தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2022

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி

அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அவர் மகான் இல்லை- ஆனால் 

உத்தம மனிதர் (2)

அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்

ஆளுமை மனிதர் (2)

அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்

கனவுகளைத் துரத்தியவர்(2)


ஆம்.வல்லரசு இந்தியா 

வளமான இந்தியா 

வறுமை இல்லா இந்தியா 

என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம். 

நான் விரும்பும் தலைவர் அவரே!

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.

இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர் 

நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.

"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,

ஒழுக்க சீலராக்கியது 

உயர்ந்த பண்பாளராக்கியது 

கடின உழைப்பாளராக்கியது. 

அவர் அசைவம் விரும்பாதவர் 

வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)

அவர் திருமணம் புரியாதவர்

எவருக்கும் தீமை புரியாதவர்.(2)

அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.

அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர். 

இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர். 

இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர். 

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர். 

அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.

அவர் பழகுவதில் குழந்தை 

சிந்திப்பதில் ஞானி 

மாணவர்களுக்கு நண்பன் 

நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி

 விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர் 

அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

திங்கள், 11 ஜூலை, 2022

கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.

வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.

அதைப்போல,

படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.

  1. வெள்ளத்தால் போகாது 
  2. வெந்தணலால் வேகாது 
  3. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
  4. கள்ளர்க்கோ பயமில்லை 
  5. காவலுக்கு மிக எளிது 
  6. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.

பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.

அதுபோல,

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.

காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  1. மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
  2. ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
  3. மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
  4. ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
  5. கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
  6. மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
  7. மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
  8. மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  9. பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
  10. தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
  11. கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
  12. கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
  13. காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!

நன்றி, வணக்கம்.