ஞாயிறு, 31 ஜூலை, 2022
சுதந்திரத்தை போற்றுவோம் கவிதை
சனி, 30 ஜூலை, 2022
நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி
அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
அவர் மகான் இல்லை- ஆனால்
உத்தம மனிதர் (2)
அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்
ஆளுமை மனிதர் (2)
அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்
கனவுகளைத் துரத்தியவர்(2)
ஆம்.வல்லரசு இந்தியா
வளமான இந்தியா
வறுமை இல்லா இந்தியா
என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.
ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம்.
நான் விரும்பும் தலைவர் அவரே!
மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.
இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர்
நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.
"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,
ஒழுக்க சீலராக்கியது
உயர்ந்த பண்பாளராக்கியது
கடின உழைப்பாளராக்கியது.
அவர் அசைவம் விரும்பாதவர்
வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)
அவர் திருமணம் புரியாதவர்
எவருக்கும் தீமை புரியாதவர்.(2)
அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.
அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.
எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர்.
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர்.
இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர்.
இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர்.
அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.
அவர் பழகுவதில் குழந்தை
சிந்திப்பதில் ஞானி
மாணவர்களுக்கு நண்பன்
நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி
விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர்
அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
திங்கள், 11 ஜூலை, 2022
கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5
இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.
வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.
அதைப்போல,
படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.
- வெள்ளத்தால் போகாது
- வெந்தணலால் வேகாது
- வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
- கள்ளர்க்கோ பயமில்லை
- காவலுக்கு மிக எளிது
- கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.
பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.
அதுபோல,
ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.
காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
- மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
- ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
- மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
- ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
- கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
- மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
- மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
- மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
- தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
- கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
- கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
- காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.
அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!
நன்றி, வணக்கம்.
காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2
இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல,
- ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட,
- மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ,
- இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த,
- தியாகச் சுடராய், வேள்வித்தீயாய்,
- நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.
- தமிழகத்தின் தவப் புதல்வர்
- தாயகம் காத்த புனிதர்
- கருப்புக் காந்தி
- ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
- அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
- ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
- பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
- மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
- வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்
- ஏழை எளியோர் வாழ்வில் நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
- கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
வியாழன், 30 ஜூன், 2022
காமராஜர் கவிதை
விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்
விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர்
படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்
காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்
பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்
மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்
காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்
காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்
சனி, 25 ஜூன், 2022
கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்
வெள்ளி, 24 ஜூன், 2022
வாழ்த்துரை
- நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
- பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
- கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
- விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
- தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
- 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
- தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
- வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
- இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
- வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)
நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என் வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!
ஞாயிறு, 15 மே, 2022
அநீதி
அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.
வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.
'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள்
துணைக்கு யாரையும் தேடாதே. அவனும் அப்படித்தான்.
உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.
அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.
சனி, 14 மே, 2022
ஊக்கம்
மனிதா!
எதைத் தேடுகிறாய்?
யாரைத் தேடுகிறாய்?
அவசர உலகில்
அனாவசியமாக
நீ உனக்காக உருவாக்கித்
தூக்கிச் சுமக்கின்ற
கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத்
தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?
இறைவனிடம்
இறக்கி வைத்து விட்டு
இளைப்பாற எண்ணுகிறாயா?
அரசனோ ஆண்டவனோ
உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?
ஊக்கம் கொண்டு
உழைத்தாலே
உறுதுயர் அழியுமே!
உண்மையை உணராது
பொய்யில் மயங்கித் திரியாதே!
தமக்கென முயலா
பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்
பழந்தமிழர் வாழ்முறை அறிக
கவலை விடுக
ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!
உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!
எழுகதிர் விடியலை
வரவேற்கத் தயாராயிரு.