வியாழன், 28 ஏப்ரல், 2022

பிரபஞ்சத்தில் நீ

சுயபுத்தியுள்ளவன்
சூரியனாவான்...
சொல்புத்தியுள்ளவன்
வளரும் தேயும் நிலவாவான்..!
புத்தியில்லாதவன்
விட்டில்பூச்சியாய்த்
தோன்றி மறைவான்..!

உழைப்பிற்கேற்ப வாழ்க்கை...!
ஊருக்கேற்ப பேர்!!
எண்ணம் செயல் சரியென்றால்...
எமனும் தூர ஓடிடுவான்.

பொருளற்ற சொல்லில்லை...
பொருளின்றி வாழ்வில்லை...-உன்
வாழ்வுக்கொரு பொருள் கொடு மனிதா!- நீயின்றி
இவ்வுலகு மிக இனிதா?!


ஆணுக்குப் பெண் இளைப்பில்லை

ஒரு கல்லூரிச் சுடிதார்
ஸ்கூட்டியில் 
தொண்ணூறில் பறந்ததா?
நூறில் பறந்ததா?
தெரியவில்லை...
ஒருவேளை நூற்றியெட்டாக இருக்கலாம்...
கடும் வேகம். 
காற்றைக் கிழித்து...
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை...
மரணத்தை நோக்கிய பயணத்திலும்!

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

மனக்கவலை

பேருந்துப் பயணத்தில்...
மடியில் இருக்கும் சுமையை
கவனமாக அருகில் இறக்கி வைக்கிறாய்...
பல நேரம் ஆளில்லா
இருக்கையில் வைக்கிறாய்...
மனக் கவலையை மட்டும்
இறக்கி வைக்காதது ஏன்?

நாய்

இன்று காலை 8.10 மணி அளவில் சாட்சியாபுரம் பெட்ரோல் பங்க் எதிரில் டாட்டா ஏசியை ஓட்டிவந்த நாய்,  விளையாடிக்கொண்டிருந்த நாய் மீது மோதிவிட்டது. நாயின் குடல் சரிந்து துடிப்பு நின்றது. அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய்கள் செய்வதறியாது திகைத்து, குடல் சரிந்த நாயையும் டாட்டா ஏசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு லொள்...லொள்... என்று குரைத்தன.  அந்த "லொள்...லொள்..." குரைப்பின் பொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகவே புரிந்தது.
அடப்பாவி... நாங்கள் என்ன துரோகம் செய்தோம் உனக்கு?... ஏன் என் நண்பனைக் கொன்றாய்? இந்தப் பூமி நீ வாழ்வதற்கு மட்டுமா? இந்த நாய் ஜென்மம் உயிர் வாழக் கூடாதா? கடவுள் இந்தப் பூமியை உனக்காக மட்டும்தான் படைத்தாரா? காலங்காலமாய் நாங்கள் உங்களுக்கு நாயாய் இருந்து அடிமை வேலை செய்தோம் இல்லையா? இதற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? துக்கமும் அழுகையும் தொண்டையை அடைக்க அவை குரைத்தன.


சனி, 23 ஏப்ரல், 2022

இன்றைய சமுதாயம்

நாடு முழுவதும்
கொள்ளைக்காரர்கள்...

லஞ்சம் ஊழல் அதிகாரத் திமிர்
இல்லாத இடம் உண்டா?

சுயநலம் ஊர்தோறும்
பெருகிக் கிடக்கிறது...

ஒருத்தன் வயிற்றில் அடித்து இன்னொருவன் பிழைப்பு நடத்தும் காலத்தில் இருக்கிறோம்...

கொஞ்சம்நஞ்சம் இருந்த நல்லவர்களையும் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி கிண்டல் செய்து பொய்யும் ஏமாற்றுதலும் இருந்தால்தான் வாழவே முடியும் என்று கற்றுத் தந்து விட்டோம்.அவர்களில் ஓரிருவர் தவிர நாம் ஆசைப்பட்டதுபோல அயோக்கியர்களாகிவிட்டார்கள்...

'ஊரோடு ஒத்து வாழ்' என்பார்கள். 99 சதவீதம் பேர் பொய் புரட்டு வாழ்க்கை வாழும் போது இளைஞர் சமுதாயம் யாரைப் பின்பற்றும்? அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? 

முன்பு ஊருக்கு நாலுபேர் அயோக்கியன். இன்று ஊருக்கு நாலுபேர் தான் நல்லவன்.  

தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. சுரை விதைத்தால் சுரைதான் முளைக்கும். தினை விதைத்தால் தினைதான் முனைக்கும். இந்த சமுதாயம் வினை விதைத்திருக்கிறது. அந்த வினை இன்று முளைத்திருக்கிறது. இன்னும் ஆலமரமாய் விழுதுவிட்டு வளரும். வளருட்டும்.  

எந்தச் சினிமாவில் நல்லதைச் சொல்லியிருக்கிறார்கள்....
மாணவர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அவனுடைய பெற்றோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தாயைப் போல்தான் பிள்ளை.

கரியைத் தீட்டத் தீட்ட வைரமாகும்.

ஆசிரியர் சமுதாயத்தை வசைபாட வசைபாட நல்ல ஆசிரியர்களும் கையைக் கட்டி வாயைப் பொத்தி வேடிக்கை பார்ப்பார்கள்.  

அப்புறம் எப்படி எல்லோரும் எதிர்பார்க்கும் நல்ல சமுதாயம் உருவாகும்?

மருமகளை வசைபாட வசைபாட மாமியார் அரக்கியாகத் தெரிவாள்.

திட்டித் திட்டி மாணவனையோ, பெற்ற குழந்தையையோ திருத்த இயலாது. அரவணைத்து, நல்வழி காட்டி, ஊக்கப்படுத்தி, ஆர்வமூட்டி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறுசிறு தண்டனை வழங்கிதான் திருத்த முடியும்.

நாடு நாசமாய்ப் போவதும் நன்மைக்கே! எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். 

குற்றவாளிகளே நீதிபதி ஆகிவிட்டால் இப்படிப்பட்ட சூழல்தான் இருக்கும். மாணவன் பள்ளி வகுப்பறையில் மது அருந்துகிறான். அவனைப் பெற்றவன் வீட்டில் மது அருந்துகிறான். "மாணவன் மீது தவறில்லை. பெற்றோர் மீதும் தவறில்லை. ஆசிரியர் மீதுதான் தவறு இருக்கிறது" என்று குற்றவாளியான பெற்றவன் நீதிபதிபோல் பிரச்சாரம் செய்கிறான்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அமைதி

அமைதியான இடத்தில்
கடவுள் இருப்பார்...
அமைதியான உள்ளத்தில்
கடவுள் வசிப்பார்...
அமைதியாக இரு...
கடவுளைத் தொழு...
கடவுள் வருவார்...

வியாழன், 21 ஏப்ரல், 2022

மழை

வானம் வீதிக்கு வந்தது...
கோலம் அழிந்த 
இயற்கை ஓவியத்தை எழிலூட்ட...
மழையாய்..!

புதன், 20 ஏப்ரல், 2022

பச்சோந்தி

பச்சோந்தியை ரசித்தான்
பாமரன்...
பச்சோந்தியாகவே ஆனான்
படித்தவன்...!
படித்தவன் படித்தவன்தானே..!

ஒற்றுமையே பலம்

மாத நாட்காட்டிக்கு
மரணமில்லை...
அதன் ஒற்றுமையால்..!

தினசரி நாட்காட்டி
தினந்தோறும் கிழிபடும்...
தனித்து நிற்பதால்...!

நம்பிக்கை

வெள்ளைப் பூக்கள்
மணம் தரும்...
வண்ணப் பூக்கள்
நிறம் தரும்...

நிறமில்லை என்று 
வெள்ளைப் பூ
வாழ்வை வெறுப்பதில்லை...

மணமில்லை என்று
வண்ணப்பூ
வசைபாடுவதில்லை...

உன்னிடம் ஏதோ
ஒன்று உள்ளது...
நம்பிக்கை கொள்...

பூவாய்ப் பூக்கதான் பிறந்தாய்...
புன்னகையை ஏன் மறந்தாய்?

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம் என்பது
மற்றவர் கருத்தில்
தலையிடாமல் இருப்பது.

புன்னகை

மரணம் வாசலில்...
மலர்ந்த மல்லிகை...
பறிக்கும்போதும் பறித்தபின்னரும்
அதே புன்னகையில்..!

கடமை வீரர்

அடுத்த அலை வந்து 
அழித்துச் செல்லும்...
அறிந்தும் சிலர்
பாதச் சுவட்டைப்
பதித்துச் செல்கின்றனர்...




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தவம்

கூட்டுப் புழுவின் தவம்
வண்ணச்சிறகிற்காக...
சிப்பியின் ரணம்
முத்திற்காக...
கரியின் செதுக்கல்
வைரத்திற்காக...
பொன்னின் உருகல்
சுடர் ஒளிக்காக...
உளியின் வலி
அழகு சிலைக்காக...
நீ மட்டும்
வலி பொறுக்காதது ஏன்???

வரவேற்பு

ஒவ்வொரு விடியலையும்
வரவேற்றுக் கொண்டாடிக் கழிக்கிறது-
கருங்குயில்!

முயற்சி

முயற்சியில் சிறந்த இனம்
மனிதனல்ல...மரம்!
பாறையிலும் ஆலின் ஆணிவேர்!

ஆறறிவு

ஆறறிவு உயிர்
மனிதனல்ல...மரம்!
இலையுதிர்க்காலம்

வலிமை

இருக்கும் ஒன்றைவிட
இல்லாத ஒன்றுக்கே
ஆற்றல் அதிகம்-
வெற்றிடம்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

தியாகம்

உளி படாத கல் ...
சிலை ஆவதில்லை!
வலி பொறுக்காத சிப்பி ...
முத்தை ஈனுவதில்லை!
ஆழப் புதையாத கரி...
வைரமாவதில்லை!
வாழப் படியாத குழந்தை ...
நல்ல மனிதன் ஆவதில்லை! தெருவில் போவோரும் ...
தேரில் பவனி வரலாம் !
உருவில் சிதைந்தோரும் ...
ஊர் போற்ற வாழ்ந்திடலாம் !
விதியை வெல்லும் கல்வியே ...
அது நம் பள்ளியே !
கருத்தாய் படிப்போமே ...
கவலை மறப்போமே!!!

செவ்வாய், 29 மார்ச், 2022

மாணவர் உறுதிமொழி

அரசுப் பள்ளி மாணவனாகிய நான்,

1) எனக்குக் கல்விப் போதிக்கும் ஆசிரியர்களை மதித்துப் போற்றுவேன்.
2) எனக்கு வயதில் மூத்தோரை மதித்து நடப்பேன்.
3) படிப்பில் முழுக்கவனம் செலுத்துவேன்
4) இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள்
5) யாருடைய மனமும் புண்படும்வகையில் தீய சொற்களைப் பேச மாட்டேன்
6) மது மற்றும் புகைப்பழக்கத்தில் ஈடுபட மாட்டேன் 
7) பள்ளிச் சொத்துக்களைச் சேதப்படுத்த மாட்டேன்.
8) ஒழுக்கமே எனது பண்பாடு. ஒழுக்கமே எனது உயிர். ஒருபோதும் ஒழுக்கம்தவறி நடக்க மாட்டேன் 

என்று உளமாற உறுதி கூறுகிறேன்.