ஞாயிறு, 31 ஜூலை, 2022

சுதந்திரத்தை போற்றுவோம் கவிதை

போற்றுவோம் சுதந்திரத்தை... போற்றுவோம் சுதந்திரத்தை...

அனைவரும் கல்வி பெற்றோம்
அருமை உலகின் அறிவு பெற்றோம்(2)

ஆட்சி செய்யத் தேர்தல் வைத்தோம்
ஆளும் பொறுப்பைக் கொடுத்து வைத்தோம்(2)

எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டோம்
எழுத, பேச உரிமை கொண்டோம்(2)

சட்டத்தின் முன் சமமாய் நின்றோம்
சமத்துவமே நீதி என்றோம்(2)

தீமை தரும் தீண்டாமை ஒழித்தோம்
தீண்டாதோர்க்கு ஒதுக்கீடு தந்தோம்(2)

விடுதலை பெற்ற தாய்நாட்டில்,
விரும்பும் கல்வி கற்றிடலாம்
வேண்டிய உயரம் பறந்திடலாம்
விரும்பும் வேலை செய்திடலாம்
பிடித்த ஊரில் தங்கிடலாம்
விரும்பும் தெய்வம் வணங்கிடலாம்
நம்பும் மதத்தைப் பரப்பிடலாம்

தகுதிக்கேற்ற வேலையும் உழைப்புக்கேற்ற ஊதியமும் 
பணியிடத்தில் பாதுகாப்பும் சுதந்திரத்தால் உருவாக்கினோம்.

ஆண் பெண்ணில் வேறுபாடில்லை
சாதி மத பேதமுமில்லை(2)

சகோதரராய் 
சமத்துவ வழியில் சங்கமம் கொள்வோம், வாரீர்!(2)

சனி, 30 ஜூலை, 2022

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி

அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அவர் மகான் இல்லை- ஆனால் 

உத்தம மனிதர் (2)

அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்

ஆளுமை மனிதர் (2)

அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்

கனவுகளைத் துரத்தியவர்(2)


ஆம்.வல்லரசு இந்தியா 

வளமான இந்தியா 

வறுமை இல்லா இந்தியா 

என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம். 

நான் விரும்பும் தலைவர் அவரே!

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.

இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர் 

நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.

"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,

ஒழுக்க சீலராக்கியது 

உயர்ந்த பண்பாளராக்கியது 

கடின உழைப்பாளராக்கியது. 

அவர் அசைவம் விரும்பாதவர் 

வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)

அவர் திருமணம் புரியாதவர்

எவருக்கும் தீமை புரியாதவர்.(2)

அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.

அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர். 

இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர். 

இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர். 

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர். 

அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.

அவர் பழகுவதில் குழந்தை 

சிந்திப்பதில் ஞானி 

மாணவர்களுக்கு நண்பன் 

நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி

 விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர் 

அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

திங்கள், 11 ஜூலை, 2022

கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.

வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.

அதைப்போல,

படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.

  1. வெள்ளத்தால் போகாது 
  2. வெந்தணலால் வேகாது 
  3. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
  4. கள்ளர்க்கோ பயமில்லை 
  5. காவலுக்கு மிக எளிது 
  6. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.

பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.

அதுபோல,

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.

காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  1. மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
  2. ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
  3. மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
  4. ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
  5. கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
  6. மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
  7. மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
  8. மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  9. பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
  10. தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
  11. கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
  12. கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
  13. காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!

நன்றி, வணக்கம்.

காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2

இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணுக்குள் இருக்கின்ற கரி தான் வெட்ட வெட்ட வைரமாய் மின்னுது. 

அதுபோல, 

    1. ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட, 
    2. மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ, 
    3. இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த, 
    4. தியாகச் சுடராய், வேள்வித்தீயாய், 
    5. நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.

  • தமிழகத்தின் தவப் புதல்வர்
  • தாயகம் காத்த புனிதர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
  1. அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
  2. ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
  3. பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
  4. மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
  5. வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்

  • ஏழை எளியோர் வாழ்வில்  நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
  • கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
நன்றி! வணக்கம்.

வியாழன், 30 ஜூன், 2022

காமராஜர் கவிதை

விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்

விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர் 

படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்

காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்

பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்

மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்

காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்

காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்


சனி, 25 ஜூன், 2022

கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்

முல்லை நிலக் காவலர்களே...
மூத்தகுடி மக்களே...(2)

வெள்ளாடு மேய்ப்பவர்களே...
வெள்ளை உள்ள வேந்தர்களே...(2)

கால்நடையின் பசி தீர்க்கும் ஆயர்குடியே...
கால்நடையாய்க் கானகம் சுற்றும் வீரர்குடியே...(2)

இயற்கை போற்றும் மனிதர்களே...
இயற்கை வேளாண்மை காக்கும் புனிதர்களே...(2)

உங்கள் வாழ்வும்
உங்கள் குலமும்
உலகம் உள்ளவரை
உயர்ந்து நிற்கட்டும்..! (2)


வெள்ளி, 24 ஜூன், 2022

வாழ்த்துரை

  1. நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
  2. பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
  3. கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
  4. விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
  5. தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
  6. 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
  7. தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
  8. வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
  9. இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
  10. வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)

நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என்  வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!

ஞாயிறு, 15 மே, 2022

அநீதி

அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.

வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.

'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள் 

துணைக்கு யாரையும் தேடாதே.  அவனும் அப்படித்தான். 

உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.

அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.


சனி, 14 மே, 2022

ஊக்கம்

மனிதா! 

எதைத் தேடுகிறாய்?

யாரைத் தேடுகிறாய்?

அவசர உலகில்

அனாவசியமாக

நீ உனக்காக உருவாக்கித்

தூக்கிச் சுமக்கின்ற

கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத் 

தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?

இறைவனிடம் 

இறக்கி வைத்து விட்டு

இளைப்பாற எண்ணுகிறாயா?

அரசனோ ஆண்டவனோ 

உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?

ஊக்கம் கொண்டு

உழைத்தாலே 

உறுதுயர் அழியுமே!

உண்மையை உணராது 

பொய்யில் மயங்கித் திரியாதே!

தமக்கென முயலா 

பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்

பழந்தமிழர் வாழ்முறை அறிக 

கவலை விடுக 

ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!

உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!

எழுகதிர் விடியலை 

வரவேற்கத் தயாராயிரு.

புதன், 11 மே, 2022

உயிர்மெய்த் தத்துவம்

'அ'- உயிரெழுத்து
'க்' -மெய்யெழுத்து
அ-உயிர்வளி உள்ளிருந்து எழுவதால் பிறக்கும் எழுத்து-எனவே உயிர் எழுத்து எனப்படுகிறது.
க்-மெய் (உடம்பு) உதவியால் பிறக்கும் எழுத்து. எனவே மெய்யெழுத்து எனப்படுகிறது.
க்+அ=க-உயிர்மெய் எழுத்து. 
இது பிறக்கும் இடம் 'க்' என்ற மெய்யெழுத்தின் இடம்(மார்பு). அ பிறக்கும் இடமான கழுத்தில் பிறப்பதில்லை.

இதன் ஒலிப்பு முயற்சி,
'க்' பிறப்பதற்கான முயற்சியும்+ 'அ'பிறப்பதற்கான முயற்சியும் அடங்கும்.

இதன் வடிவம்,
'க்' மெய் எழுத்தின் வடிவத்தைப் (க) பெற்றிருக்கும்.(அதாவது நமது உடலில் உயிர் கலந்து இருந்தாலும், உயிர் கண்களுக்குத் தெரிவதில்லை. நமது உடல்தான் பிறரது கண்களுக்குத் தெரியும். அதுபோலதான் உயிர்மெய் எழுத்தின் வடிவம் மெய் எழுத்தின் வடிவத்தைப்
பெற்றிருக்கும்)

அ-ஒரு மாத்திரை
க்-அரை மாத்திரை
க-1+1/2=1.5 மாத்திரை வரவேண்டும். ஆனால் நீரில் சர்க்கரை கரைவது போல, உயிர்மெய் எழுத்து உயிரின் மாத்திரையைப் பெறுகிறது. அதாவது மெய்(உடம்பு எழுத்து) உயிரில் கரைகிறது. உயிர் நிலையானது. மெய் (உடம்பு) அழியக்கூடியது. 

தத்துவம்: நமது உடல் கண்ணுக்குத் தெரியும். நமது ஆத்மா அல்லது உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் உடல் அழியும். உயிர் அல்லது ஆத்மாவுக்கு அழிவில்லை. இது தொல்காப்பியம் கூறும் மறைமுகமான செய்தி. 

அன்னையர் தினம்

When someone ask to me...
in my mind says...
Someone: what is your father?
Me: my father is ...  ...  ... 
(Actually acricultural coolly)
My father is Co-GOD.
Someone: what is your mother?
Me: My mother is the GOD

படிக்காத என் தாய் என்னை அதிகாரி ஆக்கி ஆசிரியர் ஆக்கி அழகு பார்த்தார். என்னை அப்படி இரு, இப்படி இரு என்று சொல்லி வளர்க்கவில்லை; என் முன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டுகிறார்.

அன்னையர் தினத்தன்று வாழ்த்துவது வாழ்த்தல்ல.
அனுதினமும் அவரைப் பார்த்துக் கொள்வதே வாழ்த்து. 

வியாழன், 28 ஏப்ரல், 2022

பிரபஞ்சத்தில் நீ

சுயபுத்தியுள்ளவன்
சூரியனாவான்...
சொல்புத்தியுள்ளவன்
வளரும் தேயும் நிலவாவான்..!
புத்தியில்லாதவன்
விட்டில்பூச்சியாய்த்
தோன்றி மறைவான்..!

உழைப்பிற்கேற்ப வாழ்க்கை...!
ஊருக்கேற்ப பேர்!!
எண்ணம் செயல் சரியென்றால்...
எமனும் தூர ஓடிடுவான்.

பொருளற்ற சொல்லில்லை...
பொருளின்றி வாழ்வில்லை...-உன்
வாழ்வுக்கொரு பொருள் கொடு மனிதா!- நீயின்றி
இவ்வுலகு மிக இனிதா?!


ஆணுக்குப் பெண் இளைப்பில்லை

ஒரு கல்லூரிச் சுடிதார்
ஸ்கூட்டியில் 
தொண்ணூறில் பறந்ததா?
நூறில் பறந்ததா?
தெரியவில்லை...
ஒருவேளை நூற்றியெட்டாக இருக்கலாம்...
கடும் வேகம். 
காற்றைக் கிழித்து...
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை...
மரணத்தை நோக்கிய பயணத்திலும்!

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

மனக்கவலை

பேருந்துப் பயணத்தில்...
மடியில் இருக்கும் சுமையை
கவனமாக அருகில் இறக்கி வைக்கிறாய்...
பல நேரம் ஆளில்லா
இருக்கையில் வைக்கிறாய்...
மனக் கவலையை மட்டும்
இறக்கி வைக்காதது ஏன்?

நாய்

இன்று காலை 8.10 மணி அளவில் சாட்சியாபுரம் பெட்ரோல் பங்க் எதிரில் டாட்டா ஏசியை ஓட்டிவந்த நாய்,  விளையாடிக்கொண்டிருந்த நாய் மீது மோதிவிட்டது. நாயின் குடல் சரிந்து துடிப்பு நின்றது. அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய்கள் செய்வதறியாது திகைத்து, குடல் சரிந்த நாயையும் டாட்டா ஏசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு லொள்...லொள்... என்று குரைத்தன.  அந்த "லொள்...லொள்..." குரைப்பின் பொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகவே புரிந்தது.
அடப்பாவி... நாங்கள் என்ன துரோகம் செய்தோம் உனக்கு?... ஏன் என் நண்பனைக் கொன்றாய்? இந்தப் பூமி நீ வாழ்வதற்கு மட்டுமா? இந்த நாய் ஜென்மம் உயிர் வாழக் கூடாதா? கடவுள் இந்தப் பூமியை உனக்காக மட்டும்தான் படைத்தாரா? காலங்காலமாய் நாங்கள் உங்களுக்கு நாயாய் இருந்து அடிமை வேலை செய்தோம் இல்லையா? இதற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? துக்கமும் அழுகையும் தொண்டையை அடைக்க அவை குரைத்தன.


சனி, 23 ஏப்ரல், 2022

இன்றைய சமுதாயம்

நாடு முழுவதும்
கொள்ளைக்காரர்கள்...

லஞ்சம் ஊழல் அதிகாரத் திமிர்
இல்லாத இடம் உண்டா?

சுயநலம் ஊர்தோறும்
பெருகிக் கிடக்கிறது...

ஒருத்தன் வயிற்றில் அடித்து இன்னொருவன் பிழைப்பு நடத்தும் காலத்தில் இருக்கிறோம்...

கொஞ்சம்நஞ்சம் இருந்த நல்லவர்களையும் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி கிண்டல் செய்து பொய்யும் ஏமாற்றுதலும் இருந்தால்தான் வாழவே முடியும் என்று கற்றுத் தந்து விட்டோம்.அவர்களில் ஓரிருவர் தவிர நாம் ஆசைப்பட்டதுபோல அயோக்கியர்களாகிவிட்டார்கள்...

'ஊரோடு ஒத்து வாழ்' என்பார்கள். 99 சதவீதம் பேர் பொய் புரட்டு வாழ்க்கை வாழும் போது இளைஞர் சமுதாயம் யாரைப் பின்பற்றும்? அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? 

முன்பு ஊருக்கு நாலுபேர் அயோக்கியன். இன்று ஊருக்கு நாலுபேர் தான் நல்லவன்.  

தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. சுரை விதைத்தால் சுரைதான் முளைக்கும். தினை விதைத்தால் தினைதான் முனைக்கும். இந்த சமுதாயம் வினை விதைத்திருக்கிறது. அந்த வினை இன்று முளைத்திருக்கிறது. இன்னும் ஆலமரமாய் விழுதுவிட்டு வளரும். வளருட்டும்.  

எந்தச் சினிமாவில் நல்லதைச் சொல்லியிருக்கிறார்கள்....
மாணவர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அவனுடைய பெற்றோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தாயைப் போல்தான் பிள்ளை.

கரியைத் தீட்டத் தீட்ட வைரமாகும்.

ஆசிரியர் சமுதாயத்தை வசைபாட வசைபாட நல்ல ஆசிரியர்களும் கையைக் கட்டி வாயைப் பொத்தி வேடிக்கை பார்ப்பார்கள்.  

அப்புறம் எப்படி எல்லோரும் எதிர்பார்க்கும் நல்ல சமுதாயம் உருவாகும்?

மருமகளை வசைபாட வசைபாட மாமியார் அரக்கியாகத் தெரிவாள்.

திட்டித் திட்டி மாணவனையோ, பெற்ற குழந்தையையோ திருத்த இயலாது. அரவணைத்து, நல்வழி காட்டி, ஊக்கப்படுத்தி, ஆர்வமூட்டி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறுசிறு தண்டனை வழங்கிதான் திருத்த முடியும்.

நாடு நாசமாய்ப் போவதும் நன்மைக்கே! எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். 

குற்றவாளிகளே நீதிபதி ஆகிவிட்டால் இப்படிப்பட்ட சூழல்தான் இருக்கும். மாணவன் பள்ளி வகுப்பறையில் மது அருந்துகிறான். அவனைப் பெற்றவன் வீட்டில் மது அருந்துகிறான். "மாணவன் மீது தவறில்லை. பெற்றோர் மீதும் தவறில்லை. ஆசிரியர் மீதுதான் தவறு இருக்கிறது" என்று குற்றவாளியான பெற்றவன் நீதிபதிபோல் பிரச்சாரம் செய்கிறான்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அமைதி

அமைதியான இடத்தில்
கடவுள் இருப்பார்...
அமைதியான உள்ளத்தில்
கடவுள் வசிப்பார்...
அமைதியாக இரு...
கடவுளைத் தொழு...
கடவுள் வருவார்...

வியாழன், 21 ஏப்ரல், 2022

மழை

வானம் வீதிக்கு வந்தது...
கோலம் அழிந்த 
இயற்கை ஓவியத்தை எழிலூட்ட...
மழையாய்..!

புதன், 20 ஏப்ரல், 2022

பச்சோந்தி

பச்சோந்தியை ரசித்தான்
பாமரன்...
பச்சோந்தியாகவே ஆனான்
படித்தவன்...!
படித்தவன் படித்தவன்தானே..!

ஒற்றுமையே பலம்

மாத நாட்காட்டிக்கு
மரணமில்லை...
அதன் ஒற்றுமையால்..!

தினசரி நாட்காட்டி
தினந்தோறும் கிழிபடும்...
தனித்து நிற்பதால்...!

நம்பிக்கை

வெள்ளைப் பூக்கள்
மணம் தரும்...
வண்ணப் பூக்கள்
நிறம் தரும்...

நிறமில்லை என்று 
வெள்ளைப் பூ
வாழ்வை வெறுப்பதில்லை...

மணமில்லை என்று
வண்ணப்பூ
வசைபாடுவதில்லை...

உன்னிடம் ஏதோ
ஒன்று உள்ளது...
நம்பிக்கை கொள்...

பூவாய்ப் பூக்கதான் பிறந்தாய்...
புன்னகையை ஏன் மறந்தாய்?

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம் என்பது
மற்றவர் கருத்தில்
தலையிடாமல் இருப்பது.

புன்னகை

மரணம் வாசலில்...
மலர்ந்த மல்லிகை...
பறிக்கும்போதும் பறித்தபின்னரும்
அதே புன்னகையில்..!

கடமை வீரர்

அடுத்த அலை வந்து 
அழித்துச் செல்லும்...
அறிந்தும் சிலர்
பாதச் சுவட்டைப்
பதித்துச் செல்கின்றனர்...




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தவம்

கூட்டுப் புழுவின் தவம்
வண்ணச்சிறகிற்காக...
சிப்பியின் ரணம்
முத்திற்காக...
கரியின் செதுக்கல்
வைரத்திற்காக...
பொன்னின் உருகல்
சுடர் ஒளிக்காக...
உளியின் வலி
அழகு சிலைக்காக...
நீ மட்டும்
வலி பொறுக்காதது ஏன்???

வரவேற்பு

ஒவ்வொரு விடியலையும்
வரவேற்றுக் கொண்டாடிக் கழிக்கிறது-
கருங்குயில்!

முயற்சி

முயற்சியில் சிறந்த இனம்
மனிதனல்ல...மரம்!
பாறையிலும் ஆலின் ஆணிவேர்!

ஆறறிவு

ஆறறிவு உயிர்
மனிதனல்ல...மரம்!
இலையுதிர்க்காலம்

வலிமை

இருக்கும் ஒன்றைவிட
இல்லாத ஒன்றுக்கே
ஆற்றல் அதிகம்-
வெற்றிடம்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

தியாகம்

உளி படாத கல் ...
சிலை ஆவதில்லை!
வலி பொறுக்காத சிப்பி ...
முத்தை ஈனுவதில்லை!
ஆழப் புதையாத கரி...
வைரமாவதில்லை!
வாழப் படியாத குழந்தை ...
நல்ல மனிதன் ஆவதில்லை! தெருவில் போவோரும் ...
தேரில் பவனி வரலாம் !
உருவில் சிதைந்தோரும் ...
ஊர் போற்ற வாழ்ந்திடலாம் !
விதியை வெல்லும் கல்வியே ...
அது நம் பள்ளியே !
கருத்தாய் படிப்போமே ...
கவலை மறப்போமே!!!

செவ்வாய், 29 மார்ச், 2022

மாணவர் உறுதிமொழி

அரசுப் பள்ளி மாணவனாகிய நான்,

1) எனக்குக் கல்விப் போதிக்கும் ஆசிரியர்களை மதித்துப் போற்றுவேன்.
2) எனக்கு வயதில் மூத்தோரை மதித்து நடப்பேன்.
3) படிப்பில் முழுக்கவனம் செலுத்துவேன்
4) இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள்
5) யாருடைய மனமும் புண்படும்வகையில் தீய சொற்களைப் பேச மாட்டேன்
6) மது மற்றும் புகைப்பழக்கத்தில் ஈடுபட மாட்டேன் 
7) பள்ளிச் சொத்துக்களைச் சேதப்படுத்த மாட்டேன்.
8) ஒழுக்கமே எனது பண்பாடு. ஒழுக்கமே எனது உயிர். ஒருபோதும் ஒழுக்கம்தவறி நடக்க மாட்டேன் 

என்று உளமாற உறுதி கூறுகிறேன்.