சனி, 7 பிப்ரவரி, 2026

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம்

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம் 

கதை மாந்தர்கள்: 

தினேஷ், கமலேஷ்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள்

சுரேஷ்: தினேஷின் தந்தை 

தலைமை ஆசிரியர் 

கண் மருத்துவர் 

காட்சி -1

இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சங்கரலிங்கபுரம் 

(தினேஷும் கமலேஷும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சங்கரலிங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் வழக்கம்போல கமலேஷ் காலை எட்டு முப்பதுக்கு பள்ளிக்கூடம் வந்து விட்டான். நண்பன் தினேஷை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் வராதது கண்டு ஏமாற்றம் அடைந்தான்.

முதல் பாட வேளை முடிந்து இரண்டாம் பாட வேளை தொடங்கியிருந்தது. அப்போது தினேஷ் அவனுடைய அப்பா சுரேஷ் உடன் வந்திருந்தான்)

கமலேஷ்: (ஓடி வந்து) என்னடா தினேஷ்... என்னடா ஒரு மாதிரி இருக்க...

(தினேஷ் பதில் எதுவும் கூறவில்லை)

தலைமை ஆசிரியர்: என்ன தினேஷ்? ஏன் லேட்டு? ஏன் சோர்வாக இருக்கிற? என்ன ஆச்சு? 

சுரேஷ் (தினேஷின் தந்தை): பள்ளிகூடம் போக பிடிக்கலனு அழுகிறான் சார்...

தலைமை ஆசிரியர்: ஏன் தினேஷ்? நீயும் உன் நண்பன் கமலேஷும் இந்த பள்ளிக்கூடத்திலேயே சிறந்த மாணவர்கள். உன் நண்பன் கமலேஷ் காலையிலேயே பள்ளிக்கூடம் வந்துட்டான். நீ மட்டும் ஏன் பள்ளிக்கூடம் வரப் பிடிக்கலைன்னு சொல்ற? ஏன் அப்படி சொல்ற? என்ன ஆச்சு உனக்கு? 

தினேஷ்: (வேற எங்கேயோ மாறி மாறி பார்த்தவாறு மெல்லிய குரலில்...) ஆங்... ஆங்... எனக்கு போன் வேணும்... எனக்கு போன் வேணும்...போன் குடுங்க... எனக்கு போன் வேணும்...(அழுகிறான்)

தலைமையாசிரியர்: (தினேஷின் தந்தை சுரேஷைப் பார்த்து) புகைப்பழக்கம் மாதிரி,  தினேஷ் திரைப்பழக்கத்தில் விழுந்துட்டான் போல இருக்கே...

தொடர்ச்சியா பல மணி நேரம் திறன்பேசியிலேயோ கணினியிலேயோ நேரம் செலவிடுறவங்களுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

தினேஷை கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க...

சுரேஷ்: சரிங்க சார். இப்பவே அழைச்சிட்டு போறேன்...

காட்சி-2

இடம்: கண் மருத்துவமனை, விருதுநகர். 

(மருத்துவர் தினேஷின் கண்களை பரிசோதித்தார்) 

மருத்துவர்: தினேஷோட கண்கள் ரொம்ப வறண்டு கிடக்குது. ஒரு வாரத்துக்கு மேல தொடர்ச்சியாக செல்போன் பார்த்தானா?

சுரேஷ்: டாக்டர் ஐயா... நானும் என் மனைவியும் பயர் ஆபீஸுக்கு வேலைக்கு போயிருவோம். இரண்டாம் பருவ விடுமுறை நாட்கள்ல ஏதாவது தேவை என்றால் எங்களுக்கு ஃபோன் போடுவதற்காக தினேஷிடம் செல்போன் கொடுத்துட்டு போவோம். எங்களுக்கு காலைல 8 மணியிலிருந்து நைட் 8 மணி வரைக்கும் வேலை இருக்கும். அந்த நேரங்கள்ல தினேஷ் கிட்டதான் செல்போன் இருக்கும். 

நாங்க வேலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அவன் போன கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சான்.  போன கொடுத்துட்டா அதை வாங்கிட்டு போய் ஒரு ஓரமா உக்காந்து கேம் விளையாடுவான். வீடியோஸ் பாப்பான். நானும் போன கொடுத்துட்டு தொல்லை விட்டா சரின்னு இருந்திட்டேன் டாக்டர். என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்?

(தினேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது போல சைகை செய்து கொண்டிருக்கிறான். )

மருத்துவர்: அவன பாருங்க. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல... எவ்வளவு சோர்வா இருக்கான்னு பாருங்க...

திடீர் திடீர்னு மாறிகிட்டே இருக்கிற காட்சிகளை இமைமூடாமல் பார்த்து பார்த்து கண்ணெல்லாம் வறண்டு போச்சு..  வறண்டு வறண்டு கண்ணில உள்ள நரம்புகள் எல்லாம் சேதம் ஆச்சு. கண்ணுல இருக்குற நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருக்கு. அதனால மூளை சோர்வு அடைஞ்சிருக்கு...

அவனோட மூளை மட்டும் இல்லை. இதயம் நரம்புகள் கூட பாதிக்கப்படுற நிலைமையில் தான் இருக்குது. 

(மருத்துவர், தினேஷோட இதயத்துடிப்பைச் சரிபார்க்கிறார்)

அவனுக்கு உடல் நடுக்கம், பயம், பதற்றம் எல்லாமே அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துருச்சு.

சுரேஷ்: ஐயோ டாக்டர்... நான் என்ன செய்வேன்... முன்னாடி எல்லாம் நல்லா படிப்பான்... வகுப்புல முதல் ரேங்க் எடுப்பான்... எல்லா நல்ல பழக்கங்களும் அவனிடம் இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு... அவன்கிட்ட செல்போனை கொடுத்து அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துட்டேன் டாக்டர்... எப்படியாவது என் மகனைச் சரிப்படுத்துங்கள் டாக்டர்...

மருத்துவர்: செல்போன்ல கேம் விளையாடுவது ரொம்பவே ஆபத்தானது. முதல்ல கண் பார்வை பாதிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். உடல் நடுக்கம் பயம் பதற்றம் எல்லாமே அதிகரிக்கும். 

அவசியமானதுக்கு மட்டும்தான் செல்போனை பயன்படுத்தணும். அதுவும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பயன்படுத்தணும். குறைவான நேரம் மட்டும்தான் செல்போனை உபயோகிக்கணும். இரவு நேரங்களில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் செல்போனை யூஸ் பண்ணவே கூடாது. அது கண்ணுக்கு பல மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். எத்தனையோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த மாதிரி குழந்தைகள் கிட்ட செல்போனை கொடுத்து கண்களைக் கெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர பெற்றோர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம் ஆயிடுச்சு. இந்த நிலைமை மாறனும். இதுக்கு பெற்றோர்கள் தான் முதல் காரணம். தேவையில்லாத நேரத்துல எல்லாம் செல்போனை குழந்தைகிட்ட கொடுக்காதீங்க. செல்போன்ல தேவையில்லாத எதையும் பார்க்க அனுமதிக்காதீங்க... உங்க குழந்தைகளை கண்காணிங்க. உங்க குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். 

சுரேஷ்: நன்றி டாக்டர். இப்பதான் எனக்கு புத்தி வந்திருக்கு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக