கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புதிய ஆண்டு இது...

புதுமைகள் நிறைந்த ஆண்டு இது...

புதையல்கள் நிறைய புதைந்திருக்கு...

பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ள,

புதிய புதிய முயற்சிகள் வேண்டும் ...

புத்தம் புதிய வழிகள் வேண்டும் ...

புதிய புதிய நம்பிக்கை வேண்டும் ...

புதிய புதிய சிந்தனை வேண்டும்... 

புதிய நல்ல மனம் வேண்டும் ...

கண்டதையும் கொட்டி வைக்க, 

மனம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல...

காற்றைக்கூட அளவுதாண்டி 

ஊதிவிட்டால் உடைந்து விடும்! 

மன அழுத்தம், மனக்கவலை, 

மனச்சோர்வு, மனப்பிரம்மை கொள்ளாமல்,

மன மகிழ்ச்சி, மன நிறைவு, 

மன வலிமை, மன வளத்தை வளர்த்து

மனித வாழ்வின் அத்துணை 

அம்சங்களையும் அனுபவித்து வாழ,

புத்தாண்டு காத்திருக்கு...

எதிர்வரும் காலம் முழுதும் உங்களுக்கு!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

நட்பு கவிதை

அருமை நண்பர்களைப் பிரிந்து 

எத்தனை காலம் கழித்தோம்!!

எத்தனை இடைவெளியில் கிடந்தோம்!!

தத்தித் தத்தி நடந்தோம்!!

எத்தனை தடவை விழுந்தோம்!?

எத்தனை தடவை எழுந்தோம்!?

எத்தனை எத்தனை இழந்தோம்!!

வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!!!

இன்னும் எத்தனை தயக்கம்?

இன்னும் எத்தனை கலக்கம்?

எத்தனை ஏற்றம்!

எத்தனை இறக்கம்!!

அத்தனையும் நமக்கே!!!

நம்மால் முடியும் .

எல்லாவற்றையும் கடந்தே நிற்போம்.

வென்றே நிற்போம்!!!

மனைவி கவிதை

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

திங்கள், 28 அக்டோபர், 2024

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் 

காலம் மாறி கரியளவு மாறி

கால நிலைமாறி மேக நிலைமாறி 

மாரி நிலைமாறி மிகக்கன மழையிடர் 

மாறக் காண்பீர் காலநிலை பேணும்வழி.

நீரறிவாண்மை

ஆரிமழை யமிழ்தமாய்ப் பெய்திடினும் -எம்மவர் 

ஏரிகுளங்கால் வாயடைத்துத் தேங்கிய நீர்கண்டு 

தேம்பியழுதார் அழுவார்ப்பின் காலிக்குடங்க ளோடு

தேவரீர் தருவீர் நிலத்தடிநீர் தேரும் ஞானம்!

நீரறிவு

புயலில்லை சூறா வளியில்லை - கொட்டிப்

பெய்தநீ ரோடவில்லை வெள்ளமே யெங்கும் 

வெளிநாட்டின் காட்சிபோல் தென்னாடு திகைப்புறும்

நிலையொழிய நீரறிவு வேண்டும்.

மணற்கிணறு

கடிக்கும் போதுதான் தெரிகிறது

கரும்பு எவ்வளவு இனிக்கும் என்று!

உழைக்கும் போதுதான் தெரிகிறது

வியர்வையின் மதிப்பு என்னவென்று!

தோல்விக்குப் பின்தான் தெரிகிறது

வெற்றிக்கு என்ன வேண்டும் என்று!

படிக்கும் போதுதான் தெரிகிறது

கற்றது கைம்மண்ணளவு தானென்று!


நீரளவே ஆகும் நீர் ஆம்பல்

தோண்டும் அளவே சுரக்கும் மணற்கிணறு

வியர்வையின் அளவே விளைச்சல்

படிக்கும் அளவே நூற்பயன் ஆகுமப்பா!

தன்னம்பிக்கை கவிதை

ஓடுகிற நீரில் 

பாசி படியாது. 

உழைப்பாளி உள்ளமதில் 

கபடம் கலவாது. 

சமூகமே சாக்கடை ஆனாலும் 

தாமரை போல் மலருங்கள். 

நாற்றமெடுத்த சிப்பிக்குள்ளும் 

முத்துப்போலே ஒளிருங்கள்.

கவலைவிடு

தலையிலிருந்து இழிந்த மயிரை எண்ணி கோபமோ வருத்தமோ அடைய வேண்டியதில்லை. அதுபோலவே உணர்வு மாறுபட்டு, கருத்து வேறுபட்டு விலகிச் செல்லும் உறவுகளை எண்ணி விசனம் அடைய வேண்டியதில்லை. வழுக்கையே விழுந்தாலும், வழுக்கி விழுந்தாலும் கவலை வேண்டாம் 

தத்துவம் 

வாழ்க்கையின் தத்துவத்தை 

மதி கற்பிக்கிறது. 

வளர்வதும் தேய்வதும் 

மதி(நிலா)யும் அறிவும் 

மதிப்பும் மரியாதையும் 

என்று உணர்ந்து 

உணர்வுகட்கு ஆட்படாது 

இன்பத்தையும் துன்பத்தையும் 

சரிசமமாகப் பாவிக்கும் 

பக்குவம் பெறுவோம்.

ஞானம்

தீமை வேறு, தீமை செய்தவர் வேறு என்று உணரும் ஞானம் ஞானிகளுக்கே உரிதாம். 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விடுதலை

ஏழைகள் விடுதலை அடைய வேண்டுமானால் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

ஏழைகளுக்குச் சாப விமோசனம் தருவது கல்வியே ஆகும்.

வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையது மட்டுமே கல்வி. மற்றவை எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்.

உணர்ந்து கற்காத பாடம் எதுவும் பயன் தராது.  வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் கல்வியைப் பயனுள்ளதாக்கும்.

புதன், 8 பிப்ரவரி, 2023

சுற்றுப்புறத்தைச் சுவாசி

ஆபத்துக் காலத்தில் துண்டான பல்லியின் வால் முளைப்பது எப்படி?

மின்மினி பூச்சியின் வால் பகுதி ஒளிரும் ரகசியம் என்ன?

பருவகாலத்தை முன்னரே அறியும் கட்டெறும்பின் மூளைத்திறன் என்ன?

வசந்த காலத்திற்காக இலையை உதிர்த்து தளிர்த்துக் காத்திருக்கும் மரத்தின் அறிவாற்றல் என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைதேடும் சித்தராய் சிந்தனையைச் சீர்திருத்தி வை.

சுற்றுப்புறத்தை உற்றுநோக்கி சிந்தனையில் கரைந்து போ.

அது உன்னை ஞானி ஆக்கும்.

விஞ்ஞானி ஆக்கும்.

வியாழன், 26 ஜனவரி, 2023

சோம்பல் விலக்கு!

சோம்பல் விலக்கு!

வெட்டுப்படாமல்

வைரம் மின்னுமா?

கசக்கும் மருந்தின்றி

நோய் குணமாகுமா?

உளி படாமல்

கல் சிலையாகுமா?

முத்துக்குளிக்காமல்

முத்தெடுக்க முடியுமா?

முடியாதல்லவா?

நீ சோம்பி இருந்து

என்ன பயன்?


வியாழன், 30 ஜூன், 2022

காமராஜர் கவிதை

விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்

விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர் 

படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்

காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்

பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்

மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்

காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்

காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்