புதன், 11 டிசம்பர், 2024

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 


அன்பு மகளே... மது ஸ்ரீ...

எப்போதும் சுறுசுறுப்பாக இரு. 

சுற்றி இருப்பவற்றை உற்றுக் கவனி...

ஏன்? எதற்கு? என்று யோசி. 

கேள்விகளைத் தூக்கித் திரி. 

பரவாயில்லை ...

கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்குமோ? 

அங்கே தேடிப்பார். 


உனக்கு எது கிடைத்தாலும் 

அது உன்னுடைய முயற்சியால்... 

உன்னுடைய உழைப்பால் ...

கிடைத்ததாக இருக்க வேண்டும் 

உழைப்பைப் பெரிது என 

உணர்ந்து கொள்.

உழைப்பை நேசி !

உழைப்பு உன் உடலை வலுவாக்கும் !

உழைப்பு உனக்கு வலியைத் தருவதாக எண்ணாதே !

உழைப்பு உனக்கு வலிமையைத் தரும். 

உழைப்பு ஏற்படுத்தும் உடல் வலியோ,

சலிப்போ, சோர்வோ 

எதுவாகினும் கலங்காதே !

சிறிது ஓய்வெடு. 

மீண்டும் உழை.

உன் நெற்றி வியர்வை 

மண்ணில் விழ வேண்டும் !

அது, நீ பிறந்த பூமிக்குத் 

திருப்பி தரும் பரிசு. 

நீ முயன்று முயன்று 

படிப்பதும் உழைப்புதான்  


நீ உன்னை 

மதிக்க கற்றுக்கொள் !

நீ உன்னை 

நம்பக் கற்றுக்கொள் !

நீ உன்னை நேசி !

நீ உன் உடலை நேசி !

நீ உன் உள்ளத்தை நேசி !

நீ உன்னைக் கடவுளின் 

குழந்தையாகக் கருதிக்கொள் 

ஆம். 

பூமியில் உள்ள அனைவருமே 

கடவுளின் குழந்தைகள்தான்.

கடவுளின் குழந்தைகளுக்கு 

கடவுளின் சக்தி அனைத்தும் உண்டு! 


உன்னிடம் சக்தி இருக்கிறது 

அதைக் கண்டுபிடி 

உனக்கு என்ன செய்ய பிடித்திருக்கிறது 

என்று கண்டுபிடி. 

அது, உனக்கு நன்மை செய்கிறதா? 

என்று யோசி! 

உனக்கு மட்டுமல்ல... 

உன் உடன் இருப்பவருக்கும் 

நன்மை தருமானால் 

அதையே திரும்பத் திரும்பச் செய் 

கஷ்டப்பட்டு பிறருக்காகப் 

பிடிக்காததைச் செய்யாதே! 

இஷ்டப்பட்டதால் பிறருக்குப் 

பிடிக்காததை செய்யாதே!

நீ செய்வது உனக்கும் பிடிக்க வேண்டும் 

உன் உடன் இருப்பவருக்கும் பிடிக்க வேண்டும் 

உன்னால் உன்னைச் சுற்றிருப்பவருக்கு 

நன்மை இருக்க வேண்டும் !

பிறருக்குத் தீங்கு செய்யாதே !

முடிந்தவரை நன்மையே செய் !

நன்மை செய்ய முடியாதபோது 

அமைதியாய் இருந்து விடு.

எப்போதும் அமைதியை விரும்பு. 

ஆனால், அமைதியாக இருந்து விடாதே! 


அனைவரிடமும் அன்பாகப் பேசு 

உன்னை அனைவருக்கும் பிடிக்கும் 

என்று சொல்லுமாறு நடந்து கொள் !

ஆனால், சிலர் உன்மீது 

பொறாமைப் படலாம்.

அவர்களைக் கண்டுகொள்ளாதே! 

சிலர் நீ எது செய்தாலும் 

உன்னைக் குற்றம் சொல்லலாம் !

காது கேட்காததுபோல் நடந்துகொள்! 

வருத்தப்படாதே! 

எது நடந்தாலும் கலங்காதே! 

வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படு!

ஆனால், தோல்வி கிடைத்தால் 

வருந்தாதே! கலங்காதே! 

மீண்டும் முயற்சி செய்! 

எத்தனை முறை தோற்றாலும் 

கவலை கொள்ளாதே! 

உன் முயற்சியைக் கைவிடாதே! 

முயற்சி செய்வது மட்டும்தான் உன் கடமை. 

வெற்றி கிடைக்க வேண்டும் 

என்பது அவசியமில்லை! 

தோல்வியும் சில நேரம் நன்மை தரும்.

பல முயற்சிக்குப் பிறகும் தோற்றால் 

அதற்கு நீ காரணம் இல்லை 

என்று எண்ணிக் கொள்! 

எப்போதும் தெளிவான சிந்தனையுடனே இரு !

நல்ல நூல்களை வாசி. 

முடிந்தால்... நேரம் இருந்தால் ...

மீண்டும் மீண்டும் வாசி !

வாசித்ததைப் பற்றி 

கண்களை மூடிக்கொண்டு யோசி. 

இதுவரை யாரும் கண்டுபிடிக்காத அதிசயத்தை 

நீ கண்டுபிடிக்கலாம் !

கற்பனையாக எதையாவது சிந்தித்துப் பார்.

பல கண்டுபிடிப்புகள் 

கற்பனையிலிருந்து பிறந்தவைதான் ...

நல்ல நண்பர்களோடு பழகு 

தீய நண்பன் என்று தெரிந்துவிட்டால் 

அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லிவிடு...

உன் நட்பு வேண்டாம் என்று.


என்றும் எப்போதும் துணிவுடன் இரு! 

துணிவே துணை! என்பார்கள் 


நீ தவறு செய்துவிட்டால் 

பயப்படாதே! 

தாமதிக்காதே! 

ஆமாம். நான்தான் செய்தேன். 

தெரியாமல் நடந்து விட்டது, 

இனிமேல் செய்யமாட்டேன் 

என்று சொல்லக் கற்றுக்கொள்.

அதற்காகத் தவறு செய்யலாம் 

என்று சொல்லவில்லை! 

முடிந்தவரை தவறு செய்யாதே !

அவ்வாறு செய்தாலும் 

அதை மறைக்காதே! 

மறைப்பதுதான் பெரிய தவறு !

பொய் சொல்வது 

அதைவிடப் பெரிய தவறு !


எதைப் பற்றி வேண்டுமானாலும் 

அம்மாவிடம் பேசு 

அம்மா என்ன நினைப்பார்கள்? 

என்று தயங்காதே 

உன்னை முழுவதுமாகச் சுமந்தவள் !

உயிர் இருக்கும் வரை 

உன்னைப் பற்றியே நினைப்பவள்! 

உன்னைப்பற்றி 

எல்லாம் தெரிந்தாலும்,

நீயாகச் சொல்லாமல் 

அம்மாவால் உனக்கு வழிகாட்ட முடியாது. 

உன் மனதில் தோன்றும் 

எதுவாக இருந்தாலும் ...

உன் அம்மாவிடம் பேசு. 

உனக்கும் உன் அப்பாவாகிய எனக்கும் 

முப்பது ஆண்டுகள் இடைவெளி 

ஒரு தலைமுறை இடைவெளி 

உன் உலகம் எனக்குத் தெரியாது !

சில நேரம் உன் மீது கோவப்படுவேன். 

எல்லாம் உன் நன்மைக்காகவே !

அது உனக்கு கெடுதல் தந்தால்,

என்னை மன்னித்துவிடு! 

நான் தெரிந்தே 

உனக்குத் தீமை செய்ய மாட்டேன்! 


உன் ஆசைகள் எனக்குத் தெரியாது.

உன் தேவைகள் எனக்குத் தெரியாது.

எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லி, 

என்னிடம் கேட்டுக் கொள் !


நம்மைப் பிறர் மதிக்க வேண்டும் என்றால், 

நம்முடைய அறிவை 

வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

இவ்வளவு படித்தால் போதுமா? 

அவ்வளவு படித்தால் போதுமா? 

என்று எண்ணாதே !

உன் மனம் விரும்பும்வரை படி.

உன் படிப்பு 

உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். 

உன் படிப்பு 

உனக்கு வலிமையைத் தர வேண்டும் 

உன் படிப்பு 

உனக்கு நண்பர்களைத் தேடித் தர வேண்டும் 

அதனால், நன்றாகப் படி !

உனக்கு தன்னம்பிக்கை இருக்கும்வரை 

எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு மகளே!

வியாழன், 7 நவம்பர், 2024

பல்வகை

அரிது அரிது 

அரிதினும் அரிது மானிடப் பிறப்பு 

அதனினும் அரிது குறையின்றிப் பிறத்தல் 

அதனினும் அரிது நல்லோர்சொல் கேட்டல் 

அதனினும் அரிது தேர்ந்து கற்றல் 

அதனினும் அரிது நல்லோர் நட்பு 

அதனினும் அரிது அன்பைச் சேர்தல் 

அதனினும் அரிது கவலை ஒழித்தல் 

அதனினும் அரிது ஞானம் பெறுதல் 

அதனினும் அரிது தாய்மை யாமே!

உண்மை

அரிச்சந்திரன் வாழ்வு

அஸ்தமனம் 

அடையும் வேளையிலும்

அவனுள்ளம் 

அசுத்தமடைய வில்லை. 

கடமையே பெரிதாய்

வாய்மையே வாழ்வாய்

வாழ்வுக்கு இலக்கணமாய்

வாழ்ந்தவன் 

காந்திக்கு மட்டுமல்ல 

யாவர்க்கும் வழிகாட்டி.

நிறைகுறை

இருள் அதிகம், ஒளி குறைவு

மருள் அதிகம், மதி குறைவு

பொய் அதிகம், மெய் குறைவு

மண் அதிகம், பொன் குறைவு

கரி அதிகம், வைரம் குறைவு

அதிகமெல்லாம் பெருமையல்ல!

குறைவெல்லாம் சிறுமையல்ல!

சிந்தனை 

கோடி நினைப்பு 

ஓர் நொடிக்குள் 

ஓடிப் பாய்ந்து 

மாய்ந் திடினும் 

வாடி நிற்கும் 

வாழ்வு செழிக்க 

தேடிப் பார்க்கும் 

நினைப் பில்லையே !

தவம்அது 

வேண்ட வேண்ட வரம்தரும் !

தண்ணீர்அது 

தோண்டத் தோண்ட ஊறும்!

வைரம்அது 

வெட்ட வெட்ட மின்னும்!

பொன்அது 

சுடச்சுட ஒளிரும் !

வாழ்வுஅது 

துன்பம் வருத்தும் அளவிற்கே!

உதவி

மழை மறுபயன் கருதாமல் பொழிகிறது !

மரம் மறுபயன் கருதாமல் காய்க்கிறது !

நிலம் மறுபயன் கருதாமல் சுமக்கிறது !

மனிதா! 

மறுபயன் கருதாமல் மானிடர்க்கு உதவு 

மனக்கவலை ஒழியும்! 

மாண்புகழ் பெறுவாய்! 

இன்றேல் 

துரோகம், 

ஏமாற்றம், மனச்சோர்வு, விரக்தி 

யாவும் குடிபுகுமே!

மாறாமை

தாமரைக் குளத்துள்ளே பிறப்பினும்

தவளையின் குணமது மாறிடுமோ?

அமிர்தமழை ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெய்திடினும்

ஆழ்கடல் நீர்தான் தித்திக்குமோ?

பாலோடு தேனூற்றி வார்த்தாலும் இலவம்

பஞ்சேயன்றி பழுத்தகனி தந்திடுமோ?

கயமாணாக்கர் மனங்கோணும் செய்கையன்றி

கடுகளவும் அன்பில் ஒழுக மாட்டாரே!

திருமண வாழ்த்து 

செல்லம் நீ! 

ஜோதிலிங்கராஜீன் செல்வம் நீ!

கோடித் தொலைவில் இருப்பினும்

சூரியனைக் கண்டு மலரும் 

தாமரை நீ!

மண்ணில் விளைந்த பொன்னாய்

கடலில் விளைந்த முத்தாய் 

மலையிடைப் பிறந்த மணியாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

சந்தனத்தின் நறுமணமாய்

கதிர் ஒளியாய்

ஒளியும் மணமும் நிறைந்து,

கடலில் கலக்கும் நதியாய் 

உடலில் ஓடும் உயிராய் 

தாமரை மலரின் இதழாய் 

கண்ணைக் காக்கும் இமையாய் 

அணுவின் பிணைப்பாய்

என்றும் இணைந்து 

உள்ளம் கனிந்து

தேன்போல் சிறந்து

நீடுழி நீடுழி வாழிய வாழிய 

எனவே வாழ்த்துகின்றேன் !!!




புதன், 30 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

இவ்வினிய தீபத் 
திருநாள் முதல் 
அலட்சிய அசுரன் 
அடியோடு அழியட்டும்! 
சினமென்னும் அரக்கன் 
வெடித்துச் சிதறட்டும் !
பொல்லாத பொறாமை 
பொசுங்கி அழியட்டும் !
பேரிடரில் ஆழ்த்தும் 
பேராசை அழியட்டும் !
அலைபேசி அரக்கன் 
ஆழ்மண்ணில் புதையட்டும்!
வதந்தி அரக்கன் 
உடல்வற்றி அழியட்டும் !
படிப்பறிவின்மை, 
பகுத்தறிவின்மையால் 
விளைந்த 
மயக்கம் என்னும் அரக்கன் 
மண்ணோடு மடியட்டும்!
வெறுப்பு அரக்கன் 
வெந்து அழியட்டும் !
மனக்குழப்பம், அடிமை உணர்வு 
என்னும் அசுரர்களை 
திசையெட்டிலும் கொளுத்துவோம் !!
இல்லமெங்கும் 
மானிடர் உள்ளமெங்கும் 
உண்மை ஒளி பரவட்டும்!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

திங்கள், 28 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

பேதங்கள் ஒழிந்து

நல்லிணக்கம் மலர்ந்து

கீழ்மை அகன்று

அறத்தின்பால் நின்று

அன்பால் கட்டி

அகிலத்தை நடத்தும்

அறிவொளி பரவட்டும்

திக்கெட்டும்.

தமிழன் என்றோ

திராவிடன் என்றோ

பாகுபாடு காட்டும் எண்ணம்

பழந்தமிழர் மரபில் கிடையாது.

சாதிய மத இன பிராந்திய

பாகுபாடு

தமிழர் பண்பாட்டிற்கு

எதிரானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்பதே தமிழர் பண்பாடு.

அந்த எண்ணம் மேலிட

நம் முன்னோர்களின் 

கடல் ஆளுமையே காரணம்.

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்.

ஒன்றே குலம்

என்னும் கருத்துடையவர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்

என்பது தமிழர் பண்பாட்டின் உச்சம்.

அயலாரை பிறமொழி தேயத்தார்

என்றே அழைத்தனர்.

பாகுபாடு காட்டுவது தமிழர்

மரபன்று. அது

அரசியல் சொல்லாடல்.

மக்களைப் பிரித்தாள்பவரின்

முயற்சிகளே 

ஆரியர் திராவிடர் தமிழர் 

இஸ்லாமியர் கிறித்துவர் 

மேட்டுக்குடி தலித் என்பன.

பாகுபாடு அகலட்டும்

தீப ஒளியில்!

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் 

காலம் மாறி கரியளவு மாறி

கால நிலைமாறி மேக நிலைமாறி 

மாரி நிலைமாறி மிகக்கன மழையிடர் 

மாறக் காண்பீர் காலநிலை பேணும்வழி.

நீரறிவாண்மை

ஆரிமழை யமிழ்தமாய்ப் பெய்திடினும் -எம்மவர் 

ஏரிகுளங்கால் வாயடைத்துத் தேங்கிய நீர்கண்டு 

தேம்பியழுதார் அழுவார்ப்பின் காலிக்குடங்க ளோடு

தேவரீர் தருவீர் நிலத்தடிநீர் தேரும் ஞானம்!

நீரறிவு

புயலில்லை சூறா வளியில்லை - கொட்டிப்

பெய்தநீ ரோடவில்லை வெள்ளமே யெங்கும் 

வெளிநாட்டின் காட்சிபோல் தென்னாடு திகைப்புறும்

நிலையொழிய நீரறிவு வேண்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இலக்கு என்னும் வயலைத் தேர்ந்தெடுத்து

உழைப்பு என்னும் ஏரால் உழவுசெய்து

நேர்மை என்னும் விதைவிதைத்து

விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி

தன்னம்பிக்கை என்னும் உரமிட்டு

சோம்பல் என்னும் களைபறித்து

கவனம் என்னும் வேலியிட்டு

வெற்றி என்னும் கனிபறிக்க

2024 அருள்புரியட்டும்!

பொங்கல் வாழ்த்து

கசந்த காலங்கள் கடந்து செல்ல

வசந்த காலங்கள் வந்து வாழ்த்த

நித்திரை கண்டது போதும் - நீ

வெல்லும் காலமே இனி எப்போதும்!

கரும்பு போலவே வாழ்க்கை இனிக்கட்டும்

பொங்கல் போலவே மகிழ்ச்சி பொங்கட்டும்

மஞ்சள் போலவே அழகு பெருகட்டும் 

வாழை போலவே வம்சம் தழைக்கட்டும்

மாவிலைத் தோரணமாய் மங்களம் சேரட்டும்.

ஆசிரியர் தினம்

தந்தையின் அக்கறையும்

தாயின் அன்பும்

இறைவனின் அருளும்

ஓருருவாய் வாய்த்த 

என் ஆசிரியர் சமூகத்திற்கு

அன்பு வணக்கம்!

உள்ளத் தூய்மையும் 

நன்னெறி வாழ்க்கையும் பூண்ட

நீங்கள் நீடுழி நீடுழி

நலம்வாழ இறைவனை வேண்டுகிறேன்!

உண்மை

கண்ணால் காண்பதெல்லாம் 

காட்சி அல்ல- அகக்

கண்கொண்டு காண்பதே காட்சி.

காதால் கேட்பதெல்லாம் 

கேள்வி அல்ல -மனக்

காதால் கேட்பதே ஞானம்

வாயால் பேசுவதெல்லாம் 

பேச்சல்ல -மனத்தில் 

இருந்து பேசுவதே பேச்சு 

திருமண நாள் 

வாழ்க்கைத் துணையாய் வந்து வாய்த்தவளே!

வராத வரமாய்த் துணை நின்றவளே!!

வாழும் காலமெல்லாம் விருந்து சமைத்தவளே !!!

இடைவந்த பிணியறுத்த அருமருந்தே !!!

கடைவந்து கவலை தீர்ப்பாய் ஆரமுதே !!!

அன்பே ! அழகே ! தேவதையே ! 

பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீந்தமிழே!

!!

ஆன்மீகம் 

இந்துக்களுக்கு முஸ்லீம்களுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை. 

யானைகளுக்கு எறும்புகளுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.

இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். அழிவற்றவர். மேலானவர். ஒருவர். பலர். வடிவினர். வடிவற்றவர். 

இறைவனைத் தன் உள்ளுணர்வால் கண்டுபிடித்தவன் மனிதன். இறைவனைப் பலவாறாகச் சித்தரித்தவன் மனிதன்.

மனத்தால் வழிபடப்பட வேண்டிய இறைவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் தோற்றுவித்து, கட்டுக்கதைகளை விதைத்து மனிதரில் பிரிவினை செய்தவன் மனிதன். இறைவனையே பலகூறாக்கிப் பிரித்தவனும் மனிதனே. மனிதரில் மனிதரைப் பிரித்துப் பகைமை வளர்த்தவனும் மனிதனே.

அறிவியல் கலவாத ஆன்மீகம் பயனற்றது. ஆன்மீகம் இல்லாத அறிவியலும் பயனற்றது.

விருப்பு வெறுப்பு இல்லாதவர் இறைவன். அவர் நல்லவர்களுக்கு வாரி வழங்குவதும் இல்லை. தீயோரைத் தண்டிப்பதும் இல்லை. இருவகைத்தார்க்கும் ஒன்றே செய்வார். நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்வதும் இல்லை. கெடுதல் செய்வோர் எல்லாம் கெடுவதும் இல்லை. எவர் மனவலிமை உடையவரோ அவரே வசதியுடன் வாழ்வார். நல்ல மனம் இருந்தும் மனத் திட்பம் இல்லாமல் இருந்தால் அவர் நல்லவராய் மட்டுமே வாழ்வார். நன்றாக வாழ மாட்டார்.

தீய மனம் கொண்டவர் மன உறுதியுடன் வாழ்ந்தால் அவர் கெட்டவராய் (மனம் போன போக்கில் கொடுமைகள் செய்து) இருந்தாலும் வசதியுடன் வாழ்வார். வாழ்வதற்கு மனத் திடம் முக்கியம். அதற்கு இறை நம்பிக்கை உதவலாம். இறை நம்பிக்கை இல்லை என்றால் நுண்ணறிவும் நூலறிவும் வேண்டும்.

மணற்கிணறு

கடிக்கும் போதுதான் தெரிகிறது

கரும்பு எவ்வளவு இனிக்கும் என்று!

உழைக்கும் போதுதான் தெரிகிறது

வியர்வையின் மதிப்பு என்னவென்று!

தோல்விக்குப் பின்தான் தெரிகிறது

வெற்றிக்கு என்ன வேண்டும் என்று!

படிக்கும் போதுதான் தெரிகிறது

கற்றது கைம்மண்ணளவு தானென்று!


நீரளவே ஆகும் நீர் ஆம்பல்

தோண்டும் அளவே சுரக்கும் மணற்கிணறு

வியர்வையின் அளவே விளைச்சல்

படிக்கும் அளவே நூற்பயன் ஆகுமப்பா!

தன்னம்பிக்கை கவிதை

ஓடுகிற நீரில் 

பாசி படியாது. 

உழைப்பாளி உள்ளமதில் 

கபடம் கலவாது. 

சமூகமே சாக்கடை ஆனாலும் 

தாமரை போல் மலருங்கள். 

நாற்றமெடுத்த சிப்பிக்குள்ளும் 

முத்துப்போலே ஒளிருங்கள்.

கவலைவிடு

தலையிலிருந்து இழிந்த மயிரை எண்ணி கோபமோ வருத்தமோ அடைய வேண்டியதில்லை. அதுபோலவே உணர்வு மாறுபட்டு, கருத்து வேறுபட்டு விலகிச் செல்லும் உறவுகளை எண்ணி விசனம் அடைய வேண்டியதில்லை. வழுக்கையே விழுந்தாலும், வழுக்கி விழுந்தாலும் கவலை வேண்டாம் 

தத்துவம் 

வாழ்க்கையின் தத்துவத்தை 

மதி கற்பிக்கிறது. 

வளர்வதும் தேய்வதும் 

மதி(நிலா)யும் அறிவும் 

மதிப்பும் மரியாதையும் 

என்று உணர்ந்து 

உணர்வுகட்கு ஆட்படாது 

இன்பத்தையும் துன்பத்தையும் 

சரிசமமாகப் பாவிக்கும் 

பக்குவம் பெறுவோம்.

ஞானம்

தீமை வேறு, தீமை செய்தவர் வேறு என்று உணரும் ஞானம் ஞானிகளுக்கே உரிதாம். 

திருமண நாள் வாழ்த்து - கவிதை

கடல் வானைச் சேர்வதும்

வான் கடலைச் சேர்வதும்,

பரிதியை மதி தொடர்வதும்

மதியைப் பரிதி தொடர்வதும்,

கடலைக் காற்று தழுவுவதும்

காற்றைக் கடல்தழுவுவது போல

உருவைத் தொடரும் நிழல்போல

உடலில் கலந்த உயிர்போல

ஒன்றின் ஒன்றாய்க் கலந்து

பல்லாண்டு பல்லாண்டு 

கூடி மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை -மாதிரி

இருபெருஞ்சுடரும் 

உனக்கு வழிகாட்ட,

இன்னமுத மழை

உன் வேருக்கு நீரூற்ற,

இருகடல் எழுந்து

உன் செவிக்கு இசையூட்ட,

இருநிலம் ஏந்தி

உன்னைத் தாலாட்ட,

இசைகொண்டு 

தமிழ்த்தாய் பாலூட்ட,

வான்மிசை தொட்டு

வளர்வாய் நீ!

ஆரமுதாய் விளைவாய் நீ!

அன்பிற்கினிய கபிஷ் நாத் 

உனக்கு என் இனிய 

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2024

சரஸ்வதி பூஜை

வைகறையில் துயிலெழுந்து,

ஓடி முடித்து, களித்து, குளித்து,

அமுதுண்டு, புத்தகங்களை அடுக்கி, 

சந்தனம் குங்குமமிட்டு 

வழிபட்டு வாஞ்சையுடன் முகத்தில் ஒற்றி 

சரஸ்வதியை வரவேற்று வணங்கி 

அடக்கமாகச் சம்மனம் இட்டு உட்கார்ந்து 

ஆசையுடன் படித்த பிள்ளைப்பருவ நாட்கள் 

வாஞ்சையுடன் வருடிச் செல்கின்றன என்னை இந்நாளில்...

தங்கமகளே

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட 

வெள்ளை அழகே !

கமகமக்கும் சந்தனமே!

மணமணக்கும் மரிக்கொழுந்தே !

என் வாழ்வின் நம்பிக்கைக் கீற்றே !

என் சிம்மாசனத்தின் மணிமகுடமே !

என் சிங்கமே !

தகதகக்கும் தங்கமே !

வீரத்தின் விளைநிலமே !

விவேகப் பேச்சே !

தெளிந்த மதியே !

பொருந்திய குணவதியே !

தாங்கி நிற்கும் தூணே! 

துள்ளி குதிக்கும் மீனே!

துயர் துடைக்கும் மானே! 

கட்டிக் கரும்பே! வெட்டி வேரே!

புதன், 9 அக்டோபர், 2024

வரவேற்புரை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ

அரசியலில் ஆழங்கால்பட்டவரே

அலைகடல் கூட்டத்தின் நாயகரே


ஆர்ப்பரிக்கும் கடலாய்

இடையறாது மக்கள் பணியாற்றும் கடமை வீரரே


உண்மை நேர்மை உழைப்பின் உறைவிடமே

ஊரெங்கும் சுற்றி வரும் தேரே


எண்ணம் சிதையாமல்

எடுத்த காரியம் குறையாமல்

ஏழையவர் குறைதீர்க்கும் மாமருந்தே


விருதுநகர் பெற்றெடுத்த தங்கமே-மும்முறை

வெற்றியை ருசித்த சிங்கமே


வாழ்நாளெல்லாம் மக்கள் பணியாற்றி வரும் மாமணியே-உம்மை

வருக வருக என வரவேற்பதில் இப்பள்ளி பெருமைகொள்கிறது.

அன்பு மகளே

என் உயிரே! ஆயிரங் காலத்துப் பயிரே!

என் கனவே! என்றென்றும் உன் நினைவே! 

நீ பிறந்த போது நானும் புதிதாய்ப் பிறந்தேன்! உள்ளம் மகிழ்ந்தேன்! நீ முழுதும் தேன்! என உணர்ந்தேன்.

உன்னை நினைத்தேன்! 

நினைத்தபொழுதெல்லாம்,

தேன் மழையில் நனைந்தேன்!

உன் பொக்கை வாய்ச்சிரிப்பில், பூ மலர்வதைக் கண்டேன்! 

நீ தவழ்கையில், உலகமே தவழ்ந்து கொண்டுதான் இருந்தது.

உன் குறுகுறு நடைக்கு ஈடு இணை ஏது?

உன் குடுகுடு ஓட்டம், முயலினை நினைவூட்டும்! 

உண்ண மறுக்கும் உனக்கு 

வித்தை காட்டி ஊட்டினேன்!

செல்லும் இடந்தோறும் உன்னை மறக்காமல் அழைத்துச் சென்று வந்தேன். 

எனக்கு உற்ற துணையாக வந்தாய்!

நாள்தோறும் வளர்ந்தாய்!

ஊரெல்லாம் சுற்றினோம் 

உண்டோம், குளித்தோம், களித்தோம்.

கிளியைப் போல மொழியைக் கற்றாய் !

எழுத்துக்களை உச்சரித்தாய் !

எழுத்துக்களைக் கூட்டி உயிரளித்தாய் !

அன்னை மொழியின் அமுதமொழி இனித்தது.

வாசித்தாய், வளர்ந்தாய், உயர்ந்தாய்!

அது கண்டு நிமிர்ந்தேன். பயிற்சிகள் பல தந்தேன். அதில் உனது வெற்றியைக் கண்டேன். உள்ளம் மகிழ்ச்சி கொண்டேன்.

சனி, 14 செப்டம்பர், 2024

வாகை சூடி

  1. அச்சம் அகற்று 
  2. ஆர்வம் கொள் 
  3. இளமையை உணர். 
  4. ஈட்டி போல் பாய் 
  5. உலகம் சுற்று 
  6. ஊரோடு இணங்கு 
  7. எளிமையாய் வாழ் 
  8. ஏறிச் செல் 
  9. ஐயம் விலக்கு 
  10. ஒன்றே உலகம் 
  11. ஓது ஓது 
  12. ஔவை சொல் கேள் 
  13. கவலை ஒழி 
  14. காது கொடு
  15. கிழக்கு உனக்கே 
  16. கீழ் மேலாகும் 
  17. குறட்பா படி 
  18. கூடி வாழ்   
  19. கெட்டோர் விலக்கு 
  20. கேட்டது கிடைக்கும் 
  21. கையை நம்பு 
  22. கொடுத்து வாழ் 
  23. கோணல் வேண்டாம் 
  24. சபதம் எடு 
  25. சாதித்துக் காட்டு 
  26. சிந்தனையை விரிவாக்கு 
  27. சீற்றம் வேண்டாம் 
  28. சும்மா இருக்காதே 
  29. சூடு சொரணை வேண்டும் 
  30. செருக்கு வேண்டாம் 
  31. சேமித்துப் பழகு 
  32. சைவம் நன்று 
  33. சொற்படி நட 
  34. சோற்றுக்கு உழை 
  35. தமரைப் பெருக்கு
  36. தாமதம் வேண்டாம் 
  37. திடமாயிரு 
  38. தீர விசாரி 
  39. துணிவுகொள் 
  40. தூரம் இல்லை 
  41. தெரிந்து கொள் 
  42. தேடிப்பார் 
  43. தைரியம் வேண்டும் 
  44. தொட்டது விடாதே 
  45. தோகை விரி 
  46. பண்பை வளர் 
  47. பாட்டி சொல் கேள் 
  48. பிதற்றல் வேண்டாம் 
  49. பீடை மற 
  50. புண்ணியம் செய் 
  51. பூமி உனக்கே 
  52. பெருமை கொள் 
  53. பேறு பெறு 
  54. பைசா சேர் 
  55. பொய் சொல்லாதே 
  56. போக்கிடம் தேடாதே 
  57. நன்மை செய் 
  58. நாட்டம் கொள் 
  59. நிலம் தொழு 
  60. நீர் சேமி 
  61. நுட்பம் அறி 
  62. நூல் உருவாக்கு 
  63. நெகிழ்ச்சி வேண்டும் 
  64. நேசம் காட்டு 
  65. நைந்து விடாதே 
  66. நொடியிலும் வாழ் 
  67. நோன்பு பழகு 
  68. மனசாட்சிப்படி வாழ் 
  69. மானம் பெரிது 
  70. மிரண்டு விடாதே 
  71. மீட்சி உண்டு 
  72. முயற்சி வெல்லும் 
  73. மூளையைச் சுத்தமாக்கு 
  74. மெல்லப் பேசு 
  75. மேற்கிலும் உதி 
  76. மொழி அறி 
  77. மோதிப்பார் 
  78. வலிமையை உணர் 
  79. வாய்ப்பைத் தவறவிடாதே 
  80. விடுதலை விரும்பு 
  81. வீறு கொள்
  82. வெற்றி உனதே 
  83. வேடிக்கை வேண்டாம் 
  84. வையம் வாழ்த்தும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

வரவேற்புரை

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

நகைச்சுவை மருத்துவர் ஞான சம்பந்தனை ஈன்றதால் முத்தமிழும் தமிழ்வளர்த்த மதுரையும் பெருமை கொள்கிறது.

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

அழிவில்லாத மானுடத்திற்கு உள்ளொளி பாய்ச்சுகின்ற உத்தமரே, வருக!


அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்

அடைக்கலம் வேண்டிக் கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள் 

அருந்தமிழோங்கச் சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்

அதுபோல,

அன்னைத்தமிழின் உள்ளம் மகிழ,

ஆற்றாமக்கள் சிந்தை மகிழ,

அருந்தமிழ்ச் சான்றோர் அகமகிழ,

நகைச்சுவை இலக்கியத்தின் நாயகராய்

வருகை தந்திருக்கும்,

இயற்றமிழ் வித்தகரே,

முதற்சுவை தீங்கனியே,

மூன்றாம்தமிழ் நாயகரே!

வருக! வருக!

நற்றமிழ் நாவலரே!

தமிழ் மரபுக் காவலரே!

வருக! வருக!

உவகை கவிஞரே! 

தமிழ் இலக்கியத்தின் சிற்றரசே!

வருக! வருக!

பண்டித மணியே!

கலை மாமணியே!

விருதுக்கு விருதானவரே!

பேராசிரியர்,

மேடைப்பேச்சாளர், 

நூலாசிரியர், 

நேர்முக வர்ணனையாளர், 

தன்னம்பிக்கைப் பேச்சாளர், 

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் 

கலைமாமணி திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களை

வருக! வருக! என வரவேற்பதில் 

மாமதுரைப் புத்தகத் திருவிழா பெருமை கொள்கிறது.