அரிது அரிது
அரிதினும் அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது குறையின்றிப் பிறத்தல்
அதனினும் அரிது நல்லோர்சொல் கேட்டல்
அதனினும் அரிது தேர்ந்து கற்றல்
அதனினும் அரிது நல்லோர் நட்பு
அதனினும் அரிது அன்பைச் சேர்தல்
அதனினும் அரிது கவலை ஒழித்தல்
அதனினும் அரிது ஞானம் பெறுதல்
அதனினும் அரிது தாய்மை யாமே!
உண்மை
அரிச்சந்திரன் வாழ்வு
அஸ்தமனம்
அடையும் வேளையிலும்
அவனுள்ளம்
அசுத்தமடைய வில்லை.
கடமையே பெரிதாய்
வாய்மையே வாழ்வாய்
வாழ்வுக்கு இலக்கணமாய்
வாழ்ந்தவன்
காந்திக்கு மட்டுமல்ல
யாவர்க்கும் வழிகாட்டி.
நிறைகுறை
இருள் அதிகம், ஒளி குறைவு
மருள் அதிகம், மதி குறைவு
பொய் அதிகம், மெய் குறைவு
மண் அதிகம், பொன் குறைவு
கரி அதிகம், வைரம் குறைவு
அதிகமெல்லாம் பெருமையல்ல!
குறைவெல்லாம் சிறுமையல்ல!
சிந்தனை
கோடி நினைப்பு
ஓர் நொடிக்குள்
ஓடிப் பாய்ந்து
மாய்ந் திடினும்
வாடி நிற்கும்
வாழ்வு செழிக்க
தேடிப் பார்க்கும்
நினைப் பில்லையே !
தவம்அது
வேண்ட வேண்ட வரம்தரும் !
தண்ணீர்அது
தோண்டத் தோண்ட ஊறும்!
வைரம்அது
வெட்ட வெட்ட மின்னும்!
பொன்அது
சுடச்சுட ஒளிரும் !
வாழ்வுஅது
துன்பம் வருத்தும் அளவிற்கே!
உதவி
மழை மறுபயன் கருதாமல் பொழிகிறது !
மரம் மறுபயன் கருதாமல் காய்க்கிறது !
நிலம் மறுபயன் கருதாமல் சுமக்கிறது !
மனிதா!
மறுபயன் கருதாமல் மானிடர்க்கு உதவு
மனக்கவலை ஒழியும்!
மாண்புகழ் பெறுவாய்!
இன்றேல்
துரோகம்,
ஏமாற்றம், மனச்சோர்வு, விரக்தி
யாவும் குடிபுகுமே!
மாறாமை
தாமரைக் குளத்துள்ளே பிறப்பினும்
தவளையின் குணமது மாறிடுமோ?
அமிர்தமழை ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெய்திடினும்
ஆழ்கடல் நீர்தான் தித்திக்குமோ?
பாலோடு தேனூற்றி வார்த்தாலும் இலவம்
பஞ்சேயன்றி பழுத்தகனி தந்திடுமோ?
கயமாணாக்கர் மனங்கோணும் செய்கையன்றி
கடுகளவும் அன்பில் ஒழுக மாட்டாரே!
திருமண வாழ்த்து
செல்லம் நீ!
ஜோதிலிங்கராஜீன் செல்வம் நீ!
கோடித் தொலைவில் இருப்பினும்
சூரியனைக் கண்டு மலரும்
தாமரை நீ!
மண்ணில் விளைந்த பொன்னாய்
கடலில் விளைந்த முத்தாய்
மலையிடைப் பிறந்த மணியாய்
காட்டிடை வளர்ந்த அகிலாய்
சந்தனத்தின் நறுமணமாய்
கதிர் ஒளியாய்
ஒளியும் மணமும் நிறைந்து,
கடலில் கலக்கும் நதியாய்
உடலில் ஓடும் உயிராய்
தாமரை மலரின் இதழாய்
கண்ணைக் காக்கும் இமையாய்
அணுவின் பிணைப்பாய்
என்றும் இணைந்து
உள்ளம் கனிந்து
தேன்போல் சிறந்து
நீடுழி நீடுழி வாழிய வாழிய
எனவே வாழ்த்துகின்றேன் !!!