புதன், 30 அக்டோபர், 2024
தீபாவளி வாழ்த்துக்கள்
திங்கள், 28 அக்டோபர், 2024
தீபாவளி வாழ்த்துக்கள்
பேதங்கள் ஒழிந்து
நல்லிணக்கம் மலர்ந்து
கீழ்மை அகன்று
அறத்தின்பால் நின்று
அன்பால் கட்டி
அகிலத்தை நடத்தும்
அறிவொளி பரவட்டும்
திக்கெட்டும்.
தமிழன் என்றோ
திராவிடன் என்றோ
பாகுபாடு காட்டும் எண்ணம்
பழந்தமிழர் மரபில் கிடையாது.
சாதிய மத இன பிராந்திய
பாகுபாடு
தமிழர் பண்பாட்டிற்கு
எதிரானது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பதே தமிழர் பண்பாடு.
அந்த எண்ணம் மேலிட
நம் முன்னோர்களின்
கடல் ஆளுமையே காரணம்.
திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்.
ஒன்றே குலம்
என்னும் கருத்துடையவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்
என்பது தமிழர் பண்பாட்டின் உச்சம்.
அயலாரை பிறமொழி தேயத்தார்
என்றே அழைத்தனர்.
பாகுபாடு காட்டுவது தமிழர்
மரபன்று. அது
அரசியல் சொல்லாடல்.
மக்களைப் பிரித்தாள்பவரின்
முயற்சிகளே
ஆரியர் திராவிடர் தமிழர்
இஸ்லாமியர் கிறித்துவர்
மேட்டுக்குடி தலித் என்பன.
பாகுபாடு அகலட்டும்
தீப ஒளியில்!
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
காலம் மாறி கரியளவு மாறி
கால நிலைமாறி மேக நிலைமாறி
மாரி நிலைமாறி மிகக்கன மழையிடர்
மாறக் காண்பீர் காலநிலை பேணும்வழி.
நீரறிவாண்மை
ஆரிமழை யமிழ்தமாய்ப் பெய்திடினும் -எம்மவர்
ஏரிகுளங்கால் வாயடைத்துத் தேங்கிய நீர்கண்டு
தேம்பியழுதார் அழுவார்ப்பின் காலிக்குடங்க ளோடு
தேவரீர் தருவீர் நிலத்தடிநீர் தேரும் ஞானம்!
நீரறிவு
புயலில்லை சூறா வளியில்லை - கொட்டிப்
பெய்தநீ ரோடவில்லை வெள்ளமே யெங்கும்
வெளிநாட்டின் காட்சிபோல் தென்னாடு திகைப்புறும்
நிலையொழிய நீரறிவு வேண்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இலக்கு என்னும் வயலைத் தேர்ந்தெடுத்து
உழைப்பு என்னும் ஏரால் உழவுசெய்து
நேர்மை என்னும் விதைவிதைத்து
விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி
தன்னம்பிக்கை என்னும் உரமிட்டு
சோம்பல் என்னும் களைபறித்து
கவனம் என்னும் வேலியிட்டு
வெற்றி என்னும் கனிபறிக்க
2024 அருள்புரியட்டும்!
பொங்கல் வாழ்த்து
கசந்த காலங்கள் கடந்து செல்ல
வசந்த காலங்கள் வந்து வாழ்த்த
நித்திரை கண்டது போதும் - நீ
வெல்லும் காலமே இனி எப்போதும்!
கரும்பு போலவே வாழ்க்கை இனிக்கட்டும்
பொங்கல் போலவே மகிழ்ச்சி பொங்கட்டும்
மஞ்சள் போலவே அழகு பெருகட்டும்
வாழை போலவே வம்சம் தழைக்கட்டும்
மாவிலைத் தோரணமாய் மங்களம் சேரட்டும்.
ஆசிரியர் தினம்
தந்தையின் அக்கறையும்
தாயின் அன்பும்
இறைவனின் அருளும்
ஓருருவாய் வாய்த்த
என் ஆசிரியர் சமூகத்திற்கு
அன்பு வணக்கம்!
உள்ளத் தூய்மையும்
நன்னெறி வாழ்க்கையும் பூண்ட
நீங்கள் நீடுழி நீடுழி
நலம்வாழ இறைவனை வேண்டுகிறேன்!
உண்மை
கண்ணால் காண்பதெல்லாம்
காட்சி அல்ல- அகக்
கண்கொண்டு காண்பதே காட்சி.
காதால் கேட்பதெல்லாம்
கேள்வி அல்ல -மனக்
காதால் கேட்பதே ஞானம்
வாயால் பேசுவதெல்லாம்
பேச்சல்ல -மனத்தில்
இருந்து பேசுவதே பேச்சு
திருமண நாள்
வாழ்க்கைத் துணையாய் வந்து வாய்த்தவளே!
வராத வரமாய்த் துணை நின்றவளே!!
வாழும் காலமெல்லாம் விருந்து சமைத்தவளே !!!
இடைவந்த பிணியறுத்த அருமருந்தே !!!
கடைவந்து கவலை தீர்ப்பாய் ஆரமுதே !!!
அன்பே ! அழகே ! தேவதையே !
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீந்தமிழே!
!!
ஆன்மீகம்
இந்துக்களுக்கு முஸ்லீம்களுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.
யானைகளுக்கு எறும்புகளுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.
இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். அழிவற்றவர். மேலானவர். ஒருவர். பலர். வடிவினர். வடிவற்றவர்.
இறைவனைத் தன் உள்ளுணர்வால் கண்டுபிடித்தவன் மனிதன். இறைவனைப் பலவாறாகச் சித்தரித்தவன் மனிதன்.
மனத்தால் வழிபடப்பட வேண்டிய இறைவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் தோற்றுவித்து, கட்டுக்கதைகளை விதைத்து மனிதரில் பிரிவினை செய்தவன் மனிதன். இறைவனையே பலகூறாக்கிப் பிரித்தவனும் மனிதனே. மனிதரில் மனிதரைப் பிரித்துப் பகைமை வளர்த்தவனும் மனிதனே.
அறிவியல் கலவாத ஆன்மீகம் பயனற்றது. ஆன்மீகம் இல்லாத அறிவியலும் பயனற்றது.
விருப்பு வெறுப்பு இல்லாதவர் இறைவன். அவர் நல்லவர்களுக்கு வாரி வழங்குவதும் இல்லை. தீயோரைத் தண்டிப்பதும் இல்லை. இருவகைத்தார்க்கும் ஒன்றே செய்வார். நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்வதும் இல்லை. கெடுதல் செய்வோர் எல்லாம் கெடுவதும் இல்லை. எவர் மனவலிமை உடையவரோ அவரே வசதியுடன் வாழ்வார். நல்ல மனம் இருந்தும் மனத் திட்பம் இல்லாமல் இருந்தால் அவர் நல்லவராய் மட்டுமே வாழ்வார். நன்றாக வாழ மாட்டார்.
தீய மனம் கொண்டவர் மன உறுதியுடன் வாழ்ந்தால் அவர் கெட்டவராய் (மனம் போன போக்கில் கொடுமைகள் செய்து) இருந்தாலும் வசதியுடன் வாழ்வார். வாழ்வதற்கு மனத் திடம் முக்கியம். அதற்கு இறை நம்பிக்கை உதவலாம். இறை நம்பிக்கை இல்லை என்றால் நுண்ணறிவும் நூலறிவும் வேண்டும்.
மணற்கிணறு
கடிக்கும் போதுதான் தெரிகிறது
கரும்பு எவ்வளவு இனிக்கும் என்று!
உழைக்கும் போதுதான் தெரிகிறது
வியர்வையின் மதிப்பு என்னவென்று!
தோல்விக்குப் பின்தான் தெரிகிறது
வெற்றிக்கு என்ன வேண்டும் என்று!
படிக்கும் போதுதான் தெரிகிறது
கற்றது கைம்மண்ணளவு தானென்று!
நீரளவே ஆகும் நீர் ஆம்பல்
தோண்டும் அளவே சுரக்கும் மணற்கிணறு
வியர்வையின் அளவே விளைச்சல்
படிக்கும் அளவே நூற்பயன் ஆகுமப்பா!
தன்னம்பிக்கை கவிதை
ஓடுகிற நீரில்
பாசி படியாது.
உழைப்பாளி உள்ளமதில்
கபடம் கலவாது.
சமூகமே சாக்கடை ஆனாலும்
தாமரை போல் மலருங்கள்.
நாற்றமெடுத்த சிப்பிக்குள்ளும்
முத்துப்போலே ஒளிருங்கள்.
கவலைவிடு
தலையிலிருந்து இழிந்த மயிரை எண்ணி கோபமோ வருத்தமோ அடைய வேண்டியதில்லை. அதுபோலவே உணர்வு மாறுபட்டு, கருத்து வேறுபட்டு விலகிச் செல்லும் உறவுகளை எண்ணி விசனம் அடைய வேண்டியதில்லை. வழுக்கையே விழுந்தாலும், வழுக்கி விழுந்தாலும் கவலை வேண்டாம்
தத்துவம்
வாழ்க்கையின் தத்துவத்தை
மதி கற்பிக்கிறது.
வளர்வதும் தேய்வதும்
மதி(நிலா)யும் அறிவும்
மதிப்பும் மரியாதையும்
என்று உணர்ந்து
உணர்வுகட்கு ஆட்படாது
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாகப் பாவிக்கும்
பக்குவம் பெறுவோம்.
ஞானம்
தீமை வேறு, தீமை செய்தவர் வேறு என்று உணரும் ஞானம் ஞானிகளுக்கே உரிதாம்.
திருமண நாள் வாழ்த்து - கவிதை
கடல் வானைச் சேர்வதும்
வான் கடலைச் சேர்வதும்,
பரிதியை மதி தொடர்வதும்
மதியைப் பரிதி தொடர்வதும்,
கடலைக் காற்று தழுவுவதும்
காற்றைக் கடல்தழுவுவது போல
உருவைத் தொடரும் நிழல்போல
உடலில் கலந்த உயிர்போல
ஒன்றின் ஒன்றாய்க் கலந்து
பல்லாண்டு பல்லாண்டு
கூடி மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!
பிறந்தநாள் வாழ்த்து கவிதை -மாதிரி
இருபெருஞ்சுடரும்
உனக்கு வழிகாட்ட,
இன்னமுத மழை
உன் வேருக்கு நீரூற்ற,
இருகடல் எழுந்து
உன் செவிக்கு இசையூட்ட,
இருநிலம் ஏந்தி
உன்னைத் தாலாட்ட,
இசைகொண்டு
தமிழ்த்தாய் பாலூட்ட,
வான்மிசை தொட்டு
வளர்வாய் நீ!
ஆரமுதாய் விளைவாய் நீ!
அன்பிற்கினிய கபிஷ் நாத்
உனக்கு என் இனிய
அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!
வியாழன், 10 அக்டோபர், 2024
சரஸ்வதி பூஜை
வைகறையில் துயிலெழுந்து,
ஓடி முடித்து, களித்து, குளித்து,
அமுதுண்டு, புத்தகங்களை அடுக்கி,
சந்தனம் குங்குமமிட்டு
வழிபட்டு வாஞ்சையுடன் முகத்தில் ஒற்றி
சரஸ்வதியை வரவேற்று வணங்கி
அடக்கமாகச் சம்மனம் இட்டு உட்கார்ந்து
ஆசையுடன் படித்த பிள்ளைப்பருவ நாட்கள்
வாஞ்சையுடன் வருடிச் செல்கின்றன என்னை இந்நாளில்...
தங்கமகளே
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட
வெள்ளை அழகே !
கமகமக்கும் சந்தனமே!
மணமணக்கும் மரிக்கொழுந்தே !
என் வாழ்வின் நம்பிக்கைக் கீற்றே !
என் சிம்மாசனத்தின் மணிமகுடமே !
என் சிங்கமே !
தகதகக்கும் தங்கமே !
வீரத்தின் விளைநிலமே !
விவேகப் பேச்சே !
தெளிந்த மதியே !
பொருந்திய குணவதியே !
தாங்கி நிற்கும் தூணே!
துள்ளி குதிக்கும் மீனே!
துயர் துடைக்கும் மானே!
கட்டிக் கரும்பே! வெட்டி வேரே!
புதன், 9 அக்டோபர், 2024
வரவேற்புரை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ
அரசியலில் ஆழங்கால்பட்டவரே
அலைகடல் கூட்டத்தின் நாயகரே
ஆர்ப்பரிக்கும் கடலாய்
இடையறாது மக்கள் பணியாற்றும் கடமை வீரரே
உண்மை நேர்மை உழைப்பின் உறைவிடமே
ஊரெங்கும் சுற்றி வரும் தேரே
எண்ணம் சிதையாமல்
எடுத்த காரியம் குறையாமல்
ஏழையவர் குறைதீர்க்கும் மாமருந்தே
விருதுநகர் பெற்றெடுத்த தங்கமே-மும்முறை
வெற்றியை ருசித்த சிங்கமே
வாழ்நாளெல்லாம் மக்கள் பணியாற்றி வரும் மாமணியே-உம்மை
வருக வருக என வரவேற்பதில் இப்பள்ளி பெருமைகொள்கிறது.
அன்பு மகளே
என் உயிரே! ஆயிரங் காலத்துப் பயிரே!
என் கனவே! என்றென்றும் உன் நினைவே!
நீ பிறந்த போது நானும் புதிதாய்ப் பிறந்தேன்! உள்ளம் மகிழ்ந்தேன்! நீ முழுதும் தேன்! என உணர்ந்தேன்.
உன்னை நினைத்தேன்!
நினைத்தபொழுதெல்லாம்,
தேன் மழையில் நனைந்தேன்!
உன் பொக்கை வாய்ச்சிரிப்பில், பூ மலர்வதைக் கண்டேன்!
நீ தவழ்கையில், உலகமே தவழ்ந்து கொண்டுதான் இருந்தது.
உன் குறுகுறு நடைக்கு ஈடு இணை ஏது?
உன் குடுகுடு ஓட்டம், முயலினை நினைவூட்டும்!
உண்ண மறுக்கும் உனக்கு
வித்தை காட்டி ஊட்டினேன்!
செல்லும் இடந்தோறும் உன்னை மறக்காமல் அழைத்துச் சென்று வந்தேன்.
எனக்கு உற்ற துணையாக வந்தாய்!
நாள்தோறும் வளர்ந்தாய்!
ஊரெல்லாம் சுற்றினோம்
உண்டோம், குளித்தோம், களித்தோம்.
கிளியைப் போல மொழியைக் கற்றாய் !
எழுத்துக்களை உச்சரித்தாய் !
எழுத்துக்களைக் கூட்டி உயிரளித்தாய் !
அன்னை மொழியின் அமுதமொழி இனித்தது.
வாசித்தாய், வளர்ந்தாய், உயர்ந்தாய்!
அது கண்டு நிமிர்ந்தேன். பயிற்சிகள் பல தந்தேன். அதில் உனது வெற்றியைக் கண்டேன். உள்ளம் மகிழ்ச்சி கொண்டேன்.