சனி, 7 பிப்ரவரி, 2026

மேன்மக்கள்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு

எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 

துஞ்சுவதே மாந்தர் இயல்பு

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு

வாழ்க்கை

வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.

சுதந்திரம்

இனிய காலை வணக்கம் 


சுயக் கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்!

மற்றவை யெல்லாம் 

மாயை தரும் போதை.

தெளிவு

தெளிந்த வானம்

காட்சிக்குச் சிறந்தது

தெளிந்த நீர் 

பருக ஏற்றது

தெளிந்த மனம்

வாழ்க்கைக்கு நல்லது

நான் பெற்ற இன்பம்

இறையின்பம் வேண்ட 

வேண்ட கிட்டும்!!!


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 

நான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

-திருமந்திரம்

துன்பமே இன்பம்


இனிய காலை வணக்கம் 

அஞ்சத் தகுந்த கடலே

அதிசயங்கள் நிறைந்தது!

ஆர்ப்பரிக்கும் அருவியே

அழகு நிறைந்தது!!

கடப்பதற்கரிய நெடுங்காடே

பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!

ஏறுதற்கரிய பெருமலையே 

எழிற்காட்சி தருவது!!!

எனில்,

துன்பத்தைக் கடந்த பின்னே

இன்பமே வந்தெய்தாதோ?

உழவு

இனிய காலை வணக்கம் 

அகல உழுவதை விட

ஆழ உழுவது நன்று

நிலத்திற்குப் பொருந்தும்

பொன் மொழி

மனத்திற்கும் பொருந்தும்.



உறுதி

இனிய காலை வணக்கம் 

மழை பொய்த்த காலத்தில் 

நெற்பயிர் தன்னை

வரகாக மாற்றிக் கொள்ளாது.

மழை மிகுந்த காலத்தில்

வரகு தன்னை

நெற்பயிராக மாற்றிக் கொள்ளாது.

அதுபோல, 

கேடு வந்து உற்ற போதும் 

சான்றோர் தீயோர் ஆகார்.

வாழ்வு வந்து உற்ற போதும் 

தீயோர் சான்றோர் ஆகார்.

உளவியல்

இனிய காலை வணக்கம் 

சூழலியல் உளவியலையும்

உளவியல் நமது வாழ்வியலையும்

நிர்ணயிப்பதால்

சூழலியலை மாற்றுங்கள்!!

அல்லது அதற்கு ஏற்ப

உங்கள் உளவியலை மாற்றுங்கள்!!!

வாழ்க்கை மாறும்!

வாழ்வு மலரும்.!!

தன்னம்பிக்கை

பிறர் ரசிக்கவில்லை என்பதற்காக

மலர்கள் வாடுவதில்லை

பிறர் வரவேற்கவில்லை என்பதற்காக

கதிரவன் இருள்வதில்லை 

பிறர் தூக்கி விடவில்லை என்பதற்காக 

அலைகள் எழாமலில்லை

தன்னை நம்பி

தன்னம்பிக்கை கொண்டு 

மதிப்பை மரியாதையை

பாராட்டை எதிர்பாராமல்

எதிர்நடை போடு


தன்னம்பிக்கை

இனிய காலை வணக்கம் 

சிறகுகளை நம்பி

பறவை உயரப் பறக்கிறது 

துடுப்புக்களை நம்பி

மீன் ஆழ நீந்துகிறது 

கால்களை நம்பி

கானில் மான் ஓடி மறைகிறது 

அதைப் போல 

உன்னை நம்பு

உண்மையை நம்பு

உன் உலகம் 

உன் ஆளுகைக்குள் வரும் 

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை மிகவும் எளிதானது. 

மனிதன் தன் ஆசைகளை அதிகரித்து

வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறான்.

ஒரு கட்டத்தில் வாழ்வின் நோக்கத்தை மறந்து 

வாழும் முறையைக் கைவிட்டு

அடர்வனத்தில் சிக்கித் 

தனித்து துயரும் பேதைபோல் 

கலங்குவான்.

தேவைகளைச் சுருக்கிச் 

சிக்கல்களைக் குறைத்துக் கொள்.

எளிய வாழ்வே இன்பம் தரும்!

எளிய வாழ்வே இறைமை தரும்!!

அரசியல்

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் போல திரைக்கவர்ச்சி இருக்கு. லஞ்சம் ஊழலால் இருபெருந்திராவிடக் கட்சிகளாலும் எவ்வித நன்மையும் பெறாத, ஏழை எளிய, புறக்கணிக்கப்பட்ட, சோர்ந்துபோன, விளிம்புநிலை மக்கள் தனக்கொரு நல்லகாலம் வரவேண்டும் என்பதையும் தாண்டி, நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கணும்னு சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தான்மட்டும் எப்படியாவது நல்லா இருக்கணும்னு நினைக்காதவர்கள். அதனால்தான் யாரையும் அண்டிப் பிழைக்காமல், எந்தக் கட்சிப் பிரதிநிதியிடமும் உதவி கேட்டு நில்லாமல் தன்மானத்தோடு ஏழைப் பிழைப்பு நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட பொதுமக்களின் கண்களுக்கு நடிகர் விஜய் தலைவராகத் தெரிகிறார். இது அரிதான நிகழ்வு. இதற்கு ஏற்றாற்போல், பொதுமக்களிடம் சென்று நம்பிக்கைகளைப் பெற வேண்டிய அரசியல் கட்சிகள், நடிகர் விஜய்யிடம் சென்று விமர்சித்துக் கொண்டு இருக்கின்றன. பொதுமக்களுக்குப் பகுத்தறிவை விட இறை நம்பிக்கை அதிகம்; அறிவை விட நம்பிக்கை அதிகம். 

சுயநலத்தைவிட பொதுநலம் அதிகம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து!

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை 

சாலைப் பயணம் போன்றது

மேடும் உண்டு 

சரிவும் உண்டு 

அடர்வனமும் உண்டு 

வெட்ட வெளியும் உண்டு 

பாலையும் உண்டு 

பசுஞ்சோலையும் உண்டு 

சுடும் வெயிலிலும் 

பெருமழையிலும் 

கடுங்குளிரிலும் 

தென்றல்காற்றிலும் 

கடுங்காற்றிலும் ஊடறுக்கும் 

சாலைவழித் தடம்போல 

வாழும் வாழ்க்கையில் 

தடம் பதிப்போம்!

களை

களை பறித்த பிறகுதான் 

தோட்டத்திற்குக் களையே (அழகு)

வருகிறது. 

பொறாமை பேராசை

பகை சினம் இவற்றை 

விலக்கிய பின்புதான் 

மனம் அமைதி எய்துகிறது.

முகம் பொலிவாகிறது.

அனுபவம்

கடந்து போன வாய்ப்பு

எதிர்வரும் வாய்ப்பைத்

தவறாமல் பற்றுவதற்கான

கருவி. 

அனுபவம் தந்த பாடத்தை

மறவாமல் இருப்பதே

வெற்றி(க்) காண(ன) வழி!!!

பற்றுறுதி

ஒன்று பிடித்து விட்டால்,

ஒன்றைப் படித்து விடலாம்!

ஒன்றைப் படித்து விட்டால்

ஒன்று பிடித்துப் போகும்!! 

ஒன்றைப் பிடித்துப்போகும் அளவுக்குப்

படித்துச் சுவைக்க வேண்டும்!!! 

பிடிக்காத ஒன்றும் 

படிக்கப் படிக்கப் பிடித்துப் போகும் !!!

படிப்பிலே சுவையுண்டு!

படிப்பவர்க்கே அது சுவைக்கும்.!

அது தனி உலகம் !!

ஏழைக்கும் அது கிட்டும் !!!

எவருக்கும் அதுதரும் சொர்க்கம்.!!!

பகுத்தறிவு

அறிவுக்குப் புலப்படாத

அம்சங்களை, 

அந்தணர் திணித்த வழிமுறைகளை,

அப்படியே நம்பித் தொலைக்காதே-மனமே!

உய்த்துணர மெய் உண்டு.

உணர்வாலே, உள்ளுணர்வாலே, 

உளப்பகுப்பாலே உய்த்துணரத் தலைப்படுவாய்!!

மூடநம்பிக்கை உன்னை முடமாக்கும்!

முடவனே நீ ஆனாலும் ,

நல்லதை மட்டுமே நீ எண்ணினால்,

உன் முடமும் உனக்குத் துணையாகும்!!

கடந்த கால கவலைகளைத் 

தூக்கித் திரியாதே?

நீ கோவேறு கழுதையில்லை...

வெற்றித் தடம் பதிக்கும் குதிரை,

வீரனை மட்டுமே சுமக்கும்!!!

நல்லதை மட்டுமே நினைக்கும்!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புதிய ஆண்டு இது...

புதுமைகள் நிறைந்த ஆண்டு இது...

புதையல்கள் நிறைய புதைந்திருக்கு...

பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ள,

புதிய புதிய முயற்சிகள் வேண்டும் ...

புத்தம் புதிய வழிகள் வேண்டும் ...

புதிய புதிய நம்பிக்கை வேண்டும் ...

புதிய புதிய சிந்தனை வேண்டும்... 

புதிய நல்ல மனம் வேண்டும் ...

கண்டதையும் கொட்டி வைக்க, 

மனம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல...

காற்றைக்கூட அளவுதாண்டி 

ஊதிவிட்டால் உடைந்து விடும்! 

மன அழுத்தம், மனக்கவலை, 

மனச்சோர்வு, மனப்பிரம்மை கொள்ளாமல்,

மன மகிழ்ச்சி, மன நிறைவு, 

மன வலிமை, மன வளத்தை வளர்த்து

மனித வாழ்வின் அத்துணை 

அம்சங்களையும் அனுபவித்து வாழ,

புத்தாண்டு காத்திருக்கு...

எதிர்வரும் காலம் முழுதும் உங்களுக்கு!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

விந்தையான உலகம்

விந்தையான உலகம் -இங்கு!

வேடிக்கையான மனிதர் கூட்டம்!!

பண்டுதொட்ட உயர் பண்பாட்டுக்கே 

இங்கு பழமை என்ற அவமானம்!!!

நேர்மைக்கு இங்கு 

நல்ல நேரமில்லை!!!

உண்மைக்கு இங்கு 

உற்ற துணையில்லை!!!

எளிமை இங்கு நகைக்கப்படுகிறது!!!

ஊக்கம் இங்கு ஒதுக்கப்படுகிறது!!!

ஒழுக்கம் இங்கு வெறுக்கப்படுகிறது!!!

நன்மை இங்கு நசுக்கப்படுகிறதுகிறது!!!

சான்றோர் இங்கு சிதைக்கப்படுகிறதுகிறது!!!

சரித்திரம் இங்கு கிழிக்கப்படுகிறது!!!

அறிவு இங்கு அழிவுப் பாதையில்...

அன்பு இங்கு நடிகர் வேடத்தில்...

இன்பம் இங்கு 

கானல்நீர் தோற்றத்தில்...

மனக் கவலைகள் கடல்போல் பொங்குகிறது

இந்த நிலை மாற வேண்டும் 

எழில் மிகு பண்புகள் வேண்டும் 

ஏற்றம் மிகு வாழ்வு வேண்டும் 

நேர்மை மிக்க உலகம் 

நிதானித்துப் பிறக்க வேண்டும் 



புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டின் முதல் நாள் இன்று 

முதல் அடி

நிதானமாக

கம்பீரமாக 

நம்பிக்கையுடன்

சிறுசிறு இலக்குகளுடன்

சிறு புன்னகையுடன் 

தொடர்ச்சியாக

அயர்ச்சி இன்றி

ஆரவாரமின்றி 

வலுவாக 

முன்னேறிச் செல்வோம்!!!

திட்டமிடு!!!

தெளிந்துசெய் !!!

துணிந்துசெய் !!!

தொடர்ந்துசெய் !!!

புதிய உலகம் 

உனக்காகவே உதயம்!!!

வாழ்த்தும் என் 

அன்பு இதயம்!!!

இனிய புத்தாண்

டு 

வாழ்த்துக்கள்!!!

ஒப்பீடு

மற்றொருவரோடு ஒப்பிட்டுப் பார்த்து உயரத்தைக் கூறாதீர். அது உண்மையான உயரம் கிடையாது. நேற்றோடு ஒப்பிடுங்கள். நேற்று உங்களுடைய முயற்சி, பயிற்சி, முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகியவற்றோடு ஒப்பிட்டால் இன்று உங்கள் உயரத்தைக் கணக்கிடலாம். இப்படி ஒப்பீடு செய்வதால் பொறாமை, கவலை, பதற்றம் ஏற்படாது. தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வளர்ச்சி தானாக உண்டாகும்.

தேர்தல்

உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் நம்பிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நாம் பெரும்பாலும் முட்டாள்தனமான முடிகளையே எடுக்கிறோம். அது தேர்தல் நாளில் நம் சந்ததிகளின் வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நம்மில் பலரும் உணரவில்லை. இது நாம்பெற்ற சாபம்!!! நம்மை நாமே அடிமை சாசனமாக ஒப்படைத்துவிட்டு ஆண்டாண்டு காலமாக கூப்பாடு போடுவதில், என்ன நியாயம் இருக்கிறது? ஊழலை விரும்பாத மக்களால், ஊழல்வாதிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? நெல்மணியை விளைவிப்பவன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்பது எப்படி புத்திசாலித்தனமான இருக்க முடியும்?

எதிரி

எப்போதும் நியாயமாக

நடந்து கொள்வது

என்று முடிவெடுத்த பின்பு

எதிரிகளை நேருக்கு நேர் 

சந்தித்துதான் ஆக வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் பொருள்.

சோதனை

தாங்க முடியாத 

சோதனைகளே 

ஒருவனை 

வலிமையானவனாக 

மாற்றும் 

அஞ்சாமை

அச்சம் ஒருவனின் 

அழிவுக்கான நெருப்பு. 

அஞ்சாமை ஒருவனின் 

வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் 

வழிசெய்யும் திறவுகோல். 

அச்சம் உள்ள விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடப்பட்டே தீரும். 

அஞ்சாத விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடியே வாழும். 

நாம் இரையா? 

நமக்கு இரையா? 

என்பதை நாம் கொண்ட 

அச்சமே தீர்மானிக்கும்!!!

அஞ்சாத நெஞ்சத்தோடு 

திமிறி நிற்போம்!!!

திணிப்பு

ஒருவன் தன்னுடைய 

விருப்பு வெறுப்புகளை 

தன்னை நம்பி உள்ள 

தன் குடும்ப உறுப்பினர்களிடம் 

திணிப்பதும் 

ஒருவகையான வன்முறையே!!! 

தன்னைச் சுற்றி உள்ள 

நபர்களைவிட 

தன்னைத் தானே 

பலம்வாய்ந்த மனிதன் 

என்று எண்ணும்போது 

தன்னுடைய ஈகோவோடு 

தன்னுடைய அசுர குணங்களும் 

இயல்பாகவே வளர்கின்றன. 

தன்னைப் போலவே 

பிறரையும் நேசிப்போம். 

ஒவ்வொருவருக்கும் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் 

இருக்கும் என்பதை உணர்ந்து 

அவற்றில் நம் விருப்பு -

வெறுப்புகளைத் திணிக்காமல் 

இருப்பதே இறைக்குணம்.

வாழ்க்கை

கனவுகளும் லட்சியங்களும் நடைமுறை உலகிற்குப் புறம்பாக இருந்தால் ஏமாற்றங்களும் தோல்விகளுமே பரிசாகக் கிட்டும். வானவில்லை இன்னும் வளைத்து என் வீட்டுக்குள் கொண்டு வருவேன் என்பவனின் கனவு எப்படி ஈடேறும்? இல்லாத ஒன்றைப் பிடித்து ஏங்குவதை விடுத்து எதார்த்த உலகில் உலகானுபவங்களை ஏற்றுக்கொண்டு மனமுறிவின்றி வாழ்வதே வாழ்க்கை. 

மகிழ்ச்சி

எவருக்கும் கெடுதல் செய்யாமல் நேர்மையான வாழ்பவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது. 

அனுபவம்

அதிக வலிகளை 

அனுபவித்தவரிடம் 

நிதானமும் பொறுமையும் 

விட்டுக்கொடுத்தலும் 

நிச்சயம் இருக்கும். 

நீ நான் என்ற பேதமோ 

பிறர்குறை காணும் 

அரையறிவோ 

நிச்சயம் இராது.  

வாழ்க்கை

பனிவிழும் மல்லிகைத் தோட்டத்தின் நடுவில் நிறைந்த நறுமணம் மனதை மயக்குவது போல வாழ்க்கையின் சுகானுபவங்களில் சிலபொழுதேனும் சொக்கித் திளையுங்கள்

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு 

வெள்ளைக் காகிதம். 

வண்ணம் தீட்டுவதும் 

கிறுக்கி எறிவதும் 

நம் விருப்பம். 

திருத்தி எழுத 

சில சந்தர்ப்பங்கள் 

கிடைத்தால் விரக்தியில் 

கிறுக்கிவிடாதீர்கள் 

சிந்தனை

அறிவைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

பொருளைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

பொருளைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

அறிவைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

இரண்டும் இல்லாதவர்கள் 

அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை வசந்தமாகும். 

நட்பு கவிதை

அருமை நண்பர்களைப் பிரிந்து 

எத்தனை காலம் கழித்தோம்!!

எத்தனை இடைவெளியில் கிடந்தோம்!!

தத்தித் தத்தி நடந்தோம்!!

எத்தனை தடவை விழுந்தோம்!?

எத்தனை தடவை எழுந்தோம்!?

எத்தனை எத்தனை இழந்தோம்!!

வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!!!

இன்னும் எத்தனை தயக்கம்?

இன்னும் எத்தனை கலக்கம்?

எத்தனை ஏற்றம்!

எத்தனை இறக்கம்!!

அத்தனையும் நமக்கே!!!

நம்மால் முடியும் .

எல்லாவற்றையும் கடந்தே நிற்போம்.

வென்றே நிற்போம்!!!

மனைவி கவிதை

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

பொங்கல் வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிப்புப் 

பொங்கலைப் போல 

வாழ்க்கையில் இன்பம் 

பொங்கட்டும். !!!

உங்கள் இல்லங்களிலும் 

அன்பே வடிவான 

உங்கள் உள்ளங்களிலும் 

வாழ்வும் வளமும் 

தங்கட்டும்.!!! 


நீங்கள் தான் கிங்

 ஐயாயிரம் வெவ்வேறு 

செயல்களைச் செய்வதிலே சிறப்பில்லை 

ஒரே செயலை 

ஐயாயிரம் முறை செய்வதே 

சிறப்பு தரும். 

சுவரில் 

ஐயாயிரம் இடங்களில் குத்துவிட்டாலும் 

சுவர் உடைவதில்லை. 

ஐயாயிரம் குத்துகளை 

ஒரே இடத்தில் விட்டால் 

சுவர் உடைந்து தூளாகும். 

உங்கள் திறமை என்னவோ 

அதைக் கண்டுபிடியுங்கள். 

அதில் ஐயாயிரம் முறை 

முயற்சி செய்து பாருங்கள். 

பிறகு நீங்கள் தான் கிங். 

வாழ்த்துக்கள் 

சுயபரிசோதனை

சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல் 

விட்டுவிட்டால் மனச்சாட்சியைக் கூட 

ஏமாற்றி விடலாம் என்பதை 

சுயபரிசோதனை செய்யாத காலங்களில் 

உணர்ந்து கொண்டேன். 

அது என் பொறுப்புகளில் இருந்து 

என்னை விடுவித்து கொள்ள 

பிறர் மேல் பழி போட 

நான் செய்த தந்திரம்தானே!!!

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம்

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம் 

கதை மாந்தர்கள்: 

தினேஷ், கமலேஷ்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள்

சுரேஷ்: தினேஷின் தந்தை 

தலைமை ஆசிரியர் 

கண் மருத்துவர் 

காட்சி -1

இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சங்கரலிங்கபுரம் 

(தினேஷும் கமலேஷும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சங்கரலிங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் வழக்கம்போல கமலேஷ் காலை எட்டு முப்பதுக்கு பள்ளிக்கூடம் வந்து விட்டான். நண்பன் தினேஷை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் வராதது கண்டு ஏமாற்றம் அடைந்தான்.

முதல் பாட வேளை முடிந்து இரண்டாம் பாட வேளை தொடங்கியிருந்தது. அப்போது தினேஷ் அவனுடைய அப்பா சுரேஷ் உடன் வந்திருந்தான்)

கமலேஷ்: (ஓடி வந்து) என்னடா தினேஷ்... என்னடா ஒரு மாதிரி இருக்க...

(தினேஷ் பதில் எதுவும் கூறவில்லை)

தலைமை ஆசிரியர்: என்ன தினேஷ்? ஏன் லேட்டு? ஏன் சோர்வாக இருக்கிற? என்ன ஆச்சு? 

சுரேஷ் (தினேஷின் தந்தை): பள்ளிகூடம் போக பிடிக்கலனு அழுகிறான் சார்...

தலைமை ஆசிரியர்: ஏன் தினேஷ்? நீயும் உன் நண்பன் கமலேஷும் இந்த பள்ளிக்கூடத்திலேயே சிறந்த மாணவர்கள். உன் நண்பன் கமலேஷ் காலையிலேயே பள்ளிக்கூடம் வந்துட்டான். நீ மட்டும் ஏன் பள்ளிக்கூடம் வரப் பிடிக்கலைன்னு சொல்ற? ஏன் அப்படி சொல்ற? என்ன ஆச்சு உனக்கு? 

தினேஷ்: (வேற எங்கேயோ மாறி மாறி பார்த்தவாறு மெல்லிய குரலில்...) ஆங்... ஆங்... எனக்கு போன் வேணும்... எனக்கு போன் வேணும்...போன் குடுங்க... எனக்கு போன் வேணும்...(அழுகிறான்)

தலைமையாசிரியர்: (தினேஷின் தந்தை சுரேஷைப் பார்த்து) புகைப்பழக்கம் மாதிரி,  தினேஷ் திரைப்பழக்கத்தில் விழுந்துட்டான் போல இருக்கே...

தொடர்ச்சியா பல மணி நேரம் திறன்பேசியிலேயோ கணினியிலேயோ நேரம் செலவிடுறவங்களுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

தினேஷை கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க...

சுரேஷ்: சரிங்க சார். இப்பவே அழைச்சிட்டு போறேன்...

காட்சி-2

இடம்: கண் மருத்துவமனை, விருதுநகர். 

(மருத்துவர் தினேஷின் கண்களை பரிசோதித்தார்) 

மருத்துவர்: தினேஷோட கண்கள் ரொம்ப வறண்டு கிடக்குது. ஒரு வாரத்துக்கு மேல தொடர்ச்சியாக செல்போன் பார்த்தானா?

சுரேஷ்: டாக்டர் ஐயா... நானும் என் மனைவியும் பயர் ஆபீஸுக்கு வேலைக்கு போயிருவோம். இரண்டாம் பருவ விடுமுறை நாட்கள்ல ஏதாவது தேவை என்றால் எங்களுக்கு ஃபோன் போடுவதற்காக தினேஷிடம் செல்போன் கொடுத்துட்டு போவோம். எங்களுக்கு காலைல 8 மணியிலிருந்து நைட் 8 மணி வரைக்கும் வேலை இருக்கும். அந்த நேரங்கள்ல தினேஷ் கிட்டதான் செல்போன் இருக்கும். 

நாங்க வேலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அவன் போன கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சான்.  போன கொடுத்துட்டா அதை வாங்கிட்டு போய் ஒரு ஓரமா உக்காந்து கேம் விளையாடுவான். வீடியோஸ் பாப்பான். நானும் போன கொடுத்துட்டு தொல்லை விட்டா சரின்னு இருந்திட்டேன் டாக்டர். என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்?

(தினேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது போல சைகை செய்து கொண்டிருக்கிறான். )

மருத்துவர்: அவன பாருங்க. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல... எவ்வளவு சோர்வா இருக்கான்னு பாருங்க...

திடீர் திடீர்னு மாறிகிட்டே இருக்கிற காட்சிகளை இமைமூடாமல் பார்த்து பார்த்து கண்ணெல்லாம் வறண்டு போச்சு..  வறண்டு வறண்டு கண்ணில உள்ள நரம்புகள் எல்லாம் சேதம் ஆச்சு. கண்ணுல இருக்குற நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருக்கு. அதனால மூளை சோர்வு அடைஞ்சிருக்கு...

அவனோட மூளை மட்டும் இல்லை. இதயம் நரம்புகள் கூட பாதிக்கப்படுற நிலைமையில் தான் இருக்குது. 

(மருத்துவர், தினேஷோட இதயத்துடிப்பைச் சரிபார்க்கிறார்)

அவனுக்கு உடல் நடுக்கம், பயம், பதற்றம் எல்லாமே அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துருச்சு.

சுரேஷ்: ஐயோ டாக்டர்... நான் என்ன செய்வேன்... முன்னாடி எல்லாம் நல்லா படிப்பான்... வகுப்புல முதல் ரேங்க் எடுப்பான்... எல்லா நல்ல பழக்கங்களும் அவனிடம் இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு... அவன்கிட்ட செல்போனை கொடுத்து அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துட்டேன் டாக்டர்... எப்படியாவது என் மகனைச் சரிப்படுத்துங்கள் டாக்டர்...

மருத்துவர்: செல்போன்ல கேம் விளையாடுவது ரொம்பவே ஆபத்தானது. முதல்ல கண் பார்வை பாதிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். உடல் நடுக்கம் பயம் பதற்றம் எல்லாமே அதிகரிக்கும். 

அவசியமானதுக்கு மட்டும்தான் செல்போனை பயன்படுத்தணும். அதுவும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பயன்படுத்தணும். குறைவான நேரம் மட்டும்தான் செல்போனை உபயோகிக்கணும். இரவு நேரங்களில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் செல்போனை யூஸ் பண்ணவே கூடாது. அது கண்ணுக்கு பல மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். எத்தனையோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த மாதிரி குழந்தைகள் கிட்ட செல்போனை கொடுத்து கண்களைக் கெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர பெற்றோர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம் ஆயிடுச்சு. இந்த நிலைமை மாறனும். இதுக்கு பெற்றோர்கள் தான் முதல் காரணம். தேவையில்லாத நேரத்துல எல்லாம் செல்போனை குழந்தைகிட்ட கொடுக்காதீங்க. செல்போன்ல தேவையில்லாத எதையும் பார்க்க அனுமதிக்காதீங்க... உங்க குழந்தைகளை கண்காணிங்க. உங்க குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். 

சுரேஷ்: நன்றி டாக்டர். இப்பதான் எனக்கு புத்தி வந்திருக்கு. 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பாடலாசிரியர் மலர்மகேந்திரன்

Mysongs

எனது பாடல்கள் 

சிறப்புரை வழங்குபவர் திரு மா.மாடசாமி

திரு.மா.மாடசாமி அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மலையிலே பிறந்தாலும் 

சந்தனம் ...

மலைக்கு என்ன செய்யும்? 

கடலிலே பிறந்தாலும் 

முத்து ...

கடலுக்கு என்ன செய்யும்? 

வீணையிலே பிறந்தாலும் 

இசை ...

வீணைக்கு என்ன செய்யும்? 

நீங்கள் வரைந்த 

வண்ண ஓவியம் நாங்கள் ...

நீங்கள் செதுக்கிய 

அழகுச்சிலைகள் நாங்கள் ...

நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...

உளியின் வலியைப் 

பொறுத்துக் கொள்ளும் கற்களை...

நீங்கள்...

பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...

உங்களிடம் பட்ட கடனை 

எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???


பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..

வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...

பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...

ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை 

கொள்ளை கொண்டீர்கள்...!


பூவில் சுரந்த தேன் போல...

நாவில் தவழும் தமிழ் போல...

புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...

புன்னகை தவழும் மழலை போல...

உணவில் கரைந்த உப்பு போல...

கனவில் தோன்றும் தேவதை போல...

எங்கள் வாழ்க்கையைச் 

சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...


ஆனாலும் இப்போது...

அதிக ஸ்ட்ரெஸ் ஃபுல்லான ஜெனரேஷன் நாம தான்...

நேற்றைய பழமைக்கும் 

இன்றைய புதுமைக்கும் 

இடையில பிறந்து வளர்ந்தவங்க நாங்க...

நல்லா யோசிச்சா...

நம்ம கிட்ட இருக்கிற நல்ல பண்புகளே 

நமக்கு பிரச்சனையா அமைஞ்சிருது...

உண்மை, நேர்மை, 

உழைப்பு, உறவுகளை மதிக்கிறது என்று 

நாம கத்துக்கிட்ட எல்லா நல்ல விஷயங்களுக்கும் 

இந்த சமூகத்தில் இப்ப மதிப்பு இல்ல...

அதனால, இந்த குணங்களை எல்லாம் வச்சிக்கிறதா 

இல்ல விட்டுவிடலாமா அப்படின்ற குழப்பத்துல டென்ஷன் டென்ஷன்...

தீர்வு ஒன்று தான்...

நல்லதுக்கே காலம் இல்லங்க என்ற பழமொழியை ஓரமா வச்சிட்டு...

நம்மளுடைய நற்பண்புகளை 

கீழ போட்றாம கெட்டியா பிடிச்சுக்கணும்...

அதனால என்ன பிரச்சனை வந்தாலும் 

சமாளிக்கணுங்கிற மனநிலையை வளர்த்துக்கணும்....

இதுதான் ஒரே வழி...

ஏன்னா...

உண்மை நேர்மைய கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாமதான்...

உறவுகளை மதிக்கிற பழக்கத்தை கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்...

இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் நாம தான்...

நற்பண்புகள் தான் நம்மளுடைய தனித்துவம்...

அத எதுக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது...

இதையெல்லாம் கத்துக் கொடுத்த 

என்னோட ஆசிரியர்களுக்கு 

என் உளப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சிறப்புரை பெ.இலட்சுமணன்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணிய புலவன் பாரதியின் 

எண்ணப்படி ஆசிரியர் பணியை 

அர்ப்பணிப்போடு ஆற்றிய 

என் மனம் கவர்ந்த 

ஆசிரியர் பெருமக்களை வணங்கி 

என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...


எம் தமிழ் அம்மா... 

அம்மம்மா...

சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 

பாக்க மாட்டாங்க...

அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 

ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....

அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஒரே கலர் கலரா இருக்கும்!!!

அக்கறையோடு நடத்துவாங்க...

திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...

கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 

இலக்கணப் பயிற்சிதான்...!

அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 

செகண்ட் பேப்பர்ன்னு 

ரெண்டு பேப்பர் உண்டு...

கடின உழைப்பாளி..!

அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...

எழுத்துப்பிழை இருக்கான்னு 

-வரி வரியா பார்ப்பாங்க...

பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...

எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...

நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...

இவர்கிட்ட படிச்சவன் 

மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.

70 மார்க் எடுத்திருவான்...

டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...


எங்க வாய் சும்மா கிடக்காது...

அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.

அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால

உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...

சில நேரம் அழுதுருக்காங்க...

அதெல்லாம் அப்ப புரியல...

இப்பதான் அவரோட அருமை புரியுது...

இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 

நிறைய பேரு

டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...


அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 

என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...

எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....

நன்றி மா ... தமிழம்மா...!!!


அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...

எப்பவும் சிரிச்ச முகம்...

அன்பாலேதான் திருத்தணும்றது 

இவரோட பாலிசி....

எப்பவுமே படிக்காமல் திரியுற 

10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...

அதாவது எப்பவுமே பக்கத்துலயே 

உட்கார வைத்துக்கொள்வார்கள்...

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...

கிளிப்பிள்ளை மாதிரி...

நல்லா படிக்கிற மாணவர்களை 

பெருசா கண்டுக்க மாட்டாங்க...

அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...


அதிக ரசிகர் படை இவருக்கு தான்...

நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...

அது சுத்தம் இல்லன்னு தெரியும்...

இருந்தாலும்...

குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...

பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...


எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...

பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 

எங்க டீச்சரு...

ஆனைமுகனே 

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே 

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா 

இந்த ஏழை முகம் பாருமையா 

அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 

எல்லாரையும் சொல்ல வச்சு 

பாஸ் பண்ண வச்சவங்க...


ஒரு இடத்தில் உட்காராம 

அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 

திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...

யாருக்குமே வலிக்காது...

வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...

நுணலும் தன் வாயால் கெடும் 

அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...

எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...

நலம் விசாரிப்பாங்க...

எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...


அப்புறம்...

எங்க பாட்ஷா வாத்தியார்...

முருகானந்தம் சாரு..

ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...

கூட்டல் விதி, கழித்தல் விதியை 

தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...

அருமையா நடத்துவார்...

முதல்ல ...

ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...

அப்புறம் ...

ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...

அப்புறம் ...

ஒரு குழப்பு குழப்பி விட்டு

எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 

நடத்துவாரு...


ஒரே கணக்க குறைஞ்சது 

மூணு மெத்தட்ல நடத்துவாரு...

இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...

கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...

ஏதாவது மறந்து போச்சுன்னா...

அடி விழும்...

நிறைய கம்பு ஒடியும்...

வேற கம்பு கொண்டுவர சொல்லி...

அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...

மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...

நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...

அந்த டானிக்கு தான் ...

அந்த அக்கறை தான்...

எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...

எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...

தேங்க்யூ சார்....

சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 

நன்றி ...!



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சிறப்புரை இராஜேந்திர பிரசாத்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...

மிகவும் இனிப்பான தருணம் இது...

25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்

எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 


காலம் பற்பல மாற்றங்களை

நமக்கு தந்து விட்டது.

ஆனாலும், 

நம் மனம் மட்டும் 

டைம் ட்ராவல் பண்ணி, 

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,

பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 

நட்புணர்வுடன்... 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 

மலர்ந்த நினைவுகளுடன் நாம்...

மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 

ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....

நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...

 

வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...

மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...

ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 

என் உரையைத் தொடங்குகிறேன். 


வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !

வாழும் வாழ்க்கை அற்புதமானது !


அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!

அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை

ஆற்றுவித்தவர் நீங்கள் ...

கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...

எட்டுத்திசையைக் காட்டி நின்று,

ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...

ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்

சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...

இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...

மனக் கோவில் உமக்கே கட்டி...

வழிபடுகிறோம் நாங்கள்...

எம்மால், உமக்குப் பட்ட கடனை...

எப்படித் திருப்பித் தர முடியும்? 

நன்றியைத் தவிர...


எத்தனை எத்தனையோ சவால்களை ...

இன்ப துன்பங்களை ...

ஏற்ற இறக்கங்களை...

ஏமாற்றங்களை  ...

விருப்பு வெறுப்புகளை....

வினோதங்களை ....வியப்புகளை ...

இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.

இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 

நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...

எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பசிக்குதோ இல்லையோ...

பால் புகட்டும் தாய்போல ...

எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ ...

பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...


நாங்கள் கண்ட நல்லாசிரியர் நீங்கள்...

எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?

யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?

ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...

இரக்கம் காட்டி...

அன்பைக் குழைத்து ...

அறிவைப் புகட்டிய...

பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...

ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...

உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,

நாங்கள் பெற்ற வரம்...


மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!

கருப்பு வைரம் நீங்கள் !!!


கண்டிப்புக் காட்டி,

புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...

மீண்டும் மீண்டும் விளக்கி...


சொல்லையும் பொருளையும்

ஐயமறப் பொருத்தி...


நேர்க்கூற்று அயற்கூற்றை

நிதானமாக நடத்தி...


இலக்கணக் குறிப்பை 

இலகுவாகச் செதுக்கி...


அலகீட்டு வாய்ப்பாட்டை 

அற்புதமாக நடத்தி...


இலக்கணப் பாடத்தைத் 

இனிக்க இனிக்க நடத்தி...


திணை பால் எண் இடம் காலம் என்று ...

பிழையற்ற தொடர் அமைக்க...

பயிற்சி பயிற்சி என்று...


கல்லாய் இருந்த எங்களை

அருந்தமிழ்ச் சொல்லால்...

செதுக்கிச் செதுக்கி...


அழகுச் சிலையாக்கி...


மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...

வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...

என்று வைத்து...


எங்கள் வாழ்க்கையில் 

ஒளி ஏற்றிய அம்மா...

தமிழ் அம்மா...

எங்கள் அம்மா...


உங்கள் பாதம் தொட்டே...

வணங்கி நிற்கிறோம் அம்மா...


இந்தப் பிள்ளைகள்

இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...

என்று நீங்கள் ஏங்கியதைப் 

பார்த்திருக்கிறோம் நாங்கள்...


அன்று புரியவில்லை 

உங்கள் ஏக்கம்...


இன்றுவரை நிலைத்திருக்கிறது 

உங்களின் தாக்கம்...


அரசுப்பள்ளி ஆசிரியை நீங்கள் ...

அவசியத்திற்கும் மேலே 

எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...


அலட்சியமாய் இருந்தோம்

அறியாமையில் உழன்றோம் 

அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 


அடித்தீர்கள்... வலிக்கவில்லை...

திட்டினீர்கள்... உறைக்கவில்லை...


அன்பு காட்டி, அரவணைத்து,

தகரமாய்க் கிடந்த எங்களை 

தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...


இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 

எங்கள் மனதில் என்றும் நீங்கள் 

தங்கம்தான்...


நான் பிறந்த கருவறைக்கு 

இணையானது உங்கள் வகுப்பறை...


கருவறை கவசம் தந்தது என்றால்...

உங்கள் வகுப்பறை 

கல்வி என்னும் ஆயுதம் தந்தது..

உங்களுக்கு என்னுடைய நன்றியை

உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.

வெள்ளி விழா முனைவர் திருமதி ஆனந்த கனக ஜோதி அவர்களின் வரவேற்புரை வரவேற்புரை

தலைமை ஆசிரியருக்கு வரவேற்புரை - வழங்குபவர் 

முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி அவர்கள் 


பிரபஞ்சம் கதிரவனை

அனுமதித்ததால் 

கருமை விலகி 

நீலவானம் நீண்டு கிடக்கிறது!!!


காற்று தண்ணீரை

அனுமதித்ததால் 

மேகம் திரண்டு 

எழுந்து நிற்கிறது!!!


மேகம் ஒளியை

அனுமதித்ததால் 

வண்ணங்கள் குழைத்து 

'வானவில்' வளைந்து 

கவர்ந்து இழுக்கிறது!!!


நீங்கள் எங்களை (தலைமை ஆசிரியரைப் பார்த்து...)

அனுமதித்ததாலேயே,

தோட்டத்தில் மலர்ந்த 

வாசனை மிகுந்த 

வண்ண மலர்கள் போல

இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!



(பின்வரும் ஒவ்வொரு புகழ்ச்சித் தொடருக்கும் இடைவெளி விட வேண்டும். இடைவெளியில் தலைமை ஆசிரியரை நோக்கி சைகை மொழி காட்ட வேண்டும்)


கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!

கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!

நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!

உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!

உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கலசம் இவர்!!!

கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உங்களை வருக வருக என வரவேற்பதில் 

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!

செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

திங்கள், 8 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே, மது ஸ்ரீ

 

ஆருயிர் மகளே! 

என் அன்பு சித்திரமே! 

உன் வருகைக்கு முன்பு 

எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது. 

நீ பிறந்த பிறகு 

உனக்கான உலகத்தில் 

உனக்காகவே வாழ்வதன்று 

முடிவெடுத்து விட்டேன். 

என் ஒட்டுமொத்த உலகமும் நீதான். 


எது சரி? எது தவறு? என்று 

மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே! 

வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்! 

ஆனால், வாழ்க்கையையே 

பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது. 

குழந்தையாய் இருக்கும்போதே 

படிக்கும் திறனை வளர்த்துக் கொள்! 

வளர்ந்த பிறகு 

உலக விவரம் அறிந்த பிறகு 

படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! 

வளர்ந்த பிறகு 

கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்! 

கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்! 

உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்! 

உன்னை உன் நண்பர்களுடனோ 

உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!. 

உலக அளவில் 

உன் வயது குழந்தைகள் 

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று 

ஒப்பீடு செய்து பார்! 

அவர்களுக்கு தலைவியாக 

அவர்களுள் சிறந்தவளாக 

அவர்களோடு இணைந்து வாழ 

அவர்களைப்போல திறன்களை 

ஆற்றல்களை 

சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? 

அவர்கள் சொல்வதை 

நீ கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்கள் உன் சொல்லைக் 

கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது 

விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது 

நீ சோம்பி இருக்கலாமா? 

சோம்பல் ஒரு கொடிய விஷம்! 

சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்! 

உழைப்பே உன்னதம்! 

உயிருள்ளவரை உழைப்பை நேசி! 

உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும். 

ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும் 

உழைப்பு நம்பிக்கையைத் தரும் 

உழைப்பு பெருமையைத் தரும் 

உழைப்பு பெருமித உணர்வைத் தரும் 

உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் 


ஆனால், சோம்பல் நோயைத் தரும் 

சோம்பல் வெறுப்பை விதைக்கும் 

சோம்பல் அவநம்பிக்கையைத் தரும் 

சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும் 

சோம்பித் திரியாதே! 

சோம்பல் இருந்தால் 

பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும் 

கவலையை அதிகரிக்கும் 

உன்னால் முடிகிற 

சாதாரண வேலையைக் கூட 

"செய்ய முடியாது போல" 

என்று எண்ண வைக்கும் 


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ? 

அவ்வளவுக்கு அவ்வளவு 

உனக்கு மதிப்புக்கூடும். 

உனக்கு ஆற்றல் அதிகரிக்கும் 

உனக்கு நீ நினைத்தது 

எல்லாம் கிடைக்கும் 

படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும் 

அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி 

எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது 

ஆனால், உன் படிப்போ 

உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது! 

உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள். 

மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம் 

இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம் 

இருந்து கொண்டே இருக்க வேண்டும் 

அது "நான் சாதாரண குழந்தை அல்ல 

நான் சாதாரண பெண்ணல்ல 

நான் சாதிக்க பிறந்தவள் 

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது 

சாதிக்க பிறந்த நான் 

சோம்பேறியாக இருக்கக் கூடாது 

உலகத்தையே ஆள வேண்டிய நான் 

ஓய்வு எடுக்கக்கூடாது 

நான் ஓய்வு எடுத்தால் 

உலகத்தை யார் காப்பாற்றுவது? 

காற்று மழை கதிரவன் நிலா 

என்றாவது ஓய்வெடுத்ததுண்டா? 

ஏன் என் இதயம் கூட 

ஓய்வெடுத்ததில்லையே !

நான் ஓய்வு எடுக்கக்கூடாது !

கடவுள் என்னைப் படைத்தது 

ஓய்வு எடுக்க அல்ல !

கடவுள் என்னிடம் 

உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார் 

இந்த உலகத்தில் 

நான் சும்மா பிறக்கவில்லை 

நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !

அதனால் நான் சோம்பலை 

விட்டு விட வேண்டும் 

எல்லாருக்கும் முன்மாதிரியாக 

நான் இருக்க வேண்டும் !

உலகத்திற்கு புதிய வழியைக் 

கண்டுபிடித்து தர வேண்டும் 

உலகத்திற்கே வழிகாட்டியாக 

இருக்க வேண்டிய நான் 

முயற்சி இன்றி 

நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது! 

நான் இப்போது இருப்பது போன்று 

இருக்கலாமா? கூடாது!" 

என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்! 


எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது 


இதையெல்லாம் 

என்னுடைய ஆசைகளை 

கனவுகளை 

உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன் 

என்று தவறாக எண்ணி விடாதே! 

நீ யாரிடத்தும் 

எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது 

என்பதற்காகச் சொல்கிறேன். 

நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் 

அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து 

"படித்துக் கொண்டே இரு" 

அம்பேத்கரைப் போல....


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!

வரவேற்புரை

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களுக்கு வரவேற்புரை 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் 

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணியப் புலவன் பாரதியின் 

பாடல் வரிகளுக்கு ஏற்ப 

கல்விப் பணியை முதற்பணியாக கொண்டு 

அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்ற 

நமது தமிழக முதல்வரின் கனவுகளை நினைவாக்க 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தந்திருக்கும் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்கள் நீங்கள் 

கழகத்தின் மணிமுடியில் பதிக்கப்பெற்ற 

ஒளிமிக்க வைரக்கல் நீங்கள்

அறுபத்தெட்டு வயதிலும் இளைஞர் இவர் 

அயராது இடையறாது மக்கள் பணி ஆற்றும் மாணிக்கம் இவர் 

அழகாபுரியில் அவதரித்த சூரியன் 

நான்காம் முறையாக மணிமுடிசூடக் காத்திருக்கும் நாயகன்

அப்பழுக்கற்ற உன்னதமான தலைவர்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்

திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களை 

வருக வருக என வரவேற்பதில் 

எமது பள்ளி பெருமை கொள்கிறது.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

Annual day - model

 


அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம் 

ஆண்டு விழா 2024-2025

நாள்:14-02-2025

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

_________________________________________________________________


கனியிடையே ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! - என்ற பாரதியின் வரிகளில் தமிழன்னையை வணங்கி, வரவேற்புரையைத் துவங்குகிறேன்.

_________________________________________________________________________

தலைமை ஆசிரியருக்கு...

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_________________________________________________________________________




சிறப்பு விருந்தினர் திரு ச. ராஜகுமார் வட்டாட்சியர் அவர்களுக்கு...

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களே! 

வருக! வருக! என வரவேற்கிறோம்.

________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களுக்கு....

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 

மக்கள் யாக்கை இது என உணர்ந்து 

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் -

என்று நல்ல அறத்தையே விரும்பி செயலாற்றி வருகின்ற சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்.

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் திரு. ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு...

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 

உரிமை உடைத்து இவ்வுலகு- என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழும் சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு. ஜான் எலிசா தேவகுமார் M.TECH அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்

_________________________________________________________________________

ஆசிரியர் பெருமக்களுக்கு...

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________





மாணவன் யஸ்வந்தாமனுக்கு...

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் பெருங்கடலும் 

அகிலை ஈன்றதால் அடர்ந்தகாடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. 

மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________

மாணவச் செல்வங்களுக்கு...

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________________________________________

சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தல்....

சிறப்பு விருந்தினர், விருதுநகர் வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வர்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு.ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களை வரவேற்றல்...

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்....

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களைச் சிறப்புரை வழங்க வரவேற்றல்

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!!!

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வரவேற்றல்...

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_______________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைத்தல்..

நுட்பமான சிந்தனையாளர் 

திட்பமான கொள்கையாளர் 

கூர்த்த அறிவாளர்

தேர்ந்த செயல்வீரர்

மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வாழ்த்துரை 

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

ஏன் தெரியுமா? ...

அது ஒரு காடு. 

'சோ'வென்று மழை பொழிந்து கொண்டிருந்தது.

அப்போது குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது. 

அதைக் கண்ட தூக்கணாங்குருவி, குரங்கிடம் போய், என்னைப்போல் வீடு கட்டிக் கொண்டால், மழையில் நனையாமல் இருக்கலாம் அல்லவா? என்று புத்திமதி சொன்னது.

இதைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. விறுவிறு என்று மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டை பிரித்து எறிந்தது. 

இன்றைய இளைஞர்களிடம் நல்லதை கூறுவதற்கே தயங்க வேண்டி இருக்கிறது. 


வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 


சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.


காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.


ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் இருந்த அதே இடத்தில்தான் இருப்பார். 

வேற்றுமைகளை விலக்கு.

வேண்டாததை ஒதுக்கு.


உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்திருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்திருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்திருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ கழுதையாக இருந்திருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. உணர்ந்து கொள்.

உன் பார்வையும் விசாலமாகட்டும். நலம் கிட்டும்.


எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 


ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!


உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி மட்டும் எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.


உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.


உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுவதை அனுமதிக்கலாமோ?. 

ஏனோதானோ என்று வாழ்வைக் கழிக்கலாமோ?


எதற்கும் நீ கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.


கட்டுப்படுத்தப்பட்ட நெருப்புதான் சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டையே அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான். விழிப்புணர்வு கொள்.


படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். 

தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 


கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. கண்டுகொள்.

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. புரிந்துகொள்.


கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.


நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.


நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள் 

நேர்மையை என்றும் துணையாகக் கொள்.


அழுக்கைத் தேக்கி வைக்கும் சல்லடையாக இராதே!

இனிய இசையைத் தேக்கி வைக்கும் புல்லாங்குழலாய் இரு.


அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு 

தராசின் நடுமுள்ளாய் நின்று

தாய்மை அன்போடு எண்ணி

குறைகளைச் சுட்டி 

நிறைகளைக் காட்டி

நிறைவாக நம்பிக்கை ஊட்டி

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள்...

________________________________________________________________________

சிறப்புரை வழங்கும் மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களை வரவேற்றல்...

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

சிறப்புரை வழங்கிய மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றி கூறல்

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

________________________________________________________________________

பரிசளிப்பு விழா 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளிகள் அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாணவர் யஸ்வந்தாமன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.


அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.சோபியா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.ஹேமலதா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர் எஸ்.கருப்பசாமி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர் ஏ.அரிச்செல்வம். அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு 

கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபாய் 2000 பரிசு வழங்கிப்பாராட்டுகிறார் கணித ஆசிரியர் திரு பி.சுப்பிரமணியன் அவர்கள்.

கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோரை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






அரையாண்டுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு


ஆறாம் வகுப்பு அ பிரிவு

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு

ஏழாம் வகுப்பு அ பிரிவு

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு 

ஏழாம் வகுப்பு இ பிரிவு

எட்டாம் வகுப்பு அ பிரிவு

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு 

எட்டாம் வகுப்பு இ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு

பத்தாம் வகுப்பு அ பிரிவு

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு

பத்தாம் வகுப்பு இ பிரிவு

பதினோராம் வகுப்பு A பிரிவு

பதினோராம் வகுப்பு B பிரிவு

பதினோராம் வகுப்பு C பிரிவு

பதினோராம் வகுப்பு D பிரிவு

பதினோராம் வகுப்பு E பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு A பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு B பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு C பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு D பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு E பிரிவு

_________________________________________________________________________

நன்றியுரை வழங்க வரும் தாவரவியல் ஆசிரியரை வரவேற்றல்...

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி உரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு நன்றி கூறுதல்

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


கலை நிகழ்ச்சிகள்:

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

"உண்மை ஒளி" நாடகக் குழுவினரை வரவேற்றல்

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

நாடகக் குழுவினருக்கு நன்றி பாராட்டுதல்

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

________________________________________________________________________

நடன நிகழ்ச்சிகள் 

ஆறாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல்...

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவிகள்...

ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஆறாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

அன்பைக் கடன் கொடு. அது அதிக வட்டியுடன் திரும்பி வரும் என்பார்கள். அன்பு நிறைந்த ஆறாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம், அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாக இருக்கட்டும் என்பார்கள். அழகாக நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


ஏழாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள்...

ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

குலுக்கென்று சிரித்த முல்லை 

மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே -என்ற பாரதிதாசனின் 'சிரித்த முல்லை' கவிதையை நினைவூட்டும் ஏழாம் வகுப்பு மாணவிகளின் நடனத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

ஏழாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கு. பாதி வேலை உடனே முடியும் என்பார்கள். உற்சாகத்தோடு நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல்

கடவுள் நூலைத்தான் கொடுப்பார். மனிதன் தான் ஆடையை நெய்ய வேண்டும் என்பார்கள். கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக நடனமாடிய ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


எட்டாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.



எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே 

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாரே -போல் நடனமாடிய எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

எட்டாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை 

காலம் சோம்பேறியை மதிப்பதில்லை. சோம்பல் இன்றி நடனமாட வருகைதரும் எட்டாம்வகுப்பு மாணவர்களை வரவேற்கிறோம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

ஒழுக்கத்தை விடச் சிறந்த உடை உலகத்தில் இல்லை என்பார்கள். 

ஒழுக்கமுள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை நடனமாட அழைக்கிறோம்...

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகு

ப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று முறையிட வேண்டாம். முள் செடியில் ரோஜா இருக்கிறது என்று மகிழ வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

சுயமாக சிந்திக்காத மனிதன் ஒரு அடிமை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


நாட்டுப் பண் சேர்ந்து பாடுதல்


அனைவரும் கலைந்து செல்லுதல்





புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டுவிழா2025

 ஆண்டு விழா வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

____________________________________

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_____________________________________

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் அவர்களே! 

வருக! வருக!

_____________________________________

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________

ஆண்டறிக்கை 

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

---------------------------------------------------

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

---------------------------------------------------

சிறப்புரை

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் __________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர்_______________ அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்!!!

_____________________________________

வாழ்த்துரை

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

வாழ்த்துரை வழங்க வருமாறு___________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய___________அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்...

________________________________

பரிசளிப்பு விழா 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு.

ஆறாம் வகுப்பு அ பிரிவு_________

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு_________

ஏழாம் வகுப்பு அ பிரிவு__________

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு _________

ஏழாம் வகுப்பு இ பிரிவு__________

எட்டாம் வகுப்பு அ பிரிவு_________

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு _______

எட்டாம் வகுப்பு இ பிரிவு________

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு_____

பத்தாம் வகுப்பு அ பிரிவு_______

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ______

பத்தாம் வகுப்பு இ பிரிவு________

பதினோராம் வகுப்பு அ பிரிவு___

பதினோராம் வகுப்பு ஆ பிரிவு__

பதினோராம் வகுப்பு இ பிரிவு__

பதினோராம் வகுப்பு ஈ பிரிவு___

பதினோராம் வகுப்பு உ பிரிவு___

பன்னிரண்டாம் வகுப்பு அ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஆ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு இ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஈ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு உ பிரிவு

_______________________________

பேச்சு

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

__________________________________________________

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

நாடகம் 

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

_____________________________________

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_____________________________________

நடனம்

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவர்கள்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்...

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

_______________________________

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட அழைக்கிறோம்...

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

நன்றியுரை

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு__________அவர்களை வரவேற்கிறோம்.

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய______அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________

வாழ்த்துரை

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 

சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.

காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.

ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் அதே உயரத்தில்தான் இருப்பார்.

உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ கழுதையாக இருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. 

உன் பார்வை விசாலமாகட்டும். 

எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 

ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!

உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.

உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.

உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுகிறது. 

எதற்கும் கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.

கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டை அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான்.

படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 

கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. 

கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.

நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.

அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

ஆண்டறிக்கை 2024-2025

 அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்

ஆண்டறிக்கை 2024-2025

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப்பு உடைத்து


இப்பள்ளி 1956ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பாரம்பரியமிக்க பள்ளி இது. பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி இது. 

இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர்களை வணங்கும் நேரமிது.


இப்பள்ளியில் தற்போது 587 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 31 ஆசிரியர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 பதிவறை எழுத்தர் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது.


கடந்த 2023- 24ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்பில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி எஸ்.ஹேமலதா 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 

மாணவன் எஸ்.கருப்பசாமி 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவன் ஏ.அரிச்செல்வம் 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவர் எம்.யஸ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததோடு சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தார். 

மாணவி பி.ஷர்மிளா பாண்டி 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவி எஸ்.சோபியா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கணிதப்பாடத்தில் மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தனர்.


7.5% உள்இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தோர் விவரம்.

மாணவர் கே.கார்த்தீஸ்வரன் கோவை SNS கல்லூரியிலும், 

எல்.சஞ்ஜித் திண்டுக்கல் NPR கல்லூரியிலும், 

மாணவர்கள் எஸ்.கே.சூரியபிரகாஷ், ஏ.அரிச்செல்வம், எஸ்.ஹேமலதா, எம்.முத்துபிரியா ஆகியோர் மெப்கோ பொறியியல் கல்லூரியிலும் 

மாணவிகள் எஸ்.முத்துபிரியா, வி.வினோதினி ஆகியோர் AAA பொறியியல் கல்லூரியிலும் 

மாணவி எம்.நந்தீஸ்வரி கோவை குமரகுரு கல்லூரியிலும் 

மாணவி எஸ்.நிவேதா, ரத்னம் ஸ்கூல் ஆர்கிடெக்சர் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.


7th A மாணவி ஜெ.மிதுனா ஸ்ரீ மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.


அரசு புதிதாக நான்கு வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளது.


நன்கொடையாளர்கள் விவரம்: 

சமர்த்தனம் அறக்கட்டளை நம் பள்ளிக்குக் கழிவறைக் கட்டிடம் கட்டித் தந்துள்ளது.

1983-1985ஆம் ஆண்டுகளில் 12ஆம் படித்த முன்னாள் மாணவர்கள் நான்கு வகுப்பறைக் கட்டடத்தைச் செப்பனிட்டு வண்ணப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005 கல்வியாண்டில் படித்த முன்னாள் 12th B மாணவர்கள் அலுவலகக் கட்டடத்தைப் பழுதுநீக்கி, உள்பூச்சு அடித்துத் தந்தனர்.

1993-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளிப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் புத்தகங்களை அன்பளிப்பு செய்து நூலகக் கட்டடத்தைச் செப்பனிட்டுத் தந்தனர்.

அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்வில் அணியாகவும் தாழ்வில் துணையாகவும் அமைவது கல்வி. வாழ்வின் சுவையாக அமைவது கல்வி. அனுபவப்புதையலாக அமைவது கல்வி. நம்மை அடையாளம் காட்டுவது கல்வி. அத்தகு கல்வியை நேசி; நாள்தோறும் புதியவற்றை வாசி; வாசித்தவை பற்றி யோசி; புதிய பொருண்மைகளைக் கூட்டு; நாளை உனது என்பதை நிலைநாட்டு.


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்னோற்றான் கொல்எனுஞ் சொல். - என்னும் வகையில் தந்தைக்கும்


ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்- என்னும் வகையில் தாய்க்கும் பெருமை தேடி, பொருள் தேடி, அறம் நாடி, வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்தி, ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன். நன்றி!

வியாழன், 2 ஜனவரி, 2025

சிறுவினா

சிறுவினா

1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்:

தமிழன்னை, அழகு நிறைந்தவள்; 

செம்மொழியாக விளங்குபவள்;

பழமைக்கும் பழமையாய்த் தோன்றியவள்;

குமரிக்கண்டத்தில் நிலையான ஆட்சி செய்தவள்;

பாண்டிய மன்னனின் மகளாக விளங்குபவள்;

திருக்குறளின் பெரும் பெருமைக்கு உரியவள்;

பத்துப்பாட்டாக, எட்டுத்தொகையாக, பதினெண்கீழ்க்கணக்காக, நிலைத்த சிலப்பதிகாரமாக, அழகான மணிமேகலையாக விளங்குபள்.


2.'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' 

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

இளம் பயிர்வகை:

பாட்டி நெல்நாற்று நடவுசெய்தார்.

தாத்தா மாங்கன்று நட்டார்.

அப்பா தென்னம்பிள்ளை நட்டார்.

அம்மா வாழைக்குருத்து நட்டார்.

வயலில் சோளப்பைங்கூழ் வளர்ந்துள்ளது.


3.'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம், அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். 

இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள்

தொழிற்பெயர்கள்


அறிந்தது

அறிதல்


அறியாதது

அறியாமை


புரிந்தது

புரிதல்


புரியாதது

புரியாமை


தெரிந்தது

தெரிதல்


தெரியாதது

தெரியாமை


பிறந்தது

பிறத்தல்


பிறவாதது

பிறவாமை



4.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்கு.

பாடல்

தமிழுக்கு

கடலுக்கு


முத்தமிழ்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்


முச்சங்கம்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகள் தருதல்


மெத்த வணிகலன்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக்கப்பல்கள்


சங்கத்தவர் காக்க

சங்கப் பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்



5.உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்.... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்....உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

நீர் (தன் வரலாறு) -தலைப்புகள்:

அமிழ்தமாக நான்...

ஆற்றலாக நான்...

இலக்கியத்தில் நான்...

உருமாறும் நான்...

சடங்குகளில் நான்...

பல பெயர்களில் நான்...


6.சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்று

நண்பா, எப்படி இருக்கிறாய்?


மின்விசிறிக்காற்று

நலமாக இருக்கிறேன் நண்பா. உழைத்துக் களைத்துவரும் மனிதர்களின் வியர்வையைப் போக்கி மகிழ்ச்சி தருகிறேன் நண்பா. நீ எப்படி இருக்கிறாய்?


சோலைக்காற்று

ஊரெல்லாம் சுற்றிவருகிறேன் நண்பா. மனிதர்கள் சுற்றுச்சூழலைச் மிகவும் மாசுபடுத்தி வருகிறார்கள். எனக்கே மூச்சுமுட்டுகிறது நண்பா!


மின்விசிறிக்காற்று

நாம் மட்டும் இல்லையென்றால், இங்கு யாருமே உயிருடன் வாழமுடியாது. இதனை மனிதர்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ?


சோலைக்காற்று

நம்மை விலைகொடுத்தும் வாங்க முடியாத ஒருகாலம் வரும் நண்பா. அப்போதுதான் இந்த மனிதர்களுக்குப் புத்தி வரும்!


மின்விசிறிக்காற்று

ஆமாம், நண்பா! மீண்டும் சந்திப்போம்! போய் வருகிறேன்.



7.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளை எழுதுக.

தொகைநிலைத் தொடர்கள்:

மல்லிகைப்பூ -இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பூங்கொடி-அன்மொழித்தொகை

ஆடுமாடுகள்-உம்மைத்தொகை

தண்ணீர்த்தொட்டி-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

குடிநீர்-வினைத்தொகை

சுவர்க்கடிகாரம்-ஏழாம் வேற்றுமைத்தொகை 



8.மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர்- தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குதிக்கும் குழந்தைகள் -ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

மழை நின்றவுடன் புலப்படும் காட்சி 

இலைகளில் இருந்து 'சொட் சொட்' என்று நீர் சொட்டுகிறது.

உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது.

தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குழந்தைகள் குதிக்கின்றனர்;

ஓடும்நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.


9.கண்ணே கண்ணுறங்கு 

காலையில் நீயெழும்பு 

மாமழை பேய்கையிலே 

மாம்பூவே கண்ணுறங்கு 

பாடினேன் தாலாட்டு 

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு.-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

தொடர் வகைகள்:

கண்ணே கண்ணுறங்கு! -விளித்தொடர் 

காலையில் நீயெழும்பு!- வேற்றுமைத்தொடர் 

மாமழை பெய்கையிலே- உரிச்சொற்றொடர் 

மாம்பூவே கண்ணுறங்கு! -விளித்தொடர் 

பாடினேன் தாலாட்டு! -வினைமுற்றுத் தொடர் 

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!- அடுக்குத்தொடர்


10."பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ"- வினவுவது ஏன்?

விருந்தோம்பல் -குறுந்தொகை:

இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, 

"பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ?"

என்று குறுந்தொகை அடிகள் பலப்படுத்துகின்றன. 


11.புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர். 

திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. 

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுது.

விருந்தோம்பல் இன்றும்...

இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை; அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை.

வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. 

பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பதுமுதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை 'திருமண ஏற்பாட்டாளர்'களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காணமுடிகிறது.


12.கூத்தனைக் கூத்தன் ஆற்று ப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

கூத்தராற்றுப்படை: 

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்;

இரவில் சேர்ந்து தங்குங்கள்; 

எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்;

சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்;

அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றுரை அடையுங்கள்.

அங்குள்ளவர்களிடம், "நன்னனின் கூத்தர்கள்" என்று சொல்லுங்கள்.

உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். 

அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.


13.வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் 

கோலோடு நின்றான் இரவு -குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

இக்குறளில் 'உவமையணி' பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்: உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்பட வருவது உவமையணி ஆகும்.

அணி விளக்கம்: 

உவமை: வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வது

உவமேயம்: ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது

உவம உருபு: போல 

இக்குறளில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்பட வந்துள்ளமையால், இஃது 'உவமையணி' ஆயிற்று.


14.கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம் 

தவித்தபடி வெளிநீட்டும் கை 

கரையில் கைபேசி படமெடுத்தபடி

_______________________

_______________________

விடை:

தண்ணீர் நிறைந்த குளம் 

தவித்தபடி வெளிநீட்டும் கை 

கரையில் கைபேசி படமெடுத்தபடி

கண்ணோட்டம் இல்லாத காட்சி இது!

மனிதம் இல்லாதவன் மானிடன் அல்லன்!

பொய்மை வாழ்வை விடுத்து 

அன்பாய் வாழ்வோம்; அகிலம் ஆள்வோம்!


15."மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மாளாத காதல் நோயாளன் போல்-உவமை சுட்டும் செய்தி:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 

வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! 

அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையை எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன். 


16.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக. 

ஆனாலும் முன்னேற்றமே!

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! 

அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. 

மனிதர்கள் செய்யும் வேலைகளான மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழ்ந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய கணினிக்கரங்கள் நீள்கின்றன! 

கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதைபாடும் ரோபோக்கள், மனிதனால் இயலாத செயல்களைச் செய்யும் ரோபோக்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக்கடைகள் எனப் புதிதுபுதிதான வழிகளில் மனிதப் பணித்திறனை கூட்டுகின்றது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.


17.மனிதர்களின் மூளையைப் போன்றது செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத்தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்:

வேலைவாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது 

எதிர்காலத்தில் 'ரோபோ'விடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்க போகிறோம். 

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும் அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுப்கொடுத்தும் பேணும் ரோபோக்களை நாம் பார்க்கப்போகிறோம்! 

செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால் மனிதர் செய்ய இயலாத, அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களைச் செய்ய முடியும். மனித முயற்சியில் பேராபத்தை விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய முடியும். 

புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு வழங்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. 

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். 



18.நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது. தந்தை என்னிடம் "இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச்சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி தொட்டியில் இருந்த நீரைக் குடித்தாள். 

இப்பத்தியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

வழுவமைதிகள்

தொடர்கள்


மரபு வழுவமைதி

வாழைத்தோப்பு

குட்டியுடன் நின்றிருந்த மாடு

இலட்சுமி கூப்பிடுகிறாள்


கால வழுவமைதி

இதோ சென்றுவிட்டேன்


திணை வழுவமைதி

அவனை அவிழ்த்து விட்டேன்.


இட வழுவமைதி

நீயும் இவனும் விளையாடுங்கள்



19.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்:

பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர், தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான். 

மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். 

மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார். 

இதை அறிந்த மன்னன் தன்பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான். 

இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார் 


20.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

கற்பதன் இன்றியமையாமை:

அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம்சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே, அதைப்போற்றிக் கற்க வேண்டும். 

கற்றவர்வழி அரசுசெல்லும் என்கிறது சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவுசுரக்கும் என்கிறது திருக்குறள். பூக்களை நாடிச்சென்று தேன்பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச் சென்று அறிவுபெற வேண்டும்.

'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. இவ்வாறு கூறி கற்பதன் இன்றியமையாமையை எடுத்துரைப்பேன்.


21.ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு 

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக் கேட்பியில் (Headphone)கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிக் கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். 

இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

வினாக்கள்:

மொழிபெயர்ப்பு என்றால் என்ன? 

விளக்குவது என்றால் என்ன? 

ஐ.நா.அவையில் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா?

ஐ.நா.அவையில் மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?


22.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும் 

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்களின் வகையைச் சுட்டி விளக்குக.

இக்குறட்பாவில் 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' அமைந்துள்ளது. 

ஆற்றுநீர்ப்பொருள்கோள்:

பாடல்:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும்.

பொருள்:

முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

விளக்கம்:

இக்குறட்பாவின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும்.


23.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. 

ஆடுக செங்கீரை! 

திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.

இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும் 

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும் 

பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும் 

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குலைகளும் அசைந்தாடட்டும் 

உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும் 

தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! 

இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட செங்கீரை ஆடுக. 


24.நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம் பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால் 

காம்புகளின் கழுத்து முறியும் 

தளரப் பிணைத்தால் 

மலர்கள் தரையில் நழுவும் 

வாசலில் மரணம் நிற்பதறிந்தும் 

வருந்தாமல் சிரிக்கும் 

இந்தந் பூவை 

எப்படித் தொடுக்க நான் 

-நவீன கவிதை

கையாலே பூவெடுத்தா -மாரிக்கு 

காம்பழுகிப் போகுமின்னு 

விரலாலே பூவெடுத்தா -மாரிக்கு 

வெம்பி விடுமென்று சொல்லி 

தங்கத் துரட்டி கொண்டு -மாரிக்கு 

தாங்கி மலரெடுத்தார் 


-நாட்டுப்புற பாடல்


விடை:

நவீன கவிதை

நாட்டுப்புறப் பாடல்


மலர் தொடுக்கும்போது, தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்;

இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும்.

ஆதலால், மலரை நுட்பமாகத் தொடுக்க வேண்டும்.

மாரியம்மனுக்குக் கையாலே பூவெடுத்தால் காம்பழுகிப் போகும்; 

விரலாலே பூவெடுத்தா வெம்பி விடும். 

அதனால், அழுக்குப் படாமல் தங்கத் துரட்டிகொண்டு கவனமாக மலரெடுத்தார்.



25.'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.'- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக. 

இன்றளவும் தொடரும் திணைநிலைத் தொழில்கள்:

குறிஞ்சியில் தேனெடுத்தலும் கிழங்கு அதழ்தலும் இன்றளவும் தொடர்கின்றன.

முல்லையில் இன்றளவும் ஆநிரைமேய்த்தல் நடைபெறுகிறது. ஏறுதழுவுதல் மருதநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.

மருதத்தில் நவீன கருவிகளுடன் வேளாண்மை நடைபெறுகிறது.

நெய்தலில் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகிய தொழில்களுடன் பெரிய அளவில் கடல்வணிகமும் தொடர்கிறது.

பாலையில் நடைபெற்றுவந்த வழிப்பறி, இன்று பல இடங்களிலும் பரவியுள்ளது.


26.தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

செம்மொழிக் கலைஞர்:

மனோன்மணியம் சுந்தரனாரின் 'நீராரும் கடலுடுத்த' என்னும் பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாகப் பாடுவதற்கு வழிவகுத்தார். 

கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்ததோடு தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார். 

2010ஆம் ஆண்டு கோவையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியபோது தமிழின் பெருமிதங்களை விளக்கிச் 'செம்மொழியான தமிழ்மொழியாம்' எனத் தொடங்கும் பாடலையும் இயற்றினார். 


27.வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

அமைச்சு:

தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சராவார்.

மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? எந்தச் சூழ்ச்சியும் நிற்க இயலாது. 

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும். 

மேற்கூறிய சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துகின்றன. 


28.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

பகை மாட்சி: 

குறள்:

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 

என்பரியும் ஏதிலான் துப்பு 

பொருள்:

சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்? அவரால் எதிர்கொள்ள இயலாது என்பதாம்.


29.'முதல்மழை விழுந்ததும்' என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு.ப.ரா. கவிபாடுகிறார்?

ஏர் புதிதா?

முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது.

வெள்ளி முளைத்திடுது. 

காளைகளை ஓட்டிக் கடுகிச்செல். 

மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து. 

மண்புரளும்; மழை பொழியும். 

நிலம் சிலிர்க்கும். பிறகு நாற்று நிமிரும்.

எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும். 

இவ்வாறு கு.ப.ராஜகோபாலன் கவி பாடுகிறார்.


30.அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைபா புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

புறப்பொருள் வெண்பாமாலை:

அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். இது வஞ்சித்திணையாகும்.

வஞ்சித்திணை:

 மண் சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.


31."தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்:

இடம்: 

ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பொருள் விளக்கம்:

சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின. 

இதையொட்டி மாநகராட்சியின் சிறப்புக்கூட்டம் ஒன்றை அப்போதைய மாநகரத்தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார். 


32."பகர்வனர் திரிதரு நகரவீதியும்; 

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; 

தூசு துகிரும் ஆரமும் அகிலும்"

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது? 

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக. 

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக. 

ஈ) காருகர்- பொருள் தருக.

உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?

விடை:

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும்.

ஆ) மோனை:

பகர்வனர்

பட்டினும்

இ) எதுகை:

பட்டினும்

கட்டு

ஈ)காருகர்-நெய்பவர்

உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப்பொருட்கள்: சந்தனம், அகில்


33.பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகு சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:

மெய்க்கீர்த்தி:

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது அரசனுடைய ஆட்சிக்காலம், போர்வெற்றி, வரலாறு, வாழ்த்துப்பகுதி, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவற்றை முறைப்படக் குறிப்பிடும். சோழர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் தொடக்கத்தில் இல்லை. முதலாம் இராசராசனுடைய மெய்க்கீர்த்தி சுருக்கமாக உள்ளது. பின்வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரிவாகக் கூறுகின்றன.


34.சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

அரசியல் அறம் 

அறங்கூறவையம் 

போர் அறம் 

கொடை அறம் 

உதவி அறம் 

வாய்மை அறம் 


35.ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக. 

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:

அகவல் ஓசை பெற்று வரும் 

ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

ஆசிரியத்தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.

மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். 

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு. 


36.'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு- சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழல் பேணுதல் (உரைக்குறிப்பு)

சுற்றுச்சூழல் -வரையறை

சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வகைகள் 

நிலம் மாசுபடுதல்

நீர் மாசுபடுதல்

காற்று மாசுபடுதல்

ஒலி மாசுபடுதல்

ஒளி மாசுபடுதல்

அணுக்கதிர்வீச்சு மாசு 

சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் தீமைகள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைப்பதற்கான வழிகள் 

சுற்றுச்சூழல் மாசுபாட்டினைத் தடுப்பதற்கான சட்டங்கள் 

நமது கடமை 


37.வாளித்தண்ணீர், சாயக்குவளை, கரந்தைத் துணி, கட்டைத் தூரிகை- இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

ஞானம்:

சாளரத்தின் கதவுகள், சட்டம் ஆகியவற்றில் தெருப்புழுதி வந்தொட்டும்.

கரையான் மண்வீடு கட்டும். 

அன்று துடைத்தேன்; சாயம் அடித்தேன்; புதுக்கொக்கி பொருத்தினேன். 

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் சாளரத்தைச் சுத்தம் செய்யும் அறப்பணிகள் ஓய்வதில்லை; 

ஓய்ந்திடில் உலகமில்லை. 


38.'சித்தாளின் மனச்சுமைகள் 

செங்கற்கள் அறியாது"- இடஞ்சுட்டிப் பொருள் தருக.

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது:

இடம்: நாகூர்ரூமி எழுதிய 'சித்தாளு' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்: அடுத்த வேளை உணவுக்காகச் சித்தாள் அலுக்காமல் கல் சுமக்கிறாள். அவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். அவளின் மனத்துயரங்களைச் செங்கற்கள் அறியாது.


39.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் 'தர்க்கத்திற்கு அப்பால்' கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால்:

அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. 

அதைக் கொண்டாட விரும்பினார்.

கையில் இருந்த ஒரு ரூபாயில் ஊர் திரும்ப முக்கால் ரூபாய் ஒதுக்கினார். 

இரண்டு அணாவில் காபி அருந்தினார்.

இரண்டனாவைப் பிச்சையிட்டு மகிழ்ந்தார்.

தொடர்வண்டி நிலையத்தில் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லி டிக்கெட் கேட்டார்.

டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது.

பிச்சைப்பாத்திரத்தில் ஒளிவிடும் இரண்டணா என்னுடையது. அது எப்படி என்னுடையதாகும்? நான் கொடுத்துவிட்டேன்; அவன் வாழ்த்திவிட்டான்.

பிச்சைப்பாத்திரத்தில் ஓரணாவைப் போட்டுவிட்டு தான் தர்மம் புரிந்த இரண்டு அணாவை எடுத்துக் கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் திருட்டு அல்லவா? எப்படியும் என்சார்பாக ஓரணா தர்மமாகக் கிடைக்கும் அல்லவா?

இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடம் ஆகவில்லை... அதற்குள் ஓரணாவுக்கு யாசிக்கும்நிலை வந்ததை எண்ணி அவரின் மனம் தர்க்கம் புரிந்தது.


40.எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்? 

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறியவை:

நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்; 

நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; 

உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்;

காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; 

என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். 


41.கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

தற்குறிப்பேற்ற அணி: 

இலக்கணம்: இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றணி எனப்படும்.

எடுத்துக்காட்டு: 

'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 

'வாரல்' என்பனபோல் மறித்துக்கைகாட்ட'

அணிப்பொருத்தம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதில் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, 'இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.