் வரிகளுக்கு ஏற்ப 

கல்விப் பணியை முதற்பணியாக கொண்டு 

அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்ற 

நமது தமிழக முதல்வரின் கனவுகளை நினைவாக்க 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தந்திருக்கும் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்கள் நீங்கள் 

கழகத்தின் மணிமுடியில் பதிக்கப்பெற்ற 

ஒளிமிக்க வைரக்கல் நீங்கள்

அறுபத்தெட்டு வயதிலும் இளைஞர் இவர் 

அயராது இடையறாது மக்கள் பணி ஆற்றும் மாணிக்கம் இவர் 

அழகாபுரியில் அவதரித்த சூரியன் 

நான்காம் முறையாக மணிமுடிசூடக் காத்திருக்கும் நாயகன்

அப்பழுக்கற்ற உன்னதமான தலைவர்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்

திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களை 

வருக வருக என வரவேற்பதில் 

எமது பள்ளி பெருமை கொள்கிறது.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

Annual day - model

 


அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம் 

ஆண்டு விழா 2024-2025

நாள்:14-02-2025

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

_________________________________________________________________


கனியிடையே ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! - என்ற பாரதியின் வரிகளில் தமிழன்னையை வணங்கி, வரவேற்புரையைத் துவங்குகிறேன்.

_________________________________________________________________________

தலைமை ஆசிரியருக்கு...

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_________________________________________________________________________




சிறப்பு விருந்தினர் திரு ச. ராஜகுமார் வட்டாட்சியர் அவர்களுக்கு...

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களே! 

வருக! வருக! என வரவேற்கிறோம்.

________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களுக்கு....

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 

மக்கள் யாக்கை இது என உணர்ந்து 

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் -

என்று நல்ல அறத்தையே விரும்பி செயலாற்றி வருகின்ற சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்.

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் திரு. ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு...

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 

உரிமை உடைத்து இவ்வுலகு- என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழும் சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு. ஜான் எலிசா தேவகுமார் M.TECH அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்

_________________________________________________________________________

ஆசிரியர் பெருமக்களுக்கு...

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________





மாணவன் யஸ்வந்தாமனுக்கு...

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் பெருங்கடலும் 

அகிலை ஈன்றதால் அடர்ந்தகாடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. 

மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________

மாணவச் செல்வங்களுக்கு...

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________________________________________

சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தல்....

சிறப்பு விருந்தினர், விருதுநகர் வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வர்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு.ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களை வரவேற்றல்...

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்....

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களைச் சிறப்புரை வழங்க வரவேற்றல்

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!!!

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வரவேற்றல்...

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_______________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைத்தல்..

நுட்பமான சிந்தனையாளர் 

திட்பமான கொள்கையாளர் 

கூர்த்த அறிவாளர்

தேர்ந்த செயல்வீரர்

மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வாழ்த்துரை 

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

ஏன் தெரியுமா? ...

அது ஒரு காடு. 

'சோ'வென்று மழை பொழிந்து கொண்டிருந்தது.

அப்போது குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது. 

அதைக் கண்ட தூக்கணாங்குருவி, குரங்கிடம் போய், என்னைப்போல் வீடு கட்டிக் கொண்டால், மழையில் நனையாமல் இருக்கலாம் அல்லவா? என்று புத்திமதி சொன்னது.

இதைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. விறுவிறு என்று மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டை பிரித்து எறிந்தது. 

இன்றைய இளைஞர்களிடம் நல்லதை கூறுவதற்கே தயங்க வேண்டி இருக்கிறது. 


வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 


சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.


காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.


ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் இருந்த அதே இடத்தில்தான் இருப்பார். 

வேற்றுமைகளை விலக்கு.

வேண்டாததை ஒதுக்கு.


உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்திருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்திருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்திருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ கழுதையாக இருந்திருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. உணர்ந்து கொள்.

உன் பார்வையும் விசாலமாகட்டும். நலம் கிட்டும்.


எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 


ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!


உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி மட்டும் எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.


உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.


உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுவதை அனுமதிக்கலாமோ?. 

ஏனோதானோ என்று வாழ்வைக் கழிக்கலாமோ?


எதற்கும் நீ கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.


கட்டுப்படுத்தப்பட்ட நெருப்புதான் சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டையே அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான். விழிப்புணர்வு கொள்.


படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். 

தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 


கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. கண்டுகொள்.

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. புரிந்துகொள்.


கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.


நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.


நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள் 

நேர்மையை என்றும் துணையாகக் கொள்.


அழுக்கைத் தேக்கி வைக்கும் சல்லடையாக இராதே!

இனிய இசையைத் தேக்கி வைக்கும் புல்லாங்குழலாய் இரு.


அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு 

தராசின் நடுமுள்ளாய் நின்று

தாய்மை அன்போடு எண்ணி

குறைகளைச் சுட்டி 

நிறைகளைக் காட்டி

நிறைவாக நம்பிக்கை ஊட்டி

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள்...

________________________________________________________________________

சிறப்புரை வழங்கும் மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களை வரவேற்றல்...

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

சிறப்புரை வழங்கிய மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றி கூறல்

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

________________________________________________________________________

பரிசளிப்பு விழா 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளிகள் அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாணவர் யஸ்வந்தாமன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.


அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.சோபியா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.ஹேமலதா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர் எஸ்.கருப்பசாமி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர் ஏ.அரிச்செல்வம். அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு 

கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபாய் 2000 பரிசு வழங்கிப்பாராட்டுகிறார் கணித ஆசிரியர் திரு பி.சுப்பிரமணியன் அவர்கள்.

கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோரை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






அரையாண்டுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு


ஆறாம் வகுப்பு அ பிரிவு

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு

ஏழாம் வகுப்பு அ பிரிவு

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு 

ஏழாம் வகுப்பு இ பிரிவு

எட்டாம் வகுப்பு அ பிரிவு

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு 

எட்டாம் வகுப்பு இ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு

பத்தாம் வகுப்பு அ பிரிவு

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு

பத்தாம் வகுப்பு இ பிரிவு

பதினோராம் வகுப்பு A பிரிவு

பதினோராம் வகுப்பு B பிரிவு

பதினோராம் வகுப்பு C பிரிவு

பதினோராம் வகுப்பு D பிரிவு

பதினோராம் வகுப்பு E பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு A பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு B பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு C பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு D பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு E பிரிவு

_________________________________________________________________________

நன்றியுரை வழங்க வரும் தாவரவியல் ஆசிரியரை வரவேற்றல்...

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி உரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு நன்றி கூறுதல்

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


கலை நிகழ்ச்சிகள்:

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

"உண்மை ஒளி" நாடகக் குழுவினரை வரவேற்றல்

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

நாடகக் குழுவினருக்கு நன்றி பாராட்டுதல்

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

________________________________________________________________________

நடன நிகழ்ச்சிகள் 

ஆறாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல்...

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவிகள்...

ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஆறாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

அன்பைக் கடன் கொடு. அது அதிக வட்டியுடன் திரும்பி வரும் என்பார்கள். அன்பு நிறைந்த ஆறாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம், அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாக இருக்கட்டும் என்பார்கள். அழகாக நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


ஏழாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள்...

ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

குலுக்கென்று சிரித்த முல்லை 

மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே -என்ற பாரதிதாசனின் 'சிரித்த முல்லை' கவிதையை நினைவூட்டும் ஏழாம் வகுப்பு மாணவிகளின் நடனத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

ஏழாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கு. பாதி வேலை உடனே முடியும் என்பார்கள். உற்சாகத்தோடு நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல்

கடவுள் நூலைத்தான் கொடுப்பார். மனிதன் தான் ஆடையை நெய்ய வேண்டும் என்பார்கள். கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக நடனமாடிய ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


எட்டாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.



எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே 

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாரே -போல் நடனமாடிய எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

எட்டாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை 

காலம் சோம்பேறியை மதிப்பதில்லை. சோம்பல் இன்றி நடனமாட வருகைதரும் எட்டாம்வகுப்பு மாணவர்களை வரவேற்கிறோம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

ஒழுக்கத்தை விடச் சிறந்த உடை உலகத்தில் இல்லை என்பார்கள். 

ஒழுக்கமுள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை நடனமாட அழைக்கிறோம்...

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகு

ப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று முறையிட வேண்டாம். முள் செடியில் ரோஜா இருக்கிறது என்று மகிழ வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

சுயமாக சிந்திக்காத மனிதன் ஒரு அடிமை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


நாட்டுப் பண் சேர்ந்து பாடுதல்


அனைவரும் கலைந்து செல்லுதல்





புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டுவிழா2025

 ஆண்டு விழா வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

____________________________________

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_____________________________________

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் அவர்களே! 

வருக! வருக!

_____________________________________

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________

ஆண்டறிக்கை 

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

---------------------------------------------------

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

---------------------------------------------------

சிறப்புரை

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் __________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர்_______________ அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்!!!

_____________________________________

வாழ்த்துரை

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

வாழ்த்துரை வழங்க வருமாறு___________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய___________அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்...

________________________________

பரிசளிப்பு விழா 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு.

ஆறாம் வகுப்பு அ பிரிவு_________

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு_________

ஏழாம் வகுப்பு அ பிரிவு__________

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு _________

ஏழாம் வகுப்பு இ பிரிவு__________

எட்டாம் வகுப்பு அ பிரிவு_________

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு _______

எட்டாம் வகுப்பு இ பிரிவு________

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு_____

பத்தாம் வகுப்பு அ பிரிவு_______

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ______

பத்தாம் வகுப்பு இ பிரிவு________

பதினோராம் வகுப்பு அ பிரிவு___

பதினோராம் வகுப்பு ஆ பிரிவு__

பதினோராம் வகுப்பு இ பிரிவு__

பதினோராம் வகுப்பு ஈ பிரிவு___

பதினோராம் வகுப்பு உ பிரிவு___

பன்னிரண்டாம் வகுப்பு அ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஆ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு இ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஈ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு உ பிரிவு

_______________________________

பேச்சு

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

__________________________________________________

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

நாடகம் 

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

_____________________________________

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_____________________________________

நடனம்

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவர்கள்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்...

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

_______________________________

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட அழைக்கிறோம்...

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

நன்றியுரை

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு__________அவர்களை வரவேற்கிறோம்.

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய______அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________

வாழ்த்துரை

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 

சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.

காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.

ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் அதே உயரத்தில்தான் இருப்பார்.

உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ கழுதையாக இருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. 

உன் பார்வை விசாலமாகட்டும். 

எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 

ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!

உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.

உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.

உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுகிறது. 

எதற்கும் கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.

கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டை அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான்.

படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 

கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. 

கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.

நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.

அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.