ஆருயிர் மகளே!
என் அன்பு சித்திரமே!
உன் வருகைக்கு முன்பு
எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது.
நீ பிறந்த பிறகு
உனக்கான உலகத்தில்
உனக்காகவே வாழ்வதன்று
முடிவெடுத்து விட்டேன்.
என் ஒட்டுமொத்த உலகமும் நீதான்.
எது சரி? எது தவறு? என்று
மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே!
வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்!
ஆனால், வாழ்க்கையையே
பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது.
குழந்தையாய் இருக்கும்போதே
படிக்கும் திறனை வளர்த்துக் கொள்!
வளர்ந்த பிறகு
உலக விவரம் அறிந்த பிறகு
படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே!
வளர்ந்த பிறகு
கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்!
கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்!
உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்!
உன்னை உன் நண்பர்களுடனோ
உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!.
உலக அளவில்
உன் வயது குழந்தைகள்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று
ஒப்பீடு செய்து பார்!
அவர்களுக்கு தலைவியாக
அவர்களுள் சிறந்தவளாக
அவர்களோடு இணைந்து வாழ
அவர்களைப்போல திறன்களை
ஆற்றல்களை
சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா?
அவர்கள் சொல்வதை
நீ கேட்டு நடக்க வேண்டுமா?
அவர்கள் உன் சொல்லைக்
கேட்டு நடக்க வேண்டுமா?
அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது
விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது
நீ சோம்பி இருக்கலாமா?
சோம்பல் ஒரு கொடிய விஷம்!
சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்!
உழைப்பே உன்னதம்!
உயிருள்ளவரை உழைப்பை நேசி!
உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும்.
ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும்
உழைப்பு நம்பிக்கையைத் தரும்
உழைப்பு பெருமையைத் தரும்
உழைப்பு பெருமித உணர்வைத் தரும்
உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும்
ஆனால், சோம்பல் நோயைத் தரும்
சோம்பல் வெறுப்பை விதைக்கும்
சோம்பல் அவநம்பிக்கையைத் தரும்
சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும்
சோம்பித் திரியாதே!
சோம்பல் இருந்தால்
பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும்
கவலையை அதிகரிக்கும்
உன்னால் முடிகிற
சாதாரண வேலையைக் கூட
"செய்ய முடியாது போல"
என்று எண்ண வைக்கும்
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ?
அவ்வளவுக்கு அவ்வளவு
உனக்கு மதிப்புக்கூடும்.
உனக்கு ஆற்றல் அதிகரிக்கும்
உனக்கு நீ நினைத்தது
எல்லாம் கிடைக்கும்
படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும்
அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி
எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது
ஆனால், உன் படிப்போ
உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது!
உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள்.
மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம்
இருந்து கொண்டே இருக்க வேண்டும்
அது "நான் சாதாரண குழந்தை அல்ல
நான் சாதாரண பெண்ணல்ல
நான் சாதிக்க பிறந்தவள்
எனக்குள் அந்த சக்தி இருக்கிறது
சாதிக்க பிறந்த நான்
சோம்பேறியாக இருக்கக் கூடாது
உலகத்தையே ஆள வேண்டிய நான்
ஓய்வு எடுக்கக்கூடாது
நான் ஓய்வு எடுத்தால்
உலகத்தை யார் காப்பாற்றுவது?
காற்று மழை கதிரவன் நிலா
என்றாவது ஓய்வெடுத்ததுண்டா?
ஏன் என் இதயம் கூட
ஓய்வெடுத்ததில்லையே !
நான் ஓய்வு எடுக்கக்கூடாது !
கடவுள் என்னைப் படைத்தது
ஓய்வு எடுக்க அல்ல !
கடவுள் என்னிடம்
உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார்
இந்த உலகத்தில்
நான் சும்மா பிறக்கவில்லை
நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !
அதனால் நான் சோம்பலை
விட்டு விட வேண்டும்
எல்லாருக்கும் முன்மாதிரியாக
நான் இருக்க வேண்டும் !
உலகத்திற்கு புதிய வழியைக்
கண்டுபிடித்து தர வேண்டும்
உலகத்திற்கே வழிகாட்டியாக
இருக்க வேண்டிய நான்
முயற்சி இன்றி
நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது!
நான் இப்போது இருப்பது போன்று
இருக்கலாமா? கூடாது!"
என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்!
எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது
எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது
எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது
எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது
இதையெல்லாம்
என்னுடைய ஆசைகளை
கனவுகளை
உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன்
என்று தவறாக எண்ணி விடாதே!
நீ யாரிடத்தும்
எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது
என்பதற்காகச் சொல்கிறேன்.
நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து
"படித்துக் கொண்டே இரு"
அம்பேத்கரைப் போல....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக