செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக