தனித்து இருக்கும் போது
பொதுநலமும்
பொதுவில் இருக்கும் போது
சுயநலமும்
புகுந்து விடுகிறது
வறட்சிக் காலத்தில்
தன்னைத் தாங்கிப் பிடிக்கத்
தன் இலைகள் உதிர்க்கும் மரம்
தன் அழகு
குலைவது குறித்துக்
கவலை கொள்வதில்லை!
கடுகினும் சிறுவிதை
காகம் குருவியினம் விதைத்த விதை
கரும்பாறையில் விழுந்தாலும்
கருத்துடனே உறுதியாய்
கருமுளையைப் பாய்ச்சிட்டே
கற்பாறையைப் பிளந்திடும்!
எதிர்வரும் மழையில்
தன் இனம் பிழைக்க
முன்னதாகவே இரைசேகரிக்கும்
எறும்புக் கூட்டம்
முன்புத்தியின் அடையாளம்!
உணவகங்களின் பெருக்கம்
நாகரிகத்தின் குறியீடு அல்ல!
பண்பாட்டுச் சிதைவு!
உடல்நலனுக்கு ஒவ்வாத
முற்றிலும் சூழலுக்கு மாறுபட்ட
உணவு ...உணவல்ல...விஷம்!
ஒரு வாழிடச் சூழலில்
வாழும் மரம்கூட
வேறிடச் சூழலில் வாழ முடிவதில்லை...
காலநிலைக்கும்
வாழும் சூழலுக்கும்
ஏற்ற உணவே உணவு...
வீட்டுச் சமையலில்
பால் வேறுபாடு கூடாது.
அது அவரவர்
வீட்டுச் சூழலைப் பொறுத்தது.
உழைப்பவருக்குத்தான்
உழைப்பை மதிக்கத் தெரியும்!
தேரின் மேல் அமர்ந்து இருப்பவருக்குக்
குதிரையின் கால்வலி எப்படித் தெரியும்?
பிரசவத்தைப் பார்ப்பவரின் வலியும்
பிரசவித்த தாயின் வலியும் ஒன்றாகாது.
உழைப்பவரே உயர்ந்தவர்! - பிறர்
உழைப்பைத் திருடிப் பிழைப்பவர்
சிவிகையில் சிங்காரமாய் இருந்தாலும்
இழிந்தவரிலும் இழிந்தவரே!
தேனின் சுவையில் தேனீக்களின்
தெவிட்டாத தேடல் தெரிய வேண்டும்!
வெள்ளியென மின்னும் அன்னத்தின் சுவையில்
உழவனின் உழைப்பு ஒளிர வேண்டும்!!
அரசு வழங்கும்
இலவசப் பொருள்களுக்கு எல்லாம் அதிகாரிகள்
குறிப்பிடாத கட்டணங்களை
பெற்றுக் கொண்டுதான்
தருகிறார்கள்.
பெரு நிறுவனங்கள்
விற்பனைப் பொருள்களுக்கெல்லாம்
குறிப்பிட்ட இலவசங்களை
அள்ளித் தருகின்றன.
இலவசங்களில் எல்லாம் கட்டணங்கள்.
கட்டணங்களில் எல்லாம் இலவசங்கள்.
மதிப்புள்ள பொருளை எல்லாம்
மதிப்பற்ற முறையில் வழங்கினால்,
அது அரசாங்கம்.
மதிப்பற்ற பொருளை எல்லாம்
மதிப்புள்ள முறையில் வழங்கினால்,
அது பெருநிறுவனம்.
பல நேரங்களில் ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்லவற்றைப் பற்றிய சிந்தனைகளில் நான் ஆழ்வதுண்டு. நாட்டை ஆளும் தலைவர்களில் ஏன் நல்லவர்களைக் காண முடிவதில்லை என்று பல வேளைகளில் ஐயப்பட்டிருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளால், “கிணற்றுக்குள் தொலைத்த மோதிரத்தைத் தேடுவது” போல ஆழ்ந்து தேடி இருக்கிறேன்.
அப்போதெல்லாம் "இது கலிகாலம், தீயவர்களின் ஆதிக்க காலம், மக்களின் அறியாமைக் காலம்" என்று நினைத்திருக்கிறேன்.
"நல்லவர்கள் அரசியலுக்கு வர அஞ்சுகிறார்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணுகிறார்கள்" என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன்.
"அனைவரும் ஓட்டுப் போட்டால் தானே நல்லவர்கள் ஆட்சிக்கு வர முடியும்" என்று கூட சிந்தித்து இருக்கிறேன்.
"காசு வாங்கிட்டு அறியாமையால் அல்லது விசுவாசத்தால் ஓட்டு போட்டு தீயவர்களைத் தலைவராக்குகிறார்களே" என்று எண்ணி இருக்கிறேன்.
"மக்கள் அனைவரும் நல்லவர்கள் தான். தனித்திருக்கும் போது மிகவும் நல்லவர்கள்".
"தலைவர்கள் தான் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள். அறியாமைக்கு ஆட்படுத்துகிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். குழப்புகிறார்கள். ஆசையைக் காட்டி, ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்றுதான் இதுவரை எண்ணியிருக்கிறேன்.
ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்ல குணங்களோடு கட்டுப்பாட்டோடு நல்லவனாய் எல்லா மனிதராலும் இருக்க முடிவதில்லை. நல்ல குணங்களை விரும்பி ஏற்றுக் கொண்டு மனக்கட்டுப்பாடு, சுயக் கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள் சிலரே. பெரும்பாலானோரால் அப்படி வாழ முடிவதில்லை.
தன்னால்தான் சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் நேர்மையோடு வாழ முடியவில்லை என்று எண்ணும் பெரும்பான்மையானோர் தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால், அவர்கள் தன்னை ஆளத் தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். அதில் விஞ்சி நிற்பது தற்காப்பு.
தன்னை விட நேர்மையானவரிடம் தன்னை ஆளும் தகுதியை ஒப்படைத்தால், தான் தவறிழைக்கும் போது நேர்மையாளன் தன்னைத் தண்டித்து விடுவான் என்கின்ற அச்ச உணர்வு மிகுதியால்தான், சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நபரை அல்லது அரைகுறை அறிவுள்ளவனை அல்லது தவறுகளை மன்னிப்பவனை அல்லது அனுசரித்துச் செல்பவனை அல்லது தலையாட்டிப் பொம்மையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இத்தகைய சுயநலப் போக்கால்தான் நல்லவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடிவதில்லை.
யார் தலைவனாக வேண்டும்? என்பதை விட, நல்லவர்கள் தலைவனாக வரக்கூடாது என்பதில் பெரும்பான்மையோர் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர்.
நல்லவன் தலைவனானால் என்ன நடக்கும்? குறைந்த ஒழுக்கம், குறைந்த கட்டுப்பாடு, குறைந்த நேர்மையை உடையவர்களுக்குத் திண்டாட்டம் தானே! அவர்களின் குற்றங்கள் கண்டிக்கப்படும் அல்லவா!! தண்டிக்கப்படும் அல்லவா!!! அந்த அச்ச உணர்வால் தான் நல்லவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை?!
இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
உன் உழைப்பு ஒவ்வொன்றும் வெறும் வியர்வை அன்று. ஒவ்வொன்றும் வைரக்கல்.
உனக்கு நீயே நீதிபதியாக இரு. அப்போது தான் உன் தவறுகளுக்கு நீ தண்டனை தர முடியும்.
உன் மனச்சாட்சியே கடவுள். உன் கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இரு.
சிறகுகளை விரித்தால் பறக்கலாம். சிந்தையை அடக்கினால் செய்கையில் சிறக்கலாம்.
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்.
பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பதல்ல. பலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.
அஞ்சாமை தான் அறியாமை என்னும் மலையைத் தகர்த்து உடைக்கும் அணுகுண்டு
எந்தச் செயல் உன்னை வலிமையானவனாக உணர வைக்கிறதோ அச்செயலைத் திரும்பத் திரும்பச் செய்
வலிமை தான் வாழ்வு. வலிமைதான் மகிழ்ச்சி. பலவீனம் இடைவிடாத சித்திரவதை ஆகவும் துன்பமாகவும் அமையும் என்பதால், உனது வலிமையைப் பெருக்குவதிலேயே உன்னுடைய வாழ்க்கையைச் செலவிடு.
மலைகளைத் தகர்க்கும் மன உறுதி வேண்டும். தோல்வியுற்ற வாழ்க்கை வாழ்வதைவிட போர்க்களத்திலே போரிட்டு மடிவதே மேல். தோல்வியுற்ற வாழ்க்கை துயரமானது. வென்றே ஆக வேண்டும்.
ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சம் மீதியின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையும் சாதிக்க இயலாது.
அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவற்ற பொறுமை இவை நான்கும் அவசியம்.
எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேதான் இருக்கின்றன. அதை நீ உணர வேண்டும் என்றால், நீ உன் மீது அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.
மரணம் என்பது உடையை மாற்றுவது போலதான். அதனால் மரணத்திற்கு அஞ்சாதே.
ஆபத்துக் காலத்தில் துண்டான பல்லியின் வால் முளைப்பது எப்படி?
மின்மினி பூச்சியின் வால் பகுதி ஒளிரும் ரகசியம் என்ன?
பருவகாலத்தை முன்னரே அறியும் கட்டெறும்பின் மூளைத்திறன் என்ன?
வசந்த காலத்திற்காக இலையை உதிர்த்து தளிர்த்துக் காத்திருக்கும் மரத்தின் அறிவாற்றல் என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைதேடும் சித்தராய் சிந்தனையைச் சீர்திருத்தி வை.
சுற்றுப்புறத்தை உற்றுநோக்கி சிந்தனையில் கரைந்து போ.
அது உன்னை ஞானி ஆக்கும்.
விஞ்ஞானி ஆக்கும்.