சிறப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சிறப்புரை வழங்குபவர் திரு மா.மாடசாமி

திரு.மா.மாடசாமி அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மலையிலே பிறந்தாலும் 

சந்தனம் ...

மலைக்கு என்ன செய்யும்? 

கடலிலே பிறந்தாலும் 

முத்து ...

கடலுக்கு என்ன செய்யும்? 

வீணையிலே பிறந்தாலும் 

இசை ...

வீணைக்கு என்ன செய்யும்? 

நீங்கள் வரைந்த 

வண்ண ஓவியம் நாங்கள் ...

நீங்கள் செதுக்கிய 

அழகுச்சிலைகள் நாங்கள் ...

நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...

உளியின் வலியைப் 

பொறுத்துக் கொள்ளும் கற்களை...

நீங்கள்...

பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...

உங்களிடம் பட்ட கடனை 

எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???


பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..

வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...

பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...

ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை 

கொள்ளை கொண்டீர்கள்...!


பூவில் சுரந்த தேன் போல...

நாவில் தவழும் தமிழ் போல...

புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...

புன்னகை தவழும் மழலை போல...

உணவில் கரைந்த உப்பு போல...

கனவில் தோன்றும் தேவதை போல...

எங்கள் வாழ்க்கையைச் 

சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...


ஆனாலும் இப்போது...

அதிக ஸ்ட்ரெஸ் ஃபுல்லான ஜெனரேஷன் நாம தான்...

நேற்றைய பழமைக்கும் 

இன்றைய புதுமைக்கும் 

இடையில பிறந்து வளர்ந்தவங்க நாங்க...

நல்லா யோசிச்சா...

நம்ம கிட்ட இருக்கிற நல்ல பண்புகளே 

நமக்கு பிரச்சனையா அமைஞ்சிருது...

உண்மை, நேர்மை, 

உழைப்பு, உறவுகளை மதிக்கிறது என்று 

நாம கத்துக்கிட்ட எல்லா நல்ல விஷயங்களுக்கும் 

இந்த சமூகத்தில் இப்ப மதிப்பு இல்ல...

அதனால, இந்த குணங்களை எல்லாம் வச்சிக்கிறதா 

இல்ல விட்டுவிடலாமா அப்படின்ற குழப்பத்துல டென்ஷன் டென்ஷன்...

தீர்வு ஒன்று தான்...

நல்லதுக்கே காலம் இல்லங்க என்ற பழமொழியை ஓரமா வச்சிட்டு...

நம்மளுடைய நற்பண்புகளை 

கீழ போட்றாம கெட்டியா பிடிச்சுக்கணும்...

அதனால என்ன பிரச்சனை வந்தாலும் 

சமாளிக்கணுங்கிற மனநிலையை வளர்த்துக்கணும்....

இதுதான் ஒரே வழி...

ஏன்னா...

உண்மை நேர்மைய கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாமதான்...

உறவுகளை மதிக்கிற பழக்கத்தை கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்...

இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் நாம தான்...

நற்பண்புகள் தான் நம்மளுடைய தனித்துவம்...

அத எதுக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது...

இதையெல்லாம் கத்துக் கொடுத்த 

என்னோட ஆசிரியர்களுக்கு 

என் உளப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சிறப்புரை பெ.இலட்சுமணன்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணிய புலவன் பாரதியின் 

எண்ணப்படி ஆசிரியர் பணியை 

அர்ப்பணிப்போடு ஆற்றிய 

என் மனம் கவர்ந்த 

ஆசிரியர் பெருமக்களை வணங்கி 

என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...


எம் தமிழ் அம்மா... 

அம்மம்மா...

சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 

பாக்க மாட்டாங்க...

அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 

ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....

அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஒரே கலர் கலரா இருக்கும்!!!

அக்கறையோடு நடத்துவாங்க...

திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...

கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 

இலக்கணப் பயிற்சிதான்...!

அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 

செகண்ட் பேப்பர்ன்னு 

ரெண்டு பேப்பர் உண்டு...

கடின உழைப்பாளி..!

அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...

எழுத்துப்பிழை இருக்கான்னு 

-வரி வரியா பார்ப்பாங்க...

பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...

எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...

நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...

இவர்கிட்ட படிச்சவன் 

மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.

70 மார்க் எடுத்திருவான்...

டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...


எங்க வாய் சும்மா கிடக்காது...

அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.

அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால

உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...

சில நேரம் அழுதுருக்காங்க...

அதெல்லாம் அப்ப புரியல...

இப்பதான் அவரோட அருமை புரியுது...

இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 

நிறைய பேரு

டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...


அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 

என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...

எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....

நன்றி மா ... தமிழம்மா...!!!


அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...

எப்பவும் சிரிச்ச முகம்...

அன்பாலேதான் திருத்தணும்றது 

இவரோட பாலிசி....

எப்பவுமே படிக்காமல் திரியுற 

10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...

அதாவது எப்பவுமே பக்கத்துலயே 

உட்கார வைத்துக்கொள்வார்கள்...

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...

கிளிப்பிள்ளை மாதிரி...

நல்லா படிக்கிற மாணவர்களை 

பெருசா கண்டுக்க மாட்டாங்க...

அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...


அதிக ரசிகர் படை இவருக்கு தான்...

நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...

அது சுத்தம் இல்லன்னு தெரியும்...

இருந்தாலும்...

குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...

பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...


எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...

பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 

எங்க டீச்சரு...

ஆனைமுகனே 

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே 

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா 

இந்த ஏழை முகம் பாருமையா 

அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 

எல்லாரையும் சொல்ல வச்சு 

பாஸ் பண்ண வச்சவங்க...


ஒரு இடத்தில் உட்காராம 

அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 

திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...

யாருக்குமே வலிக்காது...

வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...

நுணலும் தன் வாயால் கெடும் 

அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...

எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...

நலம் விசாரிப்பாங்க...

எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...


அப்புறம்...

எங்க பாட்ஷா வாத்தியார்...

முருகானந்தம் சாரு..

ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...

கூட்டல் விதி, கழித்தல் விதியை 

தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...

அருமையா நடத்துவார்...

முதல்ல ...

ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...

அப்புறம் ...

ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...

அப்புறம் ...

ஒரு குழப்பு குழப்பி விட்டு

எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 

நடத்துவாரு...


ஒரே கணக்க குறைஞ்சது 

மூணு மெத்தட்ல நடத்துவாரு...

இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...

கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...

ஏதாவது மறந்து போச்சுன்னா...

அடி விழும்...

நிறைய கம்பு ஒடியும்...

வேற கம்பு கொண்டுவர சொல்லி...

அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...

மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...

நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...

அந்த டானிக்கு தான் ...

அந்த அக்கறை தான்...

எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...

எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...

தேங்க்யூ சார்....

சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 

நன்றி ...!



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சிறப்புரை இராஜேந்திர பிரசாத்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...

மிகவும் இனிப்பான தருணம் இது...

25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்

எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 


காலம் பற்பல மாற்றங்களை

நமக்கு தந்து விட்டது.

ஆனாலும், 

நம் மனம் மட்டும் 

டைம் ட்ராவல் பண்ணி, 

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,

பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 

நட்புணர்வுடன்... 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 

மலர்ந்த நினைவுகளுடன் நாம்...

மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 

ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....

நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...

 

வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...

மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...

ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 

என் உரையைத் தொடங்குகிறேன். 


வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !

வாழும் வாழ்க்கை அற்புதமானது !


அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!

அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை

ஆற்றுவித்தவர் நீங்கள் ...

கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...

எட்டுத்திசையைக் காட்டி நின்று,

ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...

ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்

சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...

இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...

மனக் கோவில் உமக்கே கட்டி...

வழிபடுகிறோம் நாங்கள்...

எம்மால், உமக்குப் பட்ட கடனை...

எப்படித் திருப்பித் தர முடியும்? 

நன்றியைத் தவிர...


எத்தனை எத்தனையோ சவால்களை ...

இன்ப துன்பங்களை ...

ஏற்ற இறக்கங்களை...

ஏமாற்றங்களை  ...

விருப்பு வெறுப்புகளை....

வினோதங்களை ....வியப்புகளை ...

இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.

இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 

நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...

எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பசிக்குதோ இல்லையோ...

பால் புகட்டும் தாய்போல ...

எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ ...

பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...


நாங்கள் கண்ட நல்லாசிரியர் நீங்கள்...

எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?

யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?

ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...

இரக்கம் காட்டி...

அன்பைக் குழைத்து ...

அறிவைப் புகட்டிய...

பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...

ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...

உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,

நாங்கள் பெற்ற வரம்...


மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!

கருப்பு வைரம் நீங்கள் !!!


கண்டிப்புக் காட்டி,

புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...

மீண்டும் மீண்டும் விளக்கி...


சொல்லையும் பொருளையும்

ஐயமறப் பொருத்தி...


நேர்க்கூற்று அயற்கூற்றை

நிதானமாக நடத்தி...


இலக்கணக் குறிப்பை 

இலகுவாகச் செதுக்கி...


அலகீட்டு வாய்ப்பாட்டை 

அற்புதமாக நடத்தி...


இலக்கணப் பாடத்தைத் 

இனிக்க இனிக்க நடத்தி...


திணை பால் எண் இடம் காலம் என்று ...

பிழையற்ற தொடர் அமைக்க...

பயிற்சி பயிற்சி என்று...


கல்லாய் இருந்த எங்களை

அருந்தமிழ்ச் சொல்லால்...

செதுக்கிச் செதுக்கி...


அழகுச் சிலையாக்கி...


மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...

வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...

என்று வைத்து...


எங்கள் வாழ்க்கையில் 

ஒளி ஏற்றிய அம்மா...

தமிழ் அம்மா...

எங்கள் அம்மா...


உங்கள் பாதம் தொட்டே...

வணங்கி நிற்கிறோம் அம்மா...


இந்தப் பிள்ளைகள்

இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...

என்று நீங்கள் ஏங்கியதைப் 

பார்த்திருக்கிறோம் நாங்கள்...


அன்று புரியவில்லை 

உங்கள் ஏக்கம்...


இன்றுவரை நிலைத்திருக்கிறது 

உங்களின் தாக்கம்...


அரசுப்பள்ளி ஆசிரியை நீங்கள் ...

அவசியத்திற்கும் மேலே 

எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...


அலட்சியமாய் இருந்தோம்

அறியாமையில் உழன்றோம் 

அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 


அடித்தீர்கள்... வலிக்கவில்லை...

திட்டினீர்கள்... உறைக்கவில்லை...


அன்பு காட்டி, அரவணைத்து,

தகரமாய்க் கிடந்த எங்களை 

தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...


இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 

எங்கள் மனதில் என்றும் நீங்கள் 

தங்கம்தான்...


நான் பிறந்த கருவறைக்கு 

இணையானது உங்கள் வகுப்பறை...


கருவறை கவசம் தந்தது என்றால்...

உங்கள் வகுப்பறை 

கல்வி என்னும் ஆயுதம் தந்தது..

உங்களுக்கு என்னுடைய நன்றியை

உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.