சனி, 2 டிசம்பர், 2023

நான் இந்தியாவின் பிரதமராக இருந்தால்-கவிதைப் போட்டி

உலகின் தலைசிறந்த பண்பாடு - நமது 

உயர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டாடு 

இனம் மொழி மத வேறுபாடு - நம்மில் 

இடர்பல வரும்போது ஒன்றுபடு 

என் இதயம் துடிக்கும் இந்தியன் என்று 

எமது பாரதம் நிலைக்கும் உலகை வென்று 

இளைய பாரதம் புதிய பாரதம் என் முன்னே 

எண்பது கோடி உழைக்கும் மக்களே 

எமது பாரதத்தின் பலம் 

வலுவான அடிப்படைக் கல்வி - உடன் 

திறன்மிக்க தொழிற்கல்வி 

வேளாண்மை அதில் தொழில்நுட்ப மேலாண்மை 

விரைவுப் போக்குவரத்து அதில் விரிவான பாதுகாப்பு 

தொழில் பெருக்கம் அதில் இயற்கைப் பாதுகாப்பு 

சீர்திருத்த நிர்வாகம் அதில் ஊழல் ஒழிப்பு 

ஏற்றத்தாழ்வு அகல சமவாய்ப்பு சம பகிர்வு 

இறையாண்மைக்கு கேடு இல்லாத சுதந்திரம் 

ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு நல்லிணக்கம் 

திட்டமிட்ட பொருளாதாரம் அதில் கடன் இல்லாத வளர்ச்சி 

நாட்டின் வளர்ச்சிக்காகவே அரசியல் 

அரசியலாகாத நாட்டின் பாதுகாப்பு 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பாதுகாப்பு 

வீடு குடிநீர் சுகாதாரம் 

கல்வி மருத்துவம் அனைவருக்கும் 

எங்கும் எதிலும் எண்மத் தொழில்நுட்பம் 

எங்கும் யாவர் முகத்திலும் மகிழ்ச்சிதான் பொங்கும். 

யாதும் ஊராய் யாவரும் கேளிராய் 

உலகிற்கே ஒளியாய் வழியாய் பிரதமராய் நான்.

திங்கள், 13 நவம்பர், 2023

தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்

 தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்

நானும் நண்பரும் தூண்டில் போட்டோம்

மீன்கள் வரிசையாக வந்து மாட்டின

அதில் ஒன்று குருட்டு மீன்.  பாவம் அதை விட்டுவிடு என்றார் நண்பர்.

நானும் பாவம் என்றேன். இதுநாள் வரையிலும் இந்த மீன் வாழ்க்கையோடு போராடியுள்ளது. இனிமேலும் இந்த மீன் கஷ்டப்படக் கூடாது. மீன் தனக்காகப் பிறக்கவில்லை. யாரோ ஒருவருக்கு உணவாகத்தான் பிறந்தது. எனவே இதை விடக்கூடாது. சமைத்து உண்ண வேண்டும் என்றேன். இந்த சிந்தனைக்கிடையே, கடவுளும் என்னைப்போல் சிந்தித்துத்தான் வாழ்க்கையின் விளிம்பில் வாழ்பவர்களின் உயிர்களைப் பறித்துக் கொள்கிறாரா? என்று தோன்றியது. இதயம் கனத்தது.

செவ்வாய், 7 நவம்பர், 2023

சிறந்ததில் சிறந்தவை

மலேசியக் கவிஞர் அ.முத்தரையனார்

அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம் 
துன்புறும் உயிர்கள் கண்டால் 
துரிசறு கனிவு காண்போம் 
வன்புகழ் கொடையில் காண்போம் 
வலிமையைப் போரில் காண்போம் 
தன் பிறப்புரிமை யாகத் 
தமிழ்மொழி போற்றக் காண்போம்.

கவிமணி தேசிக விநாயகனார்

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் -ஏழை 
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? 
தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் 
செல்வது ஒரு நாளும் இல்லை ஐயா!


புறநானூறு-கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

தமக்கென முயலா நோன்றாள்- பிறர்க்கென 
முயலுநர் உண்மையானே

முனிவிலர் துஞ்சலும் இலர்



வள்ளலார் 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

அன்னை தெரசா 

வாழ்க்கை என்பது 
நீ சாகும் வரை அல்ல 
மற்றவர் மனதில் 
நீ வாழும் வரை

தாராபாரதி 

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் 
தேசம் உடுத்திய நூலாடை

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி 
அறத்தின் ஊன்றுகோல்


கலீல் கிப்ரான் 

உழைக்கும் போது நீங்கள் 
புல்லாங் குழலாகிவிடுகிறீர்கள்

உங்கள் சுயத்துடன் 
நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது 
நீங்கள் நல்லவர்

பாரதிதாசன் 

இன்பத் தமிழ் கல்வி யாவரும் கற்றவர் 
என்று உரைக்கும் நிலை எய்தி விட்டால் 
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் 
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!

நாலடியார்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை 
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் 
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன 
விச்சைமற்று அல்ல பிற

தனிப்பாடல் திரட்டு 

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் 
வேகாது வேந்தராலும் 
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் 
நிறைவன்றிக் குறைவுறாது 
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு 
மிக எளிது கல்வி என்னும் 
உள்ள பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர் 
பொருள் தேடி உழல்கின்றீரே

பாரதியார் 

நெஞ்சில் ஈரம் இன்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடி - கிளியே 
வாய்ச்சொல்லில் வீரரடி 
கூட்டத்தில் கூடி நின்று 
கூவிப் பிதற்றலின்றி 
நாட்டத்தில் கொள்ளாரடீ - கிளியே 
நாளில் மறப்பாரடீ.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி 
காட்சி கெடுத்திடலாமோ?

ராஜ மார்த்தாண்டன்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 
குன்றுகளின் நடுவே மாமலை போல

கலாப்ரியா

குழந்தை 
வரைந்தது 
பறவைகளை மட்டுமே 
வானம் 
தானாக உருவானது

காவற்பெண்டு

ஈன்ற வயிறோ இதுவே 
தோன்றுவன் மாதோபோர்க்களத் தானே

திருமந்திரம்

துணையாய் வருவது தூய நற்கல்வி

தொல்காப்பியம்

ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் 
பெருக நூலில் பிழைபாடிலனே

முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்

வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல் 
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் 
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் 
அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல் 
வினாதல் வினவியவை விடுத்தல் என்று இன்னவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்


அவர்கள் மூளையில் 
விதையைப் போல 
தூவப்பட வேண்டிய அறிவு 
ஆணியைப் போல 
அறையப்படுகின்றது 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விடுதலை

ஏழைகள் விடுதலை அடைய வேண்டுமானால் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

ஏழைகளுக்குச் சாப விமோசனம் தருவது கல்வியே ஆகும்.

வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையது மட்டுமே கல்வி. மற்றவை எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்.

உணர்ந்து கற்காத பாடம் எதுவும் பயன் தராது.  வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் கல்வியைப் பயனுள்ளதாக்கும்.

ஞாயிறு, 7 மே, 2023

உழை

 

கஷ்டப்படாமல் வாழ வேண்டுமென்றால் முதலில் கஷ்டப்படு.

ஆயிரம் அண்டா சோற்றை ஒரே நாளில் தின்றுவிட முடியாது. ஆயிரம் நாட்களில் உழைக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் முடித்து விட முடியாது.

வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது. ஆனால், என்றாவது ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும். .

நல்ல நேரம் வரட்டும் என்று காத்திராதே!

நல்ல நேரம் என்று ஒன்று உண்டு என்றால் அது இந்த வினாடி மட்டுமே!

ஏதாவது செய்ய நினைத்தால் அதை இந்த வினாடியே செய்துவிடு!!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பொது

தனித்து இருக்கும் போது

பொதுநலமும்

பொதுவில் இருக்கும் போது

சுயநலமும்

புகுந்து விடுகிறது 

வியாழன், 23 பிப்ரவரி, 2023

அறிவும் உறுதியும் உழைப்பும்

வறட்சிக் காலத்தில்

தன்னைத் தாங்கிப் பிடிக்கத்

தன் இலைகள் உதிர்க்கும் மரம்

தன் அழகு 

குலைவது குறித்துக்

கவலை கொள்வதில்லை!

கடுகினும் சிறுவிதை

காகம் குருவியினம் விதைத்த விதை

கரும்பாறையில் விழுந்தாலும்

கருத்துடனே உறுதியாய்

கருமுளையைப் பாய்ச்சிட்டே

கற்பாறையைப் பிளந்திடும்!

எதிர்வரும் மழையில்

தன் இனம் பிழைக்க

முன்னதாகவே இரைசேகரிக்கும் 

எறும்புக் கூட்டம்

முன்புத்தியின் அடையாளம்!


புதன், 22 பிப்ரவரி, 2023

உணவகம்

உணவகங்களின் பெருக்கம்

நாகரிகத்தின் குறியீடு அல்ல!

பண்பாட்டுச் சிதைவு!

உடல்நலனுக்கு ஒவ்வாத

முற்றிலும் சூழலுக்கு மாறுபட்ட

உணவு ...உணவல்ல...விஷம்!

ஒரு வாழிடச் சூழலில்

வாழும் மரம்கூட

வேறிடச் சூழலில் வாழ முடிவதில்லை...

காலநிலைக்கும் 

வாழும் சூழலுக்கும்

ஏற்ற உணவே உணவு...

வீட்டுச் சமையலில்

பால் வேறுபாடு கூடாது.

அது அவரவர் 

வீட்டுச் சூழலைப் பொறுத்தது.

உழைப்பு

உழைப்பவருக்குத்தான் 

உழைப்பை மதிக்கத் தெரியும்!

தேரின் மேல் அமர்ந்து இருப்பவருக்குக்

குதிரையின் கால்வலி எப்படித் தெரியும்?

பிரசவத்தைப் பார்ப்பவரின் வலியும்

பிரசவித்த தாயின் வலியும் ஒன்றாகாது.

உழைப்பவரே உயர்ந்தவர்! - பிறர்

உழைப்பைத் திருடிப் பிழைப்பவர்

சிவிகையில் சிங்காரமாய் இருந்தாலும்

இழிந்தவரிலும் இழிந்தவரே!

தேனின் சுவையில் தேனீக்களின்

தெவிட்டாத தேடல் தெரிய வேண்டும்!

வெள்ளியென மின்னும் அன்னத்தின் சுவையில்

உழவனின் உழைப்பு ஒளிர வேண்டும்!!



செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

இலவசமும் கட்டணமும்

அரசு வழங்கும் 

இலவசப் பொருள்களுக்கு எல்லாம் அதிகாரிகள் 

குறிப்பிடாத கட்டணங்களை 

பெற்றுக் கொண்டுதான் 

தருகிறார்கள். 

பெரு நிறுவனங்கள் 

விற்பனைப் பொருள்களுக்கெல்லாம் 

குறிப்பிட்ட இலவசங்களை 

அள்ளித் தருகின்றன. 

இலவசங்களில் எல்லாம் கட்டணங்கள். 

கட்டணங்களில் எல்லாம் இலவசங்கள். 


மதிப்புள்ள பொருளை எல்லாம் 

மதிப்பற்ற முறையில் வழங்கினால், 

அது அரசாங்கம். 

மதிப்பற்ற பொருளை எல்லாம் 

மதிப்புள்ள முறையில் வழங்கினால், 

அது பெருநிறுவனம்.

நாட்டை நல்லவர் ஆள்வதில்லை. ஏன்?

 பல நேரங்களில் ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்லவற்றைப் பற்றிய சிந்தனைகளில் நான் ஆழ்வதுண்டு. நாட்டை ஆளும் தலைவர்களில் ஏன் நல்லவர்களைக் காண முடிவதில்லை என்று பல வேளைகளில் ஐயப்பட்டிருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளால், “கிணற்றுக்குள் தொலைத்த மோதிரத்தைத் தேடுவது” போல ஆழ்ந்து தேடி இருக்கிறேன். 

அப்போதெல்லாம் "இது கலிகாலம், தீயவர்களின் ஆதிக்க காலம், மக்களின் அறியாமைக் காலம்" என்று நினைத்திருக்கிறேன். 

"நல்லவர்கள் அரசியலுக்கு வர அஞ்சுகிறார்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணுகிறார்கள்" என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன். 

"அனைவரும் ஓட்டுப் போட்டால் தானே நல்லவர்கள் ஆட்சிக்கு வர முடியும்" என்று கூட சிந்தித்து இருக்கிறேன். 

"காசு வாங்கிட்டு அறியாமையால் அல்லது விசுவாசத்தால் ஓட்டு போட்டு தீயவர்களைத் தலைவராக்குகிறார்களே" என்று எண்ணி இருக்கிறேன்.

 "மக்கள் அனைவரும் நல்லவர்கள் தான். தனித்திருக்கும் போது மிகவும் நல்லவர்கள்". 

"தலைவர்கள் தான் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள். அறியாமைக்கு ஆட்படுத்துகிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். குழப்புகிறார்கள். ஆசையைக் காட்டி, ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்றுதான் இதுவரை எண்ணியிருக்கிறேன். 

ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்ல குணங்களோடு கட்டுப்பாட்டோடு நல்லவனாய் எல்லா மனிதராலும் இருக்க முடிவதில்லை. நல்ல குணங்களை விரும்பி ஏற்றுக் கொண்டு மனக்கட்டுப்பாடு, சுயக் கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள் சிலரே. பெரும்பாலானோரால் அப்படி வாழ முடிவதில்லை. 

தன்னால்தான் சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் நேர்மையோடு வாழ முடியவில்லை என்று எண்ணும் பெரும்பான்மையானோர் தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

ஆனால், அவர்கள் தன்னை ஆளத் தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். அதில் விஞ்சி நிற்பது தற்காப்பு. 

தன்னை விட நேர்மையானவரிடம் தன்னை ஆளும் தகுதியை ஒப்படைத்தால், தான் தவறிழைக்கும் போது நேர்மையாளன் தன்னைத் தண்டித்து விடுவான் என்கின்ற அச்ச உணர்வு மிகுதியால்தான், சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நபரை அல்லது அரைகுறை அறிவுள்ளவனை அல்லது தவறுகளை மன்னிப்பவனை அல்லது அனுசரித்துச் செல்பவனை அல்லது தலையாட்டிப் பொம்மையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இத்தகைய சுயநலப் போக்கால்தான் நல்லவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடிவதில்லை. 

யார் தலைவனாக வேண்டும்? என்பதை விட, நல்லவர்கள் தலைவனாக வரக்கூடாது என்பதில் பெரும்பான்மையோர் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். 

நல்லவன் தலைவனானால் என்ன நடக்கும்? குறைந்த ஒழுக்கம், குறைந்த கட்டுப்பாடு, குறைந்த நேர்மையை உடையவர்களுக்குத் திண்டாட்டம் தானே! அவர்களின் குற்றங்கள் கண்டிக்கப்படும் அல்லவா!! தண்டிக்கப்படும் அல்லவா!!! அந்த அச்ச உணர்வால் தான் நல்லவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை?!


வியாழன், 16 பிப்ரவரி, 2023

பொன்னான பொன்மொழிகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

உன் உழைப்பு ஒவ்வொன்றும் வெறும் வியர்வை அன்று. ஒவ்வொன்றும் வைரக்கல்.

உனக்கு நீயே நீதிபதியாக இரு. அப்போது தான் உன் தவறுகளுக்கு நீ தண்டனை தர முடியும்.

உன் மனச்சாட்சியே கடவுள். உன் கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இரு.

சிறகுகளை விரித்தால் பறக்கலாம். சிந்தையை அடக்கினால் செய்கையில் சிறக்கலாம்.

ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்.

பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பதல்ல. பலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

அஞ்சாமை தான் அறியாமை என்னும் மலையைத் தகர்த்து உடைக்கும் அணுகுண்டு

எந்தச் செயல் உன்னை வலிமையானவனாக உணர வைக்கிறதோ அச்செயலைத் திரும்பத் திரும்பச் செய்

வலிமை தான் வாழ்வு. வலிமைதான் மகிழ்ச்சி. பலவீனம் இடைவிடாத சித்திரவதை ஆகவும் துன்பமாகவும் அமையும் என்பதால், உனது வலிமையைப் பெருக்குவதிலேயே உன்னுடைய வாழ்க்கையைச் செலவிடு.

மலைகளைத் தகர்க்கும் மன உறுதி வேண்டும். தோல்வியுற்ற வாழ்க்கை வாழ்வதைவிட போர்க்களத்திலே போரிட்டு மடிவதே மேல். தோல்வியுற்ற வாழ்க்கை துயரமானது. வென்றே ஆக வேண்டும்.

ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சம் மீதியின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையும் சாதிக்க இயலாது.

அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவற்ற பொறுமை இவை நான்கும் அவசியம்.

எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேதான் இருக்கின்றன. அதை நீ உணர வேண்டும் என்றால், நீ உன் மீது அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

மரணம் என்பது உடையை மாற்றுவது போலதான். அதனால் மரணத்திற்கு அஞ்சாதே.

புதன், 8 பிப்ரவரி, 2023

சுற்றுப்புறத்தைச் சுவாசி

ஆபத்துக் காலத்தில் துண்டான பல்லியின் வால் முளைப்பது எப்படி?

மின்மினி பூச்சியின் வால் பகுதி ஒளிரும் ரகசியம் என்ன?

பருவகாலத்தை முன்னரே அறியும் கட்டெறும்பின் மூளைத்திறன் என்ன?

வசந்த காலத்திற்காக இலையை உதிர்த்து தளிர்த்துக் காத்திருக்கும் மரத்தின் அறிவாற்றல் என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைதேடும் சித்தராய் சிந்தனையைச் சீர்திருத்தி வை.

சுற்றுப்புறத்தை உற்றுநோக்கி சிந்தனையில் கரைந்து போ.

அது உன்னை ஞானி ஆக்கும்.

விஞ்ஞானி ஆக்கும்.

வியாழன், 26 ஜனவரி, 2023

சோம்பல் விலக்கு!

சோம்பல் விலக்கு!

வெட்டுப்படாமல்

வைரம் மின்னுமா?

கசக்கும் மருந்தின்றி

நோய் குணமாகுமா?

உளி படாமல்

கல் சிலையாகுமா?

முத்துக்குளிக்காமல்

முத்தெடுக்க முடியுமா?

முடியாதல்லவா?

நீ சோம்பி இருந்து

என்ன பயன்?


துன்பத்தை வேண்டு

துன்பத்தை வேண்டு

இருட்டைக் காணாதவன்

விடியலை உணர மாட்டான்..!

வெயிலில் வாடாதவன்

நிழலை விரும்ப மாட்டான்..!

துன்பத்தை அறியாதவன்

இன்பத்தில் மகிழ மாட்டான்...!

துன்பமே இன்பத்திற்கான வித்து!

முதலில் துன்பம்...

அதன்பின் பேரின்பம்!

துன்பம் வரின்

கவலை வேண்டாம்...

கலங்காதிரு...

பூட்டைக் கொடுத்தவனிடம்

சாவி நிச்சயம் இருக்கும் ...!


எதிர்கொள் மனமே..!

 எதிர்கொள் மனமே..!

உன்னால் முடியும் என்று

நம்பிதான்

கடவுள் எனக்கு

நிறைய துன்பம் தருகிறார்.

கடவுள் என்மீது வைத்த

நம்பிக்கையை

வீணாக்க மாட்டேன்...