பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

திங்கள், 8 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே, மது ஸ்ரீ

 

ஆருயிர் மகளே! 

என் அன்பு சித்திரமே! 

உன் வருகைக்கு முன்பு 

எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது. 

நீ பிறந்த பிறகு 

உனக்கான உலகத்தில் 

உனக்காகவே வாழ்வதன்று 

முடிவெடுத்து விட்டேன். 

என் ஒட்டுமொத்த உலகமும் நீதான். 


எது சரி? எது தவறு? என்று 

மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே! 

வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்! 

ஆனால், வாழ்க்கையையே 

பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது. 

குழந்தையாய் இருக்கும்போதே 

படிக்கும் திறனை வளர்த்துக் கொள்! 

வளர்ந்த பிறகு 

உலக விவரம் அறிந்த பிறகு 

படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! 

வளர்ந்த பிறகு 

கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்! 

கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்! 

உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்! 

உன்னை உன் நண்பர்களுடனோ 

உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!. 

உலக அளவில் 

உன் வயது குழந்தைகள் 

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று 

ஒப்பீடு செய்து பார்! 

அவர்களுக்கு தலைவியாக 

அவர்களுள் சிறந்தவளாக 

அவர்களோடு இணைந்து வாழ 

அவர்களைப்போல திறன்களை 

ஆற்றல்களை 

சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? 

அவர்கள் சொல்வதை 

நீ கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்கள் உன் சொல்லைக் 

கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது 

விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது 

நீ சோம்பி இருக்கலாமா? 

சோம்பல் ஒரு கொடிய விஷம்! 

சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்! 

உழைப்பே உன்னதம்! 

உயிருள்ளவரை உழைப்பை நேசி! 

உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும். 

ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும் 

உழைப்பு நம்பிக்கையைத் தரும் 

உழைப்பு பெருமையைத் தரும் 

உழைப்பு பெருமித உணர்வைத் தரும் 

உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் 


ஆனால், சோம்பல் நோயைத் தரும் 

சோம்பல் வெறுப்பை விதைக்கும் 

சோம்பல் அவநம்பிக்கையைத் தரும் 

சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும் 

சோம்பித் திரியாதே! 

சோம்பல் இருந்தால் 

பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும் 

கவலையை அதிகரிக்கும் 

உன்னால் முடிகிற 

சாதாரண வேலையைக் கூட 

"செய்ய முடியாது போல" 

என்று எண்ண வைக்கும் 


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ? 

அவ்வளவுக்கு அவ்வளவு 

உனக்கு மதிப்புக்கூடும். 

உனக்கு ஆற்றல் அதிகரிக்கும் 

உனக்கு நீ நினைத்தது 

எல்லாம் கிடைக்கும் 

படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும் 

அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி 

எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது 

ஆனால், உன் படிப்போ 

உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது! 

உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள். 

மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம் 

இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம் 

இருந்து கொண்டே இருக்க வேண்டும் 

அது "நான் சாதாரண குழந்தை அல்ல 

நான் சாதாரண பெண்ணல்ல 

நான் சாதிக்க பிறந்தவள் 

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது 

சாதிக்க பிறந்த நான் 

சோம்பேறியாக இருக்கக் கூடாது 

உலகத்தையே ஆள வேண்டிய நான் 

ஓய்வு எடுக்கக்கூடாது 

நான் ஓய்வு எடுத்தால் 

உலகத்தை யார் காப்பாற்றுவது? 

காற்று மழை கதிரவன் நிலா 

என்றாவது ஓய்வெடுத்ததுண்டா? 

ஏன் என் இதயம் கூட 

ஓய்வெடுத்ததில்லையே !

நான் ஓய்வு எடுக்கக்கூடாது !

கடவுள் என்னைப் படைத்தது 

ஓய்வு எடுக்க அல்ல !

கடவுள் என்னிடம் 

உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார் 

இந்த உலகத்தில் 

நான் சும்மா பிறக்கவில்லை 

நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !

அதனால் நான் சோம்பலை 

விட்டு விட வேண்டும் 

எல்லாருக்கும் முன்மாதிரியாக 

நான் இருக்க வேண்டும் !

உலகத்திற்கு புதிய வழியைக் 

கண்டுபிடித்து தர வேண்டும் 

உலகத்திற்கே வழிகாட்டியாக 

இருக்க வேண்டிய நான் 

முயற்சி இன்றி 

நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது! 

நான் இப்போது இருப்பது போன்று 

இருக்கலாமா? கூடாது!" 

என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்! 


எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது 


இதையெல்லாம் 

என்னுடைய ஆசைகளை 

கனவுகளை 

உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன் 

என்று தவறாக எண்ணி விடாதே! 

நீ யாரிடத்தும் 

எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது 

என்பதற்காகச் சொல்கிறேன். 

நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் 

அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து 

"படித்துக் கொண்டே இரு" 

அம்பேத்கரைப் போல....


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!

புதன், 11 டிசம்பர், 2024

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 


அன்பு மகளே... மது ஸ்ரீ...

எப்போதும் சுறுசுறுப்பாக இரு. 

சுற்றி இருப்பவற்றை உற்றுக் கவனி...

ஏன்? எதற்கு? என்று யோசி. 

கேள்விகளைத் தூக்கித் திரி. 

பரவாயில்லை ...

கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்குமோ? 

அங்கே தேடிப்பார். 


உனக்கு எது கிடைத்தாலும் 

அது உன்னுடைய முயற்சியால்... 

உன்னுடைய உழைப்பால் ...

கிடைத்ததாக இருக்க வேண்டும் 

உழைப்பைப் பெரிது என 

உணர்ந்து கொள்.

உழைப்பை நேசி !

உழைப்பு உன் உடலை வலுவாக்கும் !

உழைப்பு உனக்கு வலியைத் தருவதாக எண்ணாதே !

உழைப்பு உனக்கு வலிமையைத் தரும். 

உழைப்பு ஏற்படுத்தும் உடல் வலியோ,

சலிப்போ, சோர்வோ 

எதுவாகினும் கலங்காதே !

சிறிது ஓய்வெடு. 

மீண்டும் உழை.

உன் நெற்றி வியர்வை 

மண்ணில் விழ வேண்டும் !

அது, நீ பிறந்த பூமிக்குத் 

திருப்பி தரும் பரிசு. 

நீ முயன்று முயன்று 

படிப்பதும் உழைப்புதான்  


நீ உன்னை 

மதிக்க கற்றுக்கொள் !

நீ உன்னை 

நம்பக் கற்றுக்கொள் !

நீ உன்னை நேசி !

நீ உன் உடலை நேசி !

நீ உன் உள்ளத்தை நேசி !

நீ உன்னைக் கடவுளின் 

குழந்தையாகக் கருதிக்கொள் 

ஆம். 

பூமியில் உள்ள அனைவருமே 

கடவுளின் குழந்தைகள்தான்.

கடவுளின் குழந்தைகளுக்கு 

கடவுளின் சக்தி அனைத்தும் உண்டு! 


உன்னிடம் சக்தி இருக்கிறது 

அதைக் கண்டுபிடி 

உனக்கு என்ன செய்ய பிடித்திருக்கிறது 

என்று கண்டுபிடி. 

அது, உனக்கு நன்மை செய்கிறதா? 

என்று யோசி! 

உனக்கு மட்டுமல்ல... 

உன் உடன் இருப்பவருக்கும் 

நன்மை தருமானால் 

அதையே திரும்பத் திரும்பச் செய் 

கஷ்டப்பட்டு பிறருக்காகப் 

பிடிக்காததைச் செய்யாதே! 

இஷ்டப்பட்டதால் பிறருக்குப் 

பிடிக்காததை செய்யாதே!

நீ செய்வது உனக்கும் பிடிக்க வேண்டும் 

உன் உடன் இருப்பவருக்கும் பிடிக்க வேண்டும் 

உன்னால் உன்னைச் சுற்றிருப்பவருக்கு 

நன்மை இருக்க வேண்டும் !

பிறருக்குத் தீங்கு செய்யாதே !

முடிந்தவரை நன்மையே செய் !

நன்மை செய்ய முடியாதபோது 

அமைதியாய் இருந்து விடு.

எப்போதும் அமைதியை விரும்பு. 

ஆனால், அமைதியாக இருந்து விடாதே! 


அனைவரிடமும் அன்பாகப் பேசு 

உன்னை அனைவருக்கும் பிடிக்கும் 

என்று சொல்லுமாறு நடந்து கொள் !

ஆனால், சிலர் உன்மீது 

பொறாமைப் படலாம்.

அவர்களைக் கண்டுகொள்ளாதே! 

சிலர் நீ எது செய்தாலும் 

உன்னைக் குற்றம் சொல்லலாம் !

காது கேட்காததுபோல் நடந்துகொள்! 

வருத்தப்படாதே! 

எது நடந்தாலும் கலங்காதே! 

வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படு!

ஆனால், தோல்வி கிடைத்தால் 

வருந்தாதே! கலங்காதே! 

மீண்டும் முயற்சி செய்! 

எத்தனை முறை தோற்றாலும் 

கவலை கொள்ளாதே! 

உன் முயற்சியைக் கைவிடாதே! 

முயற்சி செய்வது மட்டும்தான் உன் கடமை. 

வெற்றி கிடைக்க வேண்டும் 

என்பது அவசியமில்லை! 

தோல்வியும் சில நேரம் நன்மை தரும்.

பல முயற்சிக்குப் பிறகும் தோற்றால் 

அதற்கு நீ காரணம் இல்லை 

என்று எண்ணிக் கொள்! 

எப்போதும் தெளிவான சிந்தனையுடனே இரு !

நல்ல நூல்களை வாசி. 

முடிந்தால்... நேரம் இருந்தால் ...

மீண்டும் மீண்டும் வாசி !

வாசித்ததைப் பற்றி 

கண்களை மூடிக்கொண்டு யோசி. 

இதுவரை யாரும் கண்டுபிடிக்காத அதிசயத்தை 

நீ கண்டுபிடிக்கலாம் !

கற்பனையாக எதையாவது சிந்தித்துப் பார்.

பல கண்டுபிடிப்புகள் 

கற்பனையிலிருந்து பிறந்தவைதான் ...

நல்ல நண்பர்களோடு பழகு 

தீய நண்பன் என்று தெரிந்துவிட்டால் 

அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லிவிடு...

உன் நட்பு வேண்டாம் என்று.


என்றும் எப்போதும் துணிவுடன் இரு! 

துணிவே துணை! என்பார்கள் 


நீ தவறு செய்துவிட்டால் 

பயப்படாதே! 

தாமதிக்காதே! 

ஆமாம். நான்தான் செய்தேன். 

தெரியாமல் நடந்து விட்டது, 

இனிமேல் செய்யமாட்டேன் 

என்று சொல்லக் கற்றுக்கொள்.

அதற்காகத் தவறு செய்யலாம் 

என்று சொல்லவில்லை! 

முடிந்தவரை தவறு செய்யாதே !

அவ்வாறு செய்தாலும் 

அதை மறைக்காதே! 

மறைப்பதுதான் பெரிய தவறு !

பொய் சொல்வது 

அதைவிடப் பெரிய தவறு !


எதைப் பற்றி வேண்டுமானாலும் 

அம்மாவிடம் பேசு 

அம்மா என்ன நினைப்பார்கள்? 

என்று தயங்காதே 

உன்னை முழுவதுமாகச் சுமந்தவள் !

உயிர் இருக்கும் வரை 

உன்னைப் பற்றியே நினைப்பவள்! 

உன்னைப்பற்றி 

எல்லாம் தெரிந்தாலும்,

நீயாகச் சொல்லாமல் 

அம்மாவால் உனக்கு வழிகாட்ட முடியாது. 

உன் மனதில் தோன்றும் 

எதுவாக இருந்தாலும் ...

உன் அம்மாவிடம் பேசு. 

உனக்கும் உன் அப்பாவாகிய எனக்கும் 

முப்பது ஆண்டுகள் இடைவெளி 

ஒரு தலைமுறை இடைவெளி 

உன் உலகம் எனக்குத் தெரியாது !

சில நேரம் உன் மீது கோவப்படுவேன். 

எல்லாம் உன் நன்மைக்காகவே !

அது உனக்கு கெடுதல் தந்தால்,

என்னை மன்னித்துவிடு! 

நான் தெரிந்தே 

உனக்குத் தீமை செய்ய மாட்டேன்! 


உன் ஆசைகள் எனக்குத் தெரியாது.

உன் தேவைகள் எனக்குத் தெரியாது.

எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லி, 

என்னிடம் கேட்டுக் கொள் !


நம்மைப் பிறர் மதிக்க வேண்டும் என்றால், 

நம்முடைய அறிவை 

வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

இவ்வளவு படித்தால் போதுமா? 

அவ்வளவு படித்தால் போதுமா? 

என்று எண்ணாதே !

உன் மனம் விரும்பும்வரை படி.

உன் படிப்பு 

உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். 

உன் படிப்பு 

உனக்கு வலிமையைத் தர வேண்டும் 

உன் படிப்பு 

உனக்கு நண்பர்களைத் தேடித் தர வேண்டும் 

அதனால், நன்றாகப் படி !

உனக்கு தன்னம்பிக்கை இருக்கும்வரை 

எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு மகளே!

திங்கள், 28 அக்டோபர், 2024

பிறந்தநாள் வாழ்த்து கவிதை -மாதிரி

இருபெருஞ்சுடரும் 

உனக்கு வழிகாட்ட,

இன்னமுத மழை

உன் வேருக்கு நீரூற்ற,

இருகடல் எழுந்து

உன் செவிக்கு இசையூட்ட,

இருநிலம் ஏந்தி

உன்னைத் தாலாட்ட,

இசைகொண்டு 

தமிழ்த்தாய் பாலூட்ட,

வான்மிசை தொட்டு

வளர்வாய் நீ!

ஆரமுதாய் விளைவாய் நீ!

அன்பிற்கினிய கபிஷ் நாத் 

உனக்கு என் இனிய 

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2024

தங்கமகளே

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட 

வெள்ளை அழகே !

கமகமக்கும் சந்தனமே!

மணமணக்கும் மரிக்கொழுந்தே !

என் வாழ்வின் நம்பிக்கைக் கீற்றே !

என் சிம்மாசனத்தின் மணிமகுடமே !

என் சிங்கமே !

தகதகக்கும் தங்கமே !

வீரத்தின் விளைநிலமே !

விவேகப் பேச்சே !

தெளிந்த மதியே !

பொருந்திய குணவதியே !

தாங்கி நிற்கும் தூணே! 

துள்ளி குதிக்கும் மீனே!

துயர் துடைக்கும் மானே! 

கட்டிக் கரும்பே! வெட்டி வேரே!

புதன், 9 அக்டோபர், 2024

அன்பு மகளே

என் உயிரே! ஆயிரங் காலத்துப் பயிரே!

என் கனவே! என்றென்றும் உன் நினைவே! 

நீ பிறந்த போது நானும் புதிதாய்ப் பிறந்தேன்! உள்ளம் மகிழ்ந்தேன்! நீ முழுதும் தேன்! என உணர்ந்தேன்.

உன்னை நினைத்தேன்! 

நினைத்தபொழுதெல்லாம்,

தேன் மழையில் நனைந்தேன்!

உன் பொக்கை வாய்ச்சிரிப்பில், பூ மலர்வதைக் கண்டேன்! 

நீ தவழ்கையில், உலகமே தவழ்ந்து கொண்டுதான் இருந்தது.

உன் குறுகுறு நடைக்கு ஈடு இணை ஏது?

உன் குடுகுடு ஓட்டம், முயலினை நினைவூட்டும்! 

உண்ண மறுக்கும் உனக்கு 

வித்தை காட்டி ஊட்டினேன்!

செல்லும் இடந்தோறும் உன்னை மறக்காமல் அழைத்துச் சென்று வந்தேன். 

எனக்கு உற்ற துணையாக வந்தாய்!

நாள்தோறும் வளர்ந்தாய்!

ஊரெல்லாம் சுற்றினோம் 

உண்டோம், குளித்தோம், களித்தோம்.

கிளியைப் போல மொழியைக் கற்றாய் !

எழுத்துக்களை உச்சரித்தாய் !

எழுத்துக்களைக் கூட்டி உயிரளித்தாய் !

அன்னை மொழியின் அமுதமொழி இனித்தது.

வாசித்தாய், வளர்ந்தாய், உயர்ந்தாய்!

அது கண்டு நிமிர்ந்தேன். பயிற்சிகள் பல தந்தேன். அதில் உனது வெற்றியைக் கண்டேன். உள்ளம் மகிழ்ச்சி கொண்டேன்.